நற்றிணை - 103. பாலை
ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
5 |
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
10 |
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. |
என் நெஞ்சமே! புல்லிய காம்பையுடைய சிறிய இலையையுடைய வேப்ப மரத்தின் பெரிய கிளைகளை முறித்துத் தள்ளி மதத்தாற் செருக்குண்ட கடிய சினமும் வலிமையுமுடைய களிற்றியானை; நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்துப் பால் வற்றிய தோலாகிய முலையையுடைய வயிற்றை (நிலத்தின்கண்) பொருத்தி; பசி வருத்துதலானே வருந்தி முடங்கிக் கிடந்த பசிய கண்ணையுடைய செந்நாய்ப் பிணவினது; கெடாத வேட்டைமேற் சென்ற கணவனாகிய செந்நாயேற்றை தான் உண்மையாகத் தன்பிணவை முன்பு புணர்ந்த தன்மையைக் கருதி வருந்தாநிற்கும்; இதுகாறும் புக்கறியாத புதுவதாகிய கொடிய காட்டின்கண்ணே வந்து புகுந்து யாம் வருந்துகின்றோம்; பொருள்செய் முயற்சி தலைக்கீடாகச் செல்வோமென்றாலும், அங்ஙனம் செய்யாது மீண்டு ஊர்புகுவோ மென்றாலும் யான் தடுப்பதொன்றுமில்லையாதலின் அவ்விரண்டனுள் நீ துணிந்தவொன்றனை ஆராய்ந்துரைப்பாயாக !;
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது. - மருதன் இள நாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - எனினும், பால், நின்று, பெரிய