நற்றிணை - 87. நெய்தல்
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் |
5 |
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. |
தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள்
மலர்ந்து அவற்றின் பராகம் கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து
மிக விழாநிற்கும்; சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய
கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; ஊரின் உள்ளதாய
மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று
பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும்
போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய
காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக்
கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அவ்வின்பமெல்லாம்
விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் !
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது. - நக்கண்ணையார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, நினைந்த, பரதவர், புறத்து, பெருந், சோழர்