நற்றிணை - 151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் வாரற்கதில்ல- தோழி!- கடுவன், |
5 |
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த செம் முக மந்தி செய்குறி, கருங் கால் பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
10 |
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் குன்ற நாடன் இரவினானே! |
தோழீ ! மிளகுக் கொடி வளர்ந்து படருகின்ற மலைப்பக்கத்திலே களவுப் புணர்ச்சியிற் கடுவனால் முயங்கப்பட்ட சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கு; தனக்குப் புணர்ச்சி வேறுபாட்டானுண்டாகிய குறியைத் தளிர்களைத் தின்னுகின்ற தன் பெரிய சுற்றம் அறியுமே என்று அஞ்சி; கரிய அடியையும் பொன் போல்கின்ற பூங்கொத்தினையுமுடைய வேங்கை மரத்தின் அழகிய கிளைமீது சென்று; ஆழமாகிய சுனைநீரை நோக்கித் தலைகவிழ்ந்திருந்து; தன் மெல்லிய தலையில் முன்பு புணர்ச்சியாலே குலைந்த முச்சிமயிரை அக்குலைவு தோன்றாதபடி திருத்தாநிற்கும் மலைநாடன்; நினது நல்ல நெற்றி பசலையூர்ந்து பசந்து காட்டினும் பெரிய தோளின்வளை நெகிழந்தவாயினும்; கொல்லுகின்ற வலிய கரிய புலியை நுழைதற்கரிய முழையகிருல் மோதிக் கொன்றுபோகட்டு அதனிரத்தம் பூசுதலானே சிவந்த மறுவைக்கொண்ட வெளிய கோட்டினையுடைய களிற்றியானை; மலைமேனின்று வருகின்ற அருவியின் கண்ணே சென்று கழுவாநிற்குஞ் சாரல் நெறியில்; இரவில் எஞ்ஞான்றும் வாரா தொழிவானாக;
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 149 | 150 | 151 | 152 | 153 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - சிவந்த, பெரிய, கரிய, சென்று, பொன், அஞ்சி, அருவியின், சாரல், தோழி, செம்