நற்றிணை - 274. பாலை
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
5 |
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் கூறின்றும் உடையரோ மற்றே- வேறுபட்டு இரும் புலி வழங்கும் சோலை, பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? |
கரிய புலி சினங்கொண்டு மாறுபட்டு உலவாநிற்குஞ் சோலையையுடைய பெரிய மலையிடத்துளதாகிய சுரத்தின்கண்ணே சென்ற காதலர்; நெடிய மேகங்கள் மின்னிச் சிறிய துளிகளாகப் பெய்யத் தொடங்கி மிக்க மழை பெய்த பிளப்புக்களையுடைய மலைச்சாரலிலே; உழையாகிய அழகிய பிணைமான் உராய்ந்து கொள்ளுதலாலே; கலன் அணிந்த மடந்தை ஒருத்தியின் பொன்னாற் செய்த கலன்களைப் பரப்பினாற்போல ஒள்ளிய பழங்கள் உதிரப்பெற்ற; குமிழ் மரங்கள் நிரம்பிய குறிய பல வழியையுடைய சுரத்து நெறியிலே; செறிந்த கூந்தலையுடையாய் நீ எம்முடன் வருகின்றனையோ? என்று கூறிய சொல்லையும் உடையர் காண்; ஆதலின் அந்நெறி மழைபெய்தலான் நலனுடையதா யிராநின்றது; அது காரணமாக நீ வருந்தாதே கொள்.
தோழி பருவம் மாறுபட்டது. - காவன் முல்லைப் பூதனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 272 | 273 | 274 | 275 | 276 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புலி, குமிழ்