நற்றிணை - 64. குறிஞ்சி
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக! அன்னவாக இனையல்- தோழி!- யாம் இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்? மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் |
5 |
வறனுற்று ஆர முருக்கி, பையென மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என் அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென, வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர் வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது |
10 |
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம் காமம் படர் அட வருந்திய நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே! |
தோழீ ! நம் காதலர் எவ்வளவு சிறப்புடையராயினும் அவர்பால் தூதுவிடக் கருதுவதனை இனி நீ ஒழிப்பாயாக!; நம்மைக் கைவிட்டாரென்று அத்தன்மையாக வருந்தாதே கொள்!; நாம் இத்தன்மையேமாகி வருந்தும் வண்ணம் நம்மைத் துறந்த அவர் நட்புத்தான் நமக்கு யாது பயன்படும் ?; மரற்பட்டையின் நாராலே பின்னிய உடையினையுடைய மலையிலிருக்கிற குறவர் தாம் அறியாமையினாலே மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில்; வற்றல் தொடங்கி மிகக் கெடுத்து மெல்லென அந்த மரம் வறிதாமாறு அதன்கண் உள்ள நீர் அறுபட்ட வாயின் வழியே சோர்ந்து வடிந்தாற் போல; என் அறிவும் உளமும் அவரிடத்துச் சென்றொழிந்தன வாதலின் இகுளாய் ! என் உடம்பு உள்ளில் யாதும் இல்லையாய் நின்றது காண்!; இனி அவர் இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாகார் ஆதலின்; காதலர் வாராது அங்கேயே உறைவாராக; இங்குக் காமமும் அதனாலுண்டாகிய நினைவும் நம்மை யொறுத்தலாலே வருந்திய நோய் மிக்க ஏதப்பாட்டினை நம் சுற்றத்தார் காணாதொழிவாராக!
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது. - உலோச்சனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அவர், காதலர், நோய், வாராது, வருந்திய, தூதுவிடக், குறவர், மரம், சோர்ந்து, அறிவும், அறுத்த