நற்றிணை - 177. பாலை
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட, வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் |
5 |
பீலி சூட்டி மணி அணிபவ்வே; பண்டினும் நனி பல அளிப்ப; இனியே வந்தன்று போலும்- தோழி!- நொந்து நொந்து, எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. |
10 |
தோழீ! நம் காதலர் பரந்து பட்ட மிக்க தீ காடு முழுதும் எரிந்து அழித்தலினால் அதனிடையிருந்த மரங்களெல்லாம் தீந்து மகிழ்ச்சி நீங்கலாகிய காட்டகத்து; ஒதுங்கியிருத்தற்கும் நிழலில்லாத கொடிய சுரத்தின்கண்ணே சென்று விட்டனர் என்பது திண்ணம்; அவர் செய்யுஞ் செய்கையின் குறிப்பினால் யான் கண்டறிந்தேன்மன்; யாங்ஙனம் அறிந்தனையென நீ வினவுதியேல் இயம்புவன்கேள் ! ஒழுங்குபட வேலின் இலங்கிய இலையையும் மாசுபோகத் துடையா நிற்பர்; அன்றிக் கிடுகினையும் மயிற்பீலி சூட்டி மணியை அணியாநிற்பர்; மற்றும் முன்போலன்றி என்னையும் பலபடியாகப் பாராட்டி அன்புசெய்யாநிற்பர்; ஆதலின் யான் வருந்தி வருந்தி ஒவியர் எழுதுதற்குத் தகுந்த அழகமைந்த மையுண்ட கண்ணிலே பாவைதோன்றாத வெள்ளம் போன்று கண்ணீர் வடிய அவ் வெள்ளத்தின்கண் விழுந்து நீந்தி யுழலும் நாள்; இன்னே வந்து இறுத்ததுபோலும்; இனி எவ்வாறு ஆற்றுகிற்பேன்;
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 175 | 176 | 177 | 178 | 179 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - யான், வருந்தி, வெள்ளம், நொந்து, சூட்டி, பரந்து