ஞானக்குறள் - 2. உடம்பின் பயன்
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். |
11 |
உடம்பினை நாம் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் எல்லாமே நம் உடம்பில் இருக்கும் உத்தமனைக் காண்பதே. உத்தமன் – ஒப்புயர்வற்ற இறைவன்.
உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். |
12 |
அந்த உத்தமனை உணர்வால்தான் காணமுடியும். அந்த உணர்வுதான் உடம்பின் பயன். எனவே உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும்.
ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். |
13 |
ஒப்புயர்வற்ற ஒரு பயன் உடம்பைப் பெற்றிருக்கும் பயனே. அது தரும் பயனாக விளங்கும் சங்கரனைச் சார்வோமாக. நம்மிடம் இருக்கும் சங்கரனிடம் நாம் உணர்ந்து சேர்ந்துகொள்வதே.
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. |
14 |
பிறந்துள்ளோம். பேறு பெறவேண்டும். அதுதான் பிறப்பின் பயன். துறப்பதுதான் பிறப்பின் பயன். தூய நெறியில் வாழ்ந்த பின்னர் துறக்க வேண்டும். துறப்பது, எதனை? ஐம்புல ஆசையை.
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னிய தேயாம். |
15 |
துறவு உடம்பால் மட்டுந்தான். உணர்வால் துறக்க இயலாது. உடம்பிலுள்ள உணர்வால் எண்ணிப்பார்த்தே இதனைச் சொல்கிறேன்.
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. |
16 |
மனத்தில் மாசு இல்லா நிலையை அடைந்த உடம்பே ஈசனாகத் தோன்றும்.
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. |
17 |
உடம்பு நேசம் என்னும் பற்றால் ஆனது. அது மெய்ப்பாட்டு ஓசைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும்.
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. |
18 |
உயிருக்கு உறுதி எல்லாமே உடம்பும் அதன் பயனுமே. உயிர் சோரும் அயிர் பீறிட்டுக்கொண்டு வந்தால் ஆதியாகிய இறைவனை விரும்பித் தேடிக்கொள். உடலோ மனமோ சோர்ந்தால் இறைவனைப் பற்றிக்கொள்.
உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. |
19 |
உடம்புக்குள்ளும், அதற்குத் துணைநிற்கும் வெளிப்புறத்திலும் ஈசனை உறுதியாகப் பற்றித் தேடிக்கொள்வதே உடம்பினால் பெறக்கூடிய பயன். எல்லாப் பயனும் இதுவே.
அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். |
20 |
சோற்றால் உருவாகியிருக்கும் உடம்பின் பயனெல்லாம் அதன் முன்னோனாகிய உயிரைக் காட்டுவதே. உயிரோட்டத்தைக் காட்டுவதே உடல். உயிர் என்பது சக்தியாகிய ஆற்றல்..
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. உடம்பின் பயன் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - முடம்பின், உடம்பின்