நற்றிணை - 230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை, கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் கயற்கணம் கலித்த பொய்கை ஊர! |
5 |
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்; நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல் பரத்தந்தாஅங்கு, இனிதே தெய்ய, நின் காணுங்காலே. |
10 |
நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்!
தோழி வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 228 | 229 | 230 | 231 | 232 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நின்பால், அமிழ்து, அன்ன