நற்றிணை - 307. நெய்தல்
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்; பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்; கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வருமே- தோழி!- வார் மணற் சேர்ப்பன்: |
5 |
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை மா அரை மறைகம் வம்மதி- பானாள், பூ விரி கானல், புணர் குறி வந்து, நம் மெல் இணர் நறும் பொழில் காணா அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே. |
10 |
தோழீ! செல்லுதலில் விருப்பமுடைய குதிரை பூட்டிய நெடிய தேரிலே கட்டிய மணியும் ஒலியாநிற்கும்; பெயர்ந்துபட நடக்கின்ற வீரரும் ஆரவாரிப்பர்; ஆதலின் நெடிய மணற்குன்றினையுடைய சேர்ப்பன்; மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; அவ்வண்ணம் வரினும் இதுகாறும் வாராது நம்மை நடுங்க வைத்துளன் ஆதலின், அவனும் இந் நடுயாமத்து மலர் விரிந்த சோலையில் நாம் புணர்கின்ற குறியிடத்து வந்து மெல்லிய பூங்¢ கொத்தினையுடைய நறிய சோலையின்கண்ணே நம்மை எதிர் காணாதவனாகி; படுகின்ற நீங்குதற்கரிய அல்லலாகிய துன்பத்தையும் நாம் சிறிது பார்ப்போம்; அதனால் நமது மனையருகில் வளைந்த குடமுழாப் போன்ற அடியையுடைய புன்னையின் கரிய அடிமரத்தின் பின்னே சென்று மறைந்து கொள்வோம்; நீ வருவாயாக!
குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - அம்மூவனார் >
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 305 | 306 | 307 | 308 | 309 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நாம், நெடிய, ஆதலின், சென்று, நம்மை, வந்து, தோழி, சேர்ப்பன், குறி, மணியும்