முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » ஞானக்குறள் » 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
ஞானக்குறள் - 3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா முற்றுடம்பா லாய வுணர்வு. |
21 |
தன் பட்டறிவால் படிப்பினையைக் கற்றுக்கொள்ளலாம். பிறர் கூறுவனவற்றைக் காதால் கேட்கலாம். வெளியில் உள்ள பொருள்களைக் கண்ணாரக் காணலாம். உடம்பால் நாம் பெற்றிருக்கும் பயன் இந்த உற்றுணர்வுகளே.
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய வுள்ளுடம்பி னாய வொளி. |
22 |
வெள்ளியின் மேல் தங்க முலாம் பூசியது போன்றது, செயல் தாக்கங்களால் நாம் பெறும் பட்டறிவு ஒளி.
சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு என்றுங் கெடாத திது. |
23 |
தானே சென்று, தானே ஐம்புலன்களாலும் நுகர்ந்து, பதிவாக்கி-வெளிப்படுத்தித் திரிந்துகொண்டிருக்கும் உள்ளுடம்பு என்றும் கெடாமல் நிலைத்திருக்கும். | பட்டறிவு நிலையானது | பிறர் தந்த அறிவு மாறக்கூடியது.
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு மொருபயனைக் காட்டு முடம்பு. |
24 |
வருகின்ற பயனை உண்டு அதனால் மகிழ்ந்ததாகி நிற்கின்ற ஒரு பயனை உடம்பானது காட்டும். | பயனைத் துய்ப்பது உடம்பு, உயிர் அன்று.
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் றொடர்பு. |
25 |
நுட்பமாக ஆராய்ந்து பார்ப்போமானால், உடம்போடு நமக்கு உள்ள பழமையான தொடர்புதான் துன்பம் தரும் நம் பிறப்பை அகலச் செய்யும்.
நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு. |
26 |
உயிரானது முந்தைய பிறவியில் செய்த நல்வினை, தீவினை இரண்டையும் இப்பிறவியில் பெற்றிருக்கும் உடம்புதான் துய்த்துக்கொண்டு திரியும். அத்துடன் அடுத்த பிறவிக்கும் விதை போட்டுக்கொண்டிருக்கும்.
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக் கள்ள வுடம்பாகி விடும். |
27 |
உள்ளுடம்பில் வாழ்வன ஒன்பது பொருள்கள். இந்த ஒன்பதும் அதனைப் பெற்றிருக்கும் ஏழைக்குக் கள்ள உடம்பாக இருக்கும் | ஏழை - துய்க்கத் தெரியாத ஏழை ஒருவன் | கள்ள உடம்பு – கண்ணுக்கும் மனத்துக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இயங்கும் உடம்பு.
பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற் கோர்வித்தாகு மெய்க்குள்ளா மாய வுடம்பு. |
28 |
உடம்புக்குள்ளே இருக்கும் உள்ளுடம்பு பொய்மைகள் எல்லாவற்றையும் உணவாக எடுத்துக்கொண்டிருக்கும் விதை.
வாயுவினா லாய வுடம்பின் பயனே யாயுவி னெல்லை யது. |
29 |
காற்றாலான உடம்பின் பயன் உடலுக்குள் காற்று இருக்கும் வரையில் வாழ்வதுதான்.
ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா லன்பதி லொன்றா மரன். |
30 |
உடலில் ஒன்பது வாயில்கள். இவற்றை ஒருசேர அடைத்துவிட்டால் அதுவே அரன். அரன் என்னும் சிவன் அன்பு என்னும் அதில் ஒன்றிக் கிடப்பவன். | அன்பு அதில் | ஒன்பது வாயில் – கண் 2, காது 2, மூக்குத்துளை 2, வாய். எருவாய் (மலவாய்), கருவாய் (கரு சேரும் வாய்).
தேடல் தொடர்பான தகவல்கள்:
3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்) நிலைமை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - முடம்பு, உள்ளுடம்பின்