ஸினிமாக் கதை
"தங்கம்! அதோ அப்பா வருகிறார்,
பார்!" என்றான் ராமு.
"மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே" என்றாள் தங்கம்.
கீழே 'படார்' என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.
"அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்" என்றான் ராமு.
"இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது" என்றாள் தங்கம்.
"சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ?" என்று ராமு தத்துவம் பேசினான்.
"மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?" என்றாள் தங்கம்.
"கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ" என்றான் ராமு.
தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது.
"நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்" என்றாள் தங்கம்.
"நானுந்தான்" என்றான் ராமு.
இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது.
கீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், "சனியன்களா? எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா? கதவைத் திறந்து தொலையுங்கோ!" என்று கத்தினார்.
உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் "வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்?" என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள்.
"சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது" என்று ராமு சொன்னான்.
"எப்போ முடியப் போகிறதோ?" என்றாள் தங்கம்.
"அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ?" என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள்.
*****
மேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது.
அப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. "ஆஹா! ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை" என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா? எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா? என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா? எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது?
கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்? பார்க்கலாமே ஒரு கை!
இம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். 'ஸினேரியோ' முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன்.
இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது!
*****
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸினிமாக் கதை - Cinema Kathai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராமு, தங்கம், தான், என்றாள், யுத்தம், அப்பாதுரை, மேல், நான், எனக்கு, என்றான், கொண்டிருந்தேன், எழுதிக், போகிறதோ, கீழே