நற்றிணை - 125.குறிஞ்சி
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி, நல் அரா நடுங்க உரறி, கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும் நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, |
5 |
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று நம்மொடு செல்வர்மன்- தோழி!- மெல்ல வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை, |
10 |
மென் தினை நெடும் போர் புரிமார் துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே. |
தோழீ! தனக்கு வேண்டும் இரையை நாடுகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடி வளைந்த வரிகளையுடைய புற்றுக் கிடைத்தலும்; அதனைப் பெயர்த்து அதன்கண்ணே உறைகின்ற நல்லபாம்பு நடுங்குமாறு முழங்கி இரும்புசெய் கொல்லன் ஊதுகின்ற உலை மூக்கே போல உள்ளே பெருமூச்செறிந்து பறிக்காநிற்கும்; இரவு நடுயாமத்தில் நீயிர் வருதலையறிந்து யாம் அஞ்சுகின்றோமென்று கூறி இனி வரைந்து எய்தும்படி இரந்து கேட்போமாயின்; நமது மலையின்கண்ணே நாள்நீட்டியாது நல்ல நாளில் நம்மை மணம் புரிந்துகொண்டு; வேங்கை மலர் மாலை சூடுகின்ற குறவர் எருதையோட்டிக் கதிர்ப் போரடிக்கும் மருதநில மாந்தர் களம் செப்பஞ் செய்தாற் போன்ற அகன்ற இடத்தையுடைய பசிய கற்பாறையிலே; மெல்லிய தினையைத் துவைத்து அதன் தாளை நெடிய போராக விடும் பொருட்டு; வைகறையிலெழுமாறு துஞ்சுகின்ற களிறு முழங்கி எழுப்பாநிற்கும்; தமது பெரிய மலை நாட்டகத்தே நம்மொடு மெல்லச் செல்வார்காண்!;
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 123 | 124 | 125 | 126 | 127 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - களிறு, அகன்ற, முழங்கி, நம்மொடு, வரைந்து, நாள், யாம், கொல்லன்