நற்றிணை - 379. குறிஞ்சி
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, எரி அகைந்தன்ன வீ ததை இணர வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய தேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி |
5 |
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, தேர் வண் சோழர் குடந்தைவாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, பெயல் உறு நீலம் போன்றன விரலே, பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
10 |
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. |
ஐயனே! புல்லிய தலையையுடைய பெண் குரங்கினது தன் தொழிலையும் முற்றக் கற்றறியாத வலிய குட்டி சிறிய குன்றினிடத்துப் பொருந்திய சிறுகுடியின்கணுள்ள மனைவாயினின்றும் போகாது; எரி கப்பு விட்டாற்போன்ற மலர்கள் நெருங்கிய பூங்கொத்தினையுடைய வேங்கை மரத்தின் தாழ்ந்த கிளைமீது; மறைந்திருந்து நீ காதலித்த கொடிச்சி கையகத்திருந்த தேன்கலந்த இனிய பாலைக் கலத்தொடு வலிந்து பற்றிக்கொண்டு சென்றுவிட்டதனால்; ஓவியர் எழுதுதற் குரிய அழகெல்லாம் கெடும்படி அழுத அவளுடைய கண்கள்; இரவலர்க்குப் பரிசாகத் தேர்களைக் கொடுக்கின்ற வண்மையுடைய சோழமன்னவர்க்குரிய 'குடவாயில்' என்னும் ஊரகத்து மழைபெய்து நிரம்பப் பெற்ற அகழியிலே தண்ணியவாய் மலர்ந்த பெய்யும் மழைநீரை ஏற்ற நீலமலர் போன்றன; அங்ஙனம் பாற்கலம் பறிபட்டதற்கு ஆற்றாது அழகிய வயிற்றிலே பரவ அடித்துக்கொண்டதனால் அவளுடைய விரல்கள் சிவந்து; அமையாது இயங்குகின்ற மேகந்தவழும் கொடு முடிகள் உயர்ந்த பாண்டியனது பொதியில் என்னும் உயர்ந்த பெரிய மலையில் மலர்ந்த கொழுவிய காந்தளின் மலரும் பருவமுகை போன்றன; இத்தகைய இளமைவாய்ந்த அறியாமடமையாள் நின்னை மயக்கினள் என்பதும் நின்காமந் தணிக்கு மென்பதும் எவ்வண்ணமோ? ஒன்று கூறுவாயாக!
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 377 | 378 | 379 | 380 | 381 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போன்றன, மலர்ந்த, என்னும், உயர்ந்த, அவளுடைய, போகாது, அழுத, கொடிச்சி, பொதியில்