ஞானக்குறள் - 6. அங்கிதாரணை
அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற் பந்தப் பிறப் பறுக்கலாம். |
51 |
முடிவில் அங்கியை எரியும் தீயைப் போல நோக்கினால் நம்மோடு பின்னிக் கிடக்கும் பிறவியை அறுத்துவிடலாம்.
உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற் கள்ள மல மறுக்கலாம். |
52 |
அங்கி உடம்புக்குள்ளும் உடம்புக்கு வெளியிலும் ஊறுமாறு நுரையீரலில் நிறுத்திப் பயிற்சி செய்தால், உடம்புக்கு உள்ளே சேரும் அழுக்குகளைப் போக்கிக் கொள்ளலாம்.
எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற் கரியுங்கன லுருவ மாம். |
53 |
நம் உடல் எரிவது போன்று பாவனைப் பயிற்சி செய்தால் நம் உடம்பு உயிருடன் இருந்துகொண்டே எரிந்த கரியாக மாறும்.
உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில் வெள்ளங்கி தானாம் விரைந்து. |
54 |
உள்ளத்தில் இருக்கும் அங்கி உடலோடு ஒன்றுபட்டு நுரையீரலில் ஊறினால் உடலில் இருக்கும் அங்கி வெண்ணிறச் சுடருடன் எரியும்.
உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி லந்தி யழலுருவ மாம். |
55 |
அங்கியைத் தொப்புகுக்கு உள்ளே பாயும்படிச் செய்தால் அந்தி நேரம் போல அங்கி செந்நிறம் கொள்ளும்.
ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற் பொய்யைந்தும் போகும் புறம். |
56 |
பொறி ஐந்தும், புலன் ஐந்துமாக இருக்கும் உடலுக்குள்ளே உணர்வுகளை நோக்கினால் பொய்மை உணர்வுகள் ஐந்தும் நீங்கிவிடும்.
ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி லும்ப ரொளியாய் விடும். |
57 |
உடலிலுள்ள 51 கூறுகளை கொழுந்து விட்டு எரியும் அழல் போல நோக்கினால் வானுலக ஓளி வெளிப்படும்.
தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில் வேண்டுங் குறை முடிக்கலாம். |
58 |
மனவெழுச்சிச் சுடரை துளங்கி எரிய விடாமல் பார்த்துக்கொண்டால் நமக்கு வேண்டிய குறைகளை நிறைவாக்கிக் கொள்ளலாம்.
உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து. |
59 |
மனவெழுச்சி அங்கி மனக் கொழுவாகிய கருமையத்தில் ஊறினால், மெல்ல மெல்ல வீடுபேறாக அது மாறும்.
ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு. |
60 |
ஒளியுடன் திகழும் சுடரை உணர்வினில் பொருத்திப் பார்த்தால் மன-மாலையாகிய செந்நிற விளக்கு வெள்ளியாக மாறி ஒளிரும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. அங்கிதாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - விரைந்து, கொழுவூறில், நோக்கிற்