முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 50. வரவுச் சிரப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு - 50. வரவுச் சிரப்புரைத்த பத்து
போர் முற்றுப்பெற்று இல்லம் மீண்ட தலைவன் தான் வந்ததன் சிறப்பினை எடுத்துக் கூறியது.
காரெதிர் காலையாம் ஓவின்று நலிய நொந்துநொந்து உயவும் உள்ளமொடு வம்தனெம் மடந்தைநின் ஏர்தர விரைந்தே. | 491 |
கார்மேகம் இடி முழங்கிய வேளையில் நான் இடைவிடாமல் உன்னை நினைத்து வருந்தினேன். நொந்து நொந்து ஊசலாடும் உள்ளத்தோடு மடந்தாய் நான் வந்தேன். உன் அழகை மீட்டுத் தருவதற்காக வந்தேன்.
நின்னே போலும் மஞ்ஞை ஆலநின் நன்னுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் ந்ன்னுதல் அரிவை காரினும் விரைந்தே. | 492 |
அங்கே மயில் உன்னைப் போல அடுவதைப் பார்த்தேன். முல்லை உன் நெற்றியைப் போல மணப்பதை உணர்ந்தேன். மான் உன்னைப் போல மருண்டு நோக்குவதைப் பார்த்தேன். உன் நினைவு வந்தது. வந்துவிட்டேன். நல்ல நெற்றி கொண்ட அரிவைப் பருவத்தவளே கார் மேகத்தைக் காட்டிலும் விரைவாக வந்துவிட்டேன்.
ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க மாதர் மான்பிணை மறியொடு மறுகக் கார்தொடங் கின்றே காலை நேரிறை முன்கைநின் உள்ளியாம் வரவே. | 493 |
எதிர்த்துப் போரிடும் யானைகள் முழங்கின. அதற்கு எதிர் முழக்கமாக இடியும் முழங்கிற்று. அன்பு உள்ளத்துடன் ஆண்மானும், பெண்மானும், குட்டியும் இணக்கமாக வந்தன. கார் காலம் தொடங்குவதைப் பார்த்தேன். வளைந்த உன் தோளும் கைகளும் என் நினைவுக்கு வந்தன. வந்துவிட்டேன்.
வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லிஅ மலர இன்புறுத் தன்று பொழுதே நின்குறை வாய்த்தனம் திர்கினிப் படரே. | 494 |
வண்டுகள் தேனை உண்டு ஊதின. தவளைகள் தெவிட்டும் ஒலி கேட்டது. புறவு நிலத்தில் முல்லை பூத்துக் கிடந்தது. இவை எனக்கு இன்பத்தை மூட்டின. உன் குறிப்பு வழி வந்துவிட்டேன். இனி, என்னை நினைத்து ஏங்கவேண்டியதில்லை.
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப் புலம்தீர்ந்து இனிய வாயின புறவே பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு முளெயிற்று அரிவையாம் வந்த ஆறே. | 495 |
செம்மண் கொண்ட முல்லை நிலத்தில் பல்வகைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. தனிமை உணர்வு நீங்கும்படி இனிமையாகத் தோன்றுகின்றன. பின்னிய உன் கருங்கூந்தலில் பூ முடித்து நலம் புனைய வந்துவிட்டேன். என்னை நினைக்கும்போதெல்லாம் அழுத உன் நெஞ்சம் எனக்குத் தெரிந்தது. முள் போன்று அழகிய பற்களை உடையவளே நான் வந்துவிட்டேன்.
மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப மாமலி புலம்பக் கார்கலித்து அலைப்பப் பேரமர்க்கண்ணி நின்பிரிந்து உறைநர் தோள்துணை யாக வந்தனர் போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. | 496 |
மான்கள் புதரின் மறைவை நாடுகின்றன. வரகு விளைந்துவிட்டது. மலையே எதிரொலிக்கும்படி கார்மேகம் முழங்குகிறது. பெரிதும் ஆசையோடு பார்க்கும் கண்ணை உடையவளே, உன்னைப் பிரிந்து வாழ்ந்தவர் உன் தோளுக்குத் துணையாக இருக்க வந்துவிட்டார். பூ மொட்டுப் போல விரியும் உன் கூந்தலில் பூக்களை விரும்பிச் சூடிக்கொள்ளலாம்.
குறும்பல் கோதை கொன்றை மலர நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே பேரியல் அரிவைநின் உள்ளிப் போர்வெம் குருசில் வந்த மாறே. | 497 |
குறுகிய கூந்தலைப் போலக் கொன்றை கொத்தாக மலர்ந்ததுள்ளன. உயர்ந்த செம்மண் புற்றுகளிலிருந்து ஈசல்கள் பறக்கின்றன. விலங்குகள் பசி மறக்கும் அளவுக்கு உண்கின்றன. இப்படிப்பட்ட வளத்தை உண்டாக்கிக்கொண்டு கார் காலம் தொடங்கிவிட்டது. பெரிதும் நல்லியல்பை உடைய அரிவை நீ. போரையே விரும்பும் உன் குருசில் உன்னை விரும்பி வந்துவிட்டார்.
தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன வேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென விரைசெலல் நெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே. | 498 |
உன் தோள் அழகு பெற்றுத் திகழ்கிறது. வளையல்கள் கழலாமல் நிற்கின்றன. நீண்ட வரிக்கோடுகளை உடைய உன் ஒளி மிக்க கண்கள் அழகு பெற்றுத் திகழ்கின்றன. யானைப் படையுடன் சென்ற வேந்தன் தன் போர்த் தொழிலை முடித்துக்கொண்டான். உன்கணவன் வரையக நாடன். போருக்குச் சென்ற அவன் தன் உயர்ந்த தேரில் திரும்பி வந்துவிட்டான்.
பிடவம் மலரத் தளவம் நனையக் கார்கவின் கொண்ட கானம் காணின் வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாது வந்தனர் ஆல்நம் காதலர் அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே. | 499 |
பிடவம் பூ பூத்து, தளவம் பூ மொட்டு விட்டுக் கார்காலம் தோன்றுவதைப் பார்த்தால் அவள் பெரிதும் வருந்துவாள் என்று நினைத்து போர்த்தொழிலுக்குச் சென்ற அவர், உன் காதலர், செல்லாமல் திரும்பி வந்துவிட்டார். உன் கொஞ்சு மொழியைக் கேட்க வேளண்டுமாம். உன் அழகைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டுமாம்.
கொன்றைப் பூவின் பசந்த உண்கண் குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத் தொல்கவின் பெற்றன இவட்கே வெல்போர் வியன்நெடும் பாசறை நீடிய வயமான் தோன்றல்நீ வந்த மாறே. | 500 |
கொன்றைப் பூ நிறத்தில் உன் கண் பசந்துபோய் இருந்தது. அது குன்றில் இருக்கும் சுனையில் பூத்திருக்கும் குவளை மலர் போல இப்போது பழைய அழகினைப் பெற்றுத் திகழ்கிறது. வெற்றி கண்ட போர்ப் பாசறையில் நீடித்திருந்த நீ, வெற்றி கண்ட யானைமீது தோன்றும் நீ, வந்ததனால் அழகினைப் பெற்றுத் திகழ்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்த, மாறே, நின்னே, வந்தனர், கார்தொடங், சிறப்ப, விரைந்தே, கின்றே