ஞானக்குறள் - 5. வாயுதாரணை
மூலத்திற்றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். |
41 |
மூச்சை இழுக்கும் சக்தி மூலாதாரத்தில் தோன்றும். மூச்சை இழுக்கும்போது எட்டு (இருநான்கு) அளவீட்டு மாத்திரை காலம் இழுக்க வேண்டும். காற்று நுரையீரலில் (கால்வெளி) தங்கும் காலம் பன்னிரண்டு அளவீட்டுக்கால மாத்திரையாக இருக்க வேண்டும்.
இடைபிங் கலைகளி ரேசக மாற்றி லடையு மரனா ரருள். |
42 |
இடைக்கலை என்பது மூக்கின் இடப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல். பிங்கலை என்பது மூக்கின் வலப்புறத் துளை வழியாக மூச்சை இழுத்தல் இரேசகம் என்பது மறு-துளை வழியாக மூச்சை வெளிவிடுதல். இவற்றை முறையாக அடைத்து இழுத்து வெளிவிட்டால் சிவன்-அருள் வந்தடையும்.
அங்குலியான் மூடிமுறையா லிரேசிக்கிற் பொங்குமாம் பூரகத்தி னுள். |
43 |
பெருவிரலும் சுண்டுவிரலும் செயல்படுவது அங்குலி. அங்குலியால் மூக்கின் ஒரு துளையை மூடி மூச்சை விட்டு இழுத்தால் உள்ளிழுக்கும் காற்று பூரித்துப் பொங்கும். (முதலில் உள்ளிருக்கும் காற்றை முற்றிலுமாக வெளிவிட்டுவிட்டு, பின்னர் வெளிக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்)
எண்ணிலியூழி யுடம்பா யிரேசிக்கி லுண்ணிலமை பெற்ற துணர்வு. |
44 |
எண்ணல் இல்லாமல் ஊழிக்காலம் மூச்சை வெளியேற்றினால், மூச்சு தானே உள்ளே சென்று உடல் உணர்வு பெறும்.
மயிர்க்கால்வழி யெல்லா மாய்கின்றவாயு வுயிர்ப்பின்றி யுள்ளே பதி. |
45 |
உடலிலுள்ள மயிர்க்கால் வழியெங்கிலும் கூட காற்று உள்நுழைந்து வெளியேறும். குளிர்காற்று உடம்பைத் தாக்கும்மோது உடம்பிலிருந்து சூடு-காற்று வெளியேறும். இந்தக் காற்றை வெளியேறாவண்ணம் உள்ளே இருக்குமாறு பதித்துக்கொள். மூச்சுப்பயிற்சியால் உடம்புக் காற்றைச் சீராக்கிக்கொள்.
இரேசிப்பது போலப்பூரித்து நிற்கிற் றராசுமுனை நாக்கதுவே யாம். |
46 |
மூச்சு விடுவது போலப் பூரித்து நிற்கின்ற தராசுமுனை நாக்கு. நாக்கு வழியாக மூச்சுக்காற்றை வாங்கிப் பயிற்சி செய்துகொள்.
கும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானோக்கிற் றும்பிபோ னிற்குந் தொடர்ந்து. |
47 |
மூச்சை உள் வாங்கும்போது உள் நுழையும் சிவனை (சீவன் = சிவன்) நினைத்துப் பார்த்தால் அது துதிக்கை கொண்ட யானை போல நின்று தொடரும்.
இரேச கபூரக கும்பக மாற்றிற் றராசு போனிற்குந் தலை. |
48 |
மூச்சை வாங்கி, நிறுத்தி, வெளிவிட்டு முறைப்படி பயிற்சி செய்தால், தலை நடுக்கம் இல்லாமல் தராசுமுள் போல நிலைகொள்ளும்.
வாயு வழக்க மறிந்து செறிந் தடங்கி லாயுட் பெருக்க முண்டாம். |
49 |
இப்படி மூச்சுக்காற்றின் போக்கைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்தால், வாழ்நாள் பெருகும்.
போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்குந் தாழ்கின்ற வாயு வடக்கு. |
50 |
வெளியேறும் மூச்சு சிவன் போன்றது. உள்வாங்கும் மூச்சு சீவன். எனவே உள்வாங்கும் மூச்சை அடக்குவதற்குப் பயிற்சி செய். போகின்ற வாயு = வெளியேறும் மூச்சு | தாழ்கின்ற வாயு = உள்வாங்கும் மூச்சு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
5. வாயுதாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் -