முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 34. தலைவி இரங்கு பத்து.
ஐங்குறுநூறு - 34. தலைவி இரங்கு பத்து.
தலைவி கலக்கத்துடன் தோழியிடம் சொல்கிறாள்.
அம்ம வாழி தோழி அவிழிணர்க் கருங்கால் மராஅத்து வைகிசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கம்ழும் வெற்பின் இன்னா என்பஅவர் சென்ற ஆறே. | 331 |
அம்ம தோழி! இதனைக் கேள்... கருமையான அடிமரம் கொண்டது மரா மரம். அதன் பூக்கள் வெண்மையானவை. அவை பாலை வழியில் செல்வோர் தங்கி இளைப்பாறும்படி இனிய மணம் வீசும் என்று சொல்கின்றனர். இந்த மணம் என்னை மறக்கச் செய்யும் கொடியது.
அம்ம வாழி தோழி என்னதூஉம் அறநில மன்ற தாமே விறன்மிசைக் குன்றுகெழு கானத்<ட பண்பின் மாக்கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய என்னா தவ்வே. | 332 |
அம்ம தோழி! இதனைக் கேள்... அவர் குன்றுகள் நிறைந்த காட்டில் தன் வீறாப்பு மிகுதியால் சென்றுள்ளார். அக்காட்டில் விலங்கினங்கள் தம் காதலியைப் பிரியாமல் வாழ்கின்றன. காதலியைப் பிரிந்து வந்துள்ள என் காதலரைப் பிரிந்து செல்லாதே என்று சொல்லவில்லையே. அதனால் அவை கொடியவை. அறம் இல்லாதவை.
அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளீனப் பெர்ந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குப் பிந்துறைதி என்னா தவ்வே. | 333 |
அம்ம தோழி! இதனைக் கேள்... அங்கே கற்கள் நிறைந்த காட்டில் பறவைகள் வாழ்கின்றன. “யாம் துணையோடு சேர்ந்து வாழ்கின்றோம். நீ மட்டும் துணையைப் பிரிந்து எதற்காக வாழ்கின்றீர்” என்று சொல்லமுடியாமல் இருக்கின்றனவோ? செல்வதில் அவர் அத்துணை உறுதி பூண்டவராக இருக்கின்றாரோ?
அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்வாய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற ப்ல்லிதல் உண்கண் அழப்பிர்ந் தோரே. | 334 |
அம்ம தோழி! இதனைக் கேள்... சிறிய இலைகளுடன் கூடிய நெல்லி மரங்கள் நிறைந்த பாலைநில வழியில் சென்றுள்ளார். பேதை என் நெஞ்சம் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. பூவிதழ் போன்ற என் கண் அழுகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் சென்ற அவர் நெஞ்சம் கல்லைக் காட்டிலும் இறுக்கமானது.
அம்ம வாழி தோழி நம்வயின் நெய்தோ ரன்ன வெவிய எருவை கற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும் கடுநனி கடிய என்ப நீடி இவன் வருநர் சென்ற ஆறே. | 335 |
அம்ம தோழி! இதனைக் கேள்... கழுகு, இரத்தம் போல் சிவந்த காதுகளைக் கொண்டது. அது கற்களுக்கு இடையில் அழுகி நாற்றமடிக்கும் புலவைத் தேடிப் பார்க்கும் என்கின்றனர். இத்தகைய கொடுமையான காட்டு வழியில் நீண்ட நாள் செல்கிறாரே.
அம்ம வாழி தோழி நம்வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றதில் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன்இறந் தோரே. | 336 |
அம்ம தோழி! இதனைக் கேள்... பிரியாதவர் போல காட்டிக்கொண்டு என்னைப் புணர்ந்தார். பொருள் ஆசை அவரை விடவில்லை. பொருள் தேடிவரக் கோடை காலத்தில் பிரிந்து சென்றுவிட்டார்.
அம்ம வாழி தோழி நம் வயின் மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. | 337 |
அம்ம தோழி! இதனைக் கேள்... என் உடம்போடு உடம்பாக கையால் தழுவி இன்பம் பெறுவதைக் காட்டிலும், பனி பொழியும் குன்றைக் கடந்து சென்று ஈட்டும் பொருள் அவருக்கு இனிமையாக இருக்கிறதே!
அம்ம வாழி தோழி சாரல் இலையில வலர்ந்த ஓங்குநிலை இலவம் மலையுறு தீயில் சுரமுதல் தோன்றும் பிரிவருங் காலையும் பிரிதல் அரிதுவல் லுநர்நம் காத லோரே. | 338 |
அம்ம தோழி! இதனைக் கேள்... ஓங்கி உயர்ந்த இலவ மரம் இலை இல்லாமல் மலர்ந்து மலையில் பற்றி எரியும் தீப் போலத் தோன்றும். அப்படிப்பட்ட காடு வழியில் பிரிவதற்கு உரிய காலம் அல்லாத காலத்திலும் பிரிந்து செல்ல வல்லவர் என் காதலர்.
அம்ம வாழி தொழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பின் நறும்பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்றுகொல் காதலவர் சென்ற நாடே. | 339 |
அம்ம தோழி! இதனைக் கேள்... சிறிய கிளைகளில் வேப்பம்பழம் பழுத்திருக்கும். வௌவால் அதனை உண்ணுவதற்கு விரும்பும். மாலை வேளையில் அவை உண்ண வரும். அப்படி உண்ண வரும் மாலைக் காலம் அவர் சென்ற நாட்டில் இல்லை போலும். அவர் இல்லாத மாலைக் காலம் என்னை வருத்துகிறது.
அம்ம வாழி தொழி காதலர் உள்ளார் கொல்நாம் மருள்உற் றனம்கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் சென்றனர் நம்மே தட்டைத் தீயின் ஊரலர் எழவே. | 340 |
அம்ம தோழி! இதனைக் கேள்... காதலர் நம்மை நினைக்க மாட்டாரோ? அவரை எண்ணும்போது எனக்கு ஒரே மயக்கமாக இருக்கிறது. அவர் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஊர் அலர் தூற்றுகிறது. காய்ந்து கிடக்கும் சோளத்தட்டையில் தீ பற்றி எரிவது போல் அலர் பற்றி எரிகிறது. என்ன செய்வேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அம்ம, வாழி, தோழி, மன்ற, சென்ற, தாமே, தொழி, சென்றனர், நம்மே, நம்வயின், தட்டைத், என்னா, இனிய, பிரிதல், தவ்வே, நீடிய, தோரே