ஞானக்குறள் - 10. பத்தியுடைமை
பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது. |
91 |
பத்தியோடு உள்ளத்தில் ஆர்வம் கொண்டு அரனை நோக்கினால் அது முத்திக்கு வேர்.
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். |
92 |
பலமுறை சிவன் மீது நேசம் வைத்துச் சிவ நினைவோடு பாடுதல், ஆடுதல் பத்தி.
அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. |
93 |
சிவன் மீதுள்ள அன்பால் அழுதல், கூச்சலிடுதல், தன்னை ஆளும் பெருமானை தன் எரும்பெல்லாம் உருகும்படி நினைத்தல் ஆகியவை பத்தி.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத் தேடு. |
94 |
பூ போட்டுப் பூசனை செய்து, புகழ்ந்து பாடி, மனம் நிறைவோடு, நேசம் கொண்டு ஈசனைத் தேடு.
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. |
95 |
மனக்கண்ணால் பார்த்து, உள்ளத்தில் ஊறும் காதலால் உற்று நோக்கினால், ஈசன் ஒளி நம்மை உண்டு ஆள்கொள்ளும்.
நல்லானப் பூசித்து நாதனென வுருகில் நில்லதோ வீச னிலை. |
96 |
நல்லவனுக்குப் பூசை செய்து ‘நாதன்’ என எண்ணி உள்ளம் உருகினால், ஈசன் நம்மிடம் நிலைகொள்வான்.
அடியார்க் கடியராயன் புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். |
97 |
அடியவர்களுக்கு அடியவராய் அவர்மீது அன்பு கொண்டு உருகி, உள்ளம் படிந்து, அவரோடு உள்ளம் ஒன்றியிருக்கும்படிப் பார்த்துக்கொள்.
ஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீ நினைந்துகொள |
98 |
எல்லா உயிர்களையும் ஈசன் எனக் கருதி, நேசத்தோடு பழகவேண்டும்.
மெய்ம்மயிர் கூரவிருப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. |
99 |
உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் வேர்க்கும்படி விதிர்விதிர்த்து பொய்ம்மைக் கோலம் ஆகும்படி ஈசனைப் போற்று.
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். |
100 |
உள்ள உறுதியோடும் அடக்கத்தோடும் செவ்விய முறையில் அரனை அறிந்துகொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
10. பத்தியுடைமை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - யுள்ளே