முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 41. செவிலி கூற்றுப் பத்து
ஐங்குறுநூறு - 41. செவிலி கூற்றுப் பத்து
செவிலி கண்டு மகிழ்ந்து கூறும் செய்திகள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவண னாக நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி நீல்நிற வியலகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே. | 401 |
குட்டி மானை இடையிலே கொண்ட ஆண், பெண் மான்களைப் போல பெற்ற மகனை நடுவில் கிடத்தி அவனும் அவளும் உறங்ஙகுவது இனிய காட்சியாகும். சினமே இல்லாமல் நீல நிற வானத்தில் வாழும் தேவரும் இவர்களைப் போல இன்பம் பெற முடியாது.
புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே. | 402 |
அவள் மகனைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள். அவன் அவள் முதுகைத் தழுவிக்கொண்டு படுத்திருக்கிறான். பாணர் கையில் யாழைத் தழுவியிருப்பது போல இது இனிமையாக உள்ளது. இதில் நல்லதொரு பண்பாடும் இருக்கிறது.
புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலில் இன்னகை பயிற்றிச் சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே. | 403 |
காதலில் புணர்ந்தபோது கண்ட இன்பத்தைப் காட்டிலும் மகனைக் காணும் வேட்கை பெரிதாக இருக்கிறது. அகன்ற பெருஞ் சிறப்பினை உடைத்தாகத் தந்தையின் பெயரைத் தாங்குவதற்காக மகன் பிறந்துள்ளான். அவன் சிரித்துக்கொண்டே சிறுதேர் உருட்டித் தள்ளாடுவதை இருவரும் காணும் இன்பம் பெரிதும் இனிது.
வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத் தானவன் சிறுபுறம் கவையினன் நன்று நறும்பூம் தண்புற அணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. | 404 |
ஒளி வீசும் முகம் கொண்ட அந்த அரிவை மகனுக்கு முலைப்பால் ஊட்டுகிறாள். கணவன் மனைவியின் முதுகைத் தழுவிக்கொண்டிருக்கிறான். பூத்து மணக்கும் முல்லை நிலம் கொண்ட பல குன்றுகள் நிறைந்த பொறை நாட்டுக்கு உரியவன் அவன்.
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல் பூப்பல அணிந்த வைப்பின் புறவணி நாடன் புதல்வன் தாயே. | 405 |
ஒளி வீசும் வண்டிச் சக்கரமாகிய சூரியன் போல மகனைப் பெற்ற தாய் மனைக்கு விளக்கு ஆயிஇனாள். பெருமழை பொழிந்து பூத்துக் குலுங்கும் முல்லை நில நாடன் புதல்வனின் தாய்.
மாதர் உண்கண் மகன்விளை யாடக் காதலித் தழீஇ இனிதிருந் தனனே தாதார் பிரசம் ஊதும் போதார் புறவின் நாடுகிழ வோனே. | 406 |
ஆசை கொள்ளும் கண்ணைக் காட்டி மகன் விளையாடுகிறான். அதனைக் பார்த்துகொண்டே காதலியைத் தழுவியவண்ணம் அவன் இனிதாக இருக்கிறான். பூந்தாத்துவில் அமர்ந்துகொண்டு பிரசம் என்னும் வண்டு பாடிக்கொண்டு ஊதும் முல்லைநில நாட்டுத் தலைவன் அவன்.
நய்ந்த காதலித் தழீஇப் பாணர் நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாடுகிழ வோனே. | 407 |
வெளியில் பாணர் யாழ் இசைக்கின்றனர். அந்த இசையைக் கேட்டுப் பயன் துய்த்துக்கொண்டே அவன் காதலியைத் தழுவி இன்பம் துய்க்கிற்றான். அவன் மென்புலமாகிய முல்லை நிலத்தின் தலைவன்.
பாணர் முல்லை பாடச் சுடரிழை வணுதல் அரிவை முல்லை மலைய இனிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. | 408 |
பாணர் முல்லைப் பண் பாடுகின்றனர். மனைவி தன் ஒளிமுகம் காட்டி முல்லைப் பூ சூடிக்கொண்டிருக்கிறாள். அவன் நெடுந்தகை. பிணக்கு ஏதுமில்லாத கொள்கையோடு அவன் தன் புதல்வனோடு இனிமையாகக் காட்சியளிக்கின்றான்.
புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் இனிது மன்றஅவர் கிடக்கை நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே. | 409 |
புதல்வனின் தந்தை மகனைத் தழுவிக்கொண்டிருக்கிறான். புதல்வனின் தாய் இருவரையும் தழுவிக்கொண்டிருக்கிறாள். இவர்களின் இருப்பு மிக இனிதாக உள்ளது. மிகப் பெரிய பரப்பினை உடைய இந்த உலகமே இந்தக் காட்சிக்கு விலையாக மதிக்கத் தக்கது.
மாலை முன்றில குறுங்கால் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணனது யாழே. | 410 |
மாலை வேளை முற்றத்தில் குற்றுகிய காலை உடைய கட்டில். மனைவி பக்கத்தில் இருக்கிறாள். மகன் மார்பின் மேல் தவழ்கிறான். எல்லாக்கும் மகிழ்ச்சி. சிரிப்பு. இந்த மகிழ்ச்சிப் பொழுதுக்கு பாணன் இசைக்கும் யாழிசை கூட மெலிந்து தோற்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - புதல்வன், வோனே, கிடக்கை, பாணர், நாடுகிழ, வைப்பின், இனிதிருந், முல்லை, தனனே, காதலித், அரிவை, இனிது, மன்றஅவர், கவைஇய, தந்தை, அணிந்த