14 வயதில் ஆசிய சாம்பியன்
செஸ் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆசிய ஜூனியர் மகளிர் போட்டியில் 'சாம்பியன்' பட்டத்தை வென்று எல்லோரது பார்வையையும் தன் பக்கம் இழுத்து இருப்பவர் மதுரை மாணவி கஸ்தூரி.
மதுரை எஸ்.எஸ். காலனி, பிள்ளையார் கோவில் சன்னதி தெருவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் இவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளை ஆவார்.
கஸ்தூரி மதுரை டால்பின் பள்ளிக்கூடத்தில் 10-வது வகுப்பு படித்து வருகிறார்.
14 வயதான இந்த வீராங்கனை இந்த மாதம் கடந்த 20-ந் தேதி ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த ஆசிய ஜூனியர் மகளிர் (18 வயதுக்குட்பட்டோர்) செஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் 6 நாடுகளைச் சேர்ந்த 16 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 11 சுற்றுகளில் விளையாடிய கஸ்தூரி 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றவர்.
இதற்கு முன்பு மாநில அளவில் நடந்த போட்டிகளில் 3 முறை 100 சதவீதம் புள்ளிகள் பெற்ற கஸ்தூரி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
''வெற்றி பெற வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு காயையும் நகர்த்தினேன். நினைத்தது போல் வெற்றியும் கிடைத்தது.
நான் கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டியிலேயே வெற்றி பெற்று விட்டேன் என்று நினைத்த போது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
அடுத்து வருகின்ற அனைத்துப் போட்டிகளிலும் நல்ல முறையில் விளையாடி வெற்றி பெற வேண்டும். குறிப்பாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதே எனது அடுத்த குறிக்கோளாகும்.
மேலும் எனது பெற்றோர்களும் நல்ல முறையில் விளையாட ஊக்கமளித்து வருகின்றனர்.
நான் பெற்ற இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்க போகிறேன்'' என்றார்.
சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழ்நாடு திரும்பிய கஸ்தூரிக்கு சென்னையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனைகள் ஜெய் கவிதா, நபிலா பர்ஹூன், இசையமுது, நிலவொளி உள்பட பலர் கலந்து கொண்டு கஸ்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
14 வயதில் ஆசிய சாம்பியன், சாம்பியன், கலந்து, கஸ்தூரி, போட்டியில், பட்டம், வெற்றி, எனது, பெற்ற, பெற்று, மதுரை, செஸ், பட்டத்தை, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி