நற்றிணை - 262. பாலை
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
5 |
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், குவளை நாறும் கூந்தல், தேமொழி இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, 'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. |
10 |
ஈரிய புனத்திலுள்ள கருங்காக்கணத்தின் கண்போன்ற கரிய மலர; வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலிபோல ஆடாநிற்ப; விடாது மழைத்தூவல் பொருந்திய ஊர் முழுதும் உறங்கும் நடுயாமத்து; நடுங்குகின்ற காமநோய் வருத்தஞ் செய்தலாலே நல்ல அழகு குறைந்து; துன்பமிக்க மனத்தளாய்த் தன்னை முனிந்தொறுக்கும் காமநோயால் உழக்(கப்படு)கின்ற; பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய தேமலையும் திரண்ட தண்டையுடைய குவளைமலர் மணம் வீசுங்கூந்தலையும் இனிய சொல்லையுமுடைய இவளை; கைவிட்டும் பொருளின் முயற்சி என்னெஞ்சினை இழுத்தலால்; என்னெஞ்சு 'யான் இவளைப் பிரிகிற்பேன்' என்று கூறாநிற்கும்; அங்ஙனம் கூறுமானால் வறுமையான் வரும் இளிவரவு அம்ம திண்ணமாக மிகக் கொடியதேயாம்;
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது. - பெருந்தலைச் சாத்தனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 260 | 261 | 262 | 263 | 264 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -