நற்றிணை - 193. பாலை
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
5 |
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, யாரும் இல் ஒரு சிறை இருந்து, பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! |
உருக்கிய அரக்குப் போன்ற சிவந்த வட்டமாகிய முகையையுடைய ஈங்கையினது பஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி நின்பாற் கலப்ப; அத் தேன் துளியுடனே புதுவதாக மழை பெய்து நிறைந்த நீர்ததும்பும் புலங்களுட் புகுந்து அவற்றை அளைந்தும்; அங்குத் தங்காமல்; எமது பெரிய அயற்பக்கமெங்கும் சூழ்ந்து வந்து மோதுகின்ற பெரிய குளிர்ச்சியையுடைய வாடையே!; யாம் ஒருபொழுதும் எம் நெஞ்சினுள்ளே நினக்குத் தீதாகிய செயலைக் கருதி யறிந்ததுமில்லையே! அங்ஙனமாக; எம்முடைய பருத்த தோளிலேற்றிய ஒளியையுடைய வளை நெகிழும்படி செய்த எம் காதலர் தாம் ஈட்டுதற்கரிய பொருளீட்டுமாறு உள்ளம் பிணித்தல் காரணமாக அகன்றனராதலினால்; உசாவுந்துணை யாருமில்லாது ஒருபுறத்திருந்து பெரிய துன்பமுறுவேமாகிய எம்மை வருத்தாதே கொள்!;
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 191 | 192 | 193 | 194 | 195 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பெரிய, போன்ற, காதலர், நினக்குத்