ஜென் கதைகள் - உலகே மாயம்

காட்டின் நடுவே ஒரு சிறு கோயில் இருந்தது. அதில் ஒரு குரு வாழ்ந்து வந்தார். அவர் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வந்தார். மக்கள் நடுவே செல்வதோ அறிவுரை போதனை என்று தடபுடல் செய்வதோ அவரிடம் கிடையாது.
ஒரு சமயம் அவ்வழியாகப் புத்தபிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்களது முகமே அவர்கள் மிகப் பெரிய படிப்பாளிகள் என்பதை உணர்த்தியது.
வந்தவர்களுக்குக் குரு உபதேசித்தார்.
"உங்கள் பெயர்?" என்று கேட்டனர் வந்தவர்கள்.
"என் பெயர் ஹோகன்!' என்றார் குரு.
‘ஞானகுரு ஹோகன் தாங்களா?" "
இல்லை, நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்கு கிடையாது!" என்றார் குரு.
உணவு முடிந்து இரவு அங்கேயே தங்கினர் பிட்சுகள். இரவு குளிராய் இருக்கவே குளிர் காயத் தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது. அதுவே விவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் அந்த விவாதம் சூடுபிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த குரு ஹோகன் மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார்.
பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு புறவாழ்வு பற்றித் திரும்பியது. மனிதனின் புறவாழ்வு வெறும் மாயைதான். அவனது அகவாழ்வுதான் அவனது மரணத்திற்குப் பின்பும் தொடரும். எனவே அதுதான் சாசுவதம்!" என்றார் ஒருவர்.
"அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவியல்தான். கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் உதவாது. ஆகவே அகம் என்பதுதான் மாயை. இப்போது நம் முன் தோன்றும் உலகம் அதில் நாம் தொடரும் வாழ்வு இதுவே உண்மை!" என்றார் வேறொருவர்
"உலகமே ஒரு மனோ ரீதியான மாயைதான்!" என்பது இன்னொருவரின் வாதம்.
"இல்லை. உலகம் என்பது உண்மையானது. புறநிலையின் பிரத்தியட்சம் அது!" என்று தனது கருத்தை வலியுறுத்தினார் ஒருவர்.
"உலகம் உண்மைதான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மைதான். அதையும் தாண்டிய பயணம் தான் மிக முக்கியமானது!" மற்றொருவர் செய்த விவாதம் இப்படி இருந்தது.
கடைசியில் தீர்ப்புக் கேட்டு, அவர்கள் குரு ஹோகன் பக்கம் திரும்பினார்கள். உங்கள் கருத்து என்ன? உலகம் பிரத்திட்சியமான உண்மையா? அல்லது மனோ ரீதியான மாயையா?" கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் குருவை.
ஹோகன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
"அதோ ஒருபெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது பிரத்தியட்சக் கண்கூடா?"
"போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக்காட்சிகள் தான். அந்த வகையில் அந்தப் பெரிய பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்" என்றார் அவர்களில் ஒருவர்.
"அவ்வளவு பெரியகல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?" என்று குருஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் மூட்டிய தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடராயினர்.
நீதி: பற்றுகளை அறுத்தல் என்ற ஞானம் இன்றி வெறும் நூல்களைக் கற்றதனால் புலமைச் செருக்குடன் வாதமிடுபவர் எந்த ஞானமுமில்லாதவரே, நூல்களைக் கல்லாவிடினும் உள்ளத்தால் பற்றுகளை விலக்கியவரே ஞானம் பெறவும் முடியும். அதனை வழங்கவும் முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உலகே மாயம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", குரு, என்றார், ஹோகன், உங்கள், உலகம், மாயைதான், ஒருவர், வெறும், ஞானம், பெரிய, மெல்ல, விவாதம்