நற்றிணை - 355. குறிஞ்சி
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் குலைவாய் தோயும் கொழு மடல் வாழை அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் செம் முக மந்தி ஆரும் நாட! |
5 |
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ என் கண் ஓடி அளிமதி- |
10 |
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! |
புதல்வனைப் பெற்ற நீலமலர் போன்ற கண்ணையுடைய மடந்தை தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப அக் குழந்தை அதன்கணுள்ள பாலைப் பருகுவதுபோல; காந்தளின் பூக்கொத்தொடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின்; அந்த மடலுட்பட்ட அருவி போலப் பெருகிவரும் இனிய நீரைச் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகா நிற்கும் மலைநாடனே!; நட்புடையாளர் கண்ணோட்டமுடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீயிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்செனக் கண்டு வைத்தும் கண் மறுக்கமாட்டாமையின் அதனையுண்டு பின்னும் அவரோடு மேவுவார்; நீ அத்தகைய நட்புடையனா யிருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; அங்ஙனம் கொள்ளாயேயாயினும்; என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்;
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 353 | 354 | 355 | 356 | 357 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தோழி, தோளிலே, இன்பமாகக், உடையள், அல்லது, நின், மடந்தை, மடல், புதல்வன்