கல்யாணச் சோறு
- இம. ராஜசேகரன்
விஷேசத்திற்கு முந்தின நாளே அந்த வீட்டில் ஒலிபெருக்கியின் சத்தம் ஒலித்தது. மாலை நேரமாகையால் சோகப்பாடலை போட்டிருந்தார்கள். தூங்கப்போன மூர்த்திக்கு 'பேன்' காற்று வீசியதுபோல் இதமாயிருந்தது. 'என்ன இனிமையான குரல் வளம்; அதற்கேற்ற இசை மெட்டு'.
"அம்மா ஊருக்குள்ளே என்ன விஷேசம். ரேடியாப் படிக்கிது".
"டேலே, ஊர்ப்பய புள்ளையெல்லாம் எலும்புக் கறியும், சோத்துக்கும் ஏமாந்து போயி எப்ப பந்தி வப்பானுகண்ணு ஏங்கிப் போய்க் கிடக்குது. ஊரே அந்தச்சாமி வீட்டுக் கல்யாணத்தப்பத்திதான். இந்த ஒரு மாசமா பேசிக்கிட்டிருக்கு. படிச்சும் வௌரம் தெரியாத மாதிரி பேசுறியே. நாளைக்கு காலைல கல்யாணம். ஆத்திலேயே குளிச்சிட்டு வந்திரு. எல்லாரும் கல்யாணத்திற்கு போயிட்டு வந்துருவம்".
"ஏம்மா இந்தக் காலத்திலே போயி, சாமி வீடு சும்மா வீடுன்னு. அவுகளும் நம்மள மாதிரி மனுஷதானம்மா. அவுக மட்டும் எப்படி சாமி ஆவாக".
"நீ எப்பவுமே தலைகீழாத்தாண்டா பேசுவே".
"அப்புறம் என்னம்மா. நம்ம மட்டும் கல்யாணத்துக்குப் போயி சாப்புட்டு வர்றோமே, அவங்க என்னிக்காவது வந்து, நம்ம வீட்டுக் கல்யாணத்திலே சாப்பிட்டுருக்காகளா. நம்ம மட்டும் போயி அங்க சாப்பிடணும். கிடக்கிற வேலையெல்லாம் நம்ம வூட்டு வேலை மாதிரி இழுத்துப் போட்டுச் செய்யணும். அவங்க மட்டும் காசு கொடுத்து, கலர் குடித்துவிட்டு, வெத்தலை, பாக்குகூடப் போடாமல் போயிறாங்க! நம்ம மேல நெசமாவே பாசம் இருந்தா பந்தியிலே வந்து சாப்பிடலாம்ல. எல்லாமே நடிப்பும்மா. அவனவன் இந்த ரேஞ்சோட இருந்துக்கிறான். நாம் தான் நாய் மாதிரி அவன் வாசப்படியிலேயே இன்னும் போய்கெடக்கிறோம்.
"உனக்கு என்னடா விவரம் தெரியாத பய. அந்தக் காலத்திலே அவுகளெல்லாம் எப்பிடி இருந்தாக தெரியுமா. கல்யாணப் பொண்ணையே வருஷக் கணக்காப் பார்க்க முடியாது. அவுகளும் பார்க்கவிடமாட்டாக. அவுங்க வூட்ல எல்லாம் நிறைஞ்சு கிடக்கும். அவ்வளவு வசதி அவுங்களுக்குன்னு தனியா எடம் ஒதுக்கி, எல்லா வசதியும் செஞ்சவச்சிருக்காங்க பாத்தியா. அந்தக் காலம் தொட்டு இப்ப வரைக்கும் அவங்க வச்சது தான் வேதமா இருக்கு. இப்பவும் பார்த்தியா ஏதாவது ஒண்ணுனா நானூறு வீடு இருக்கிற நம்மலெல்லாம் அந்த நாலு வீட்டுக்காரனத்தானே தேடிப்போறோம்".
"அம்மா அந்த நாலு வீட்டுக்காரனைத் தேடிப்போனது நம்ம தப்பு. நம்ம நானூறு வீட்ல இல்லாத கூட்டு அந்த நாலு வீட்ல இருக்கு. அப்பவே வசதியாயிருந்தாங்கன்னு சொல்றியே. நீங்க கொஞ்சம் யோசித்துப் பார்க்கணும். அவன் அப்பவே விவரமா இருந்து, நம்மளத் தொட்டா தோஷம்ன்னு சொல்லி, தனியாய்ப் போயி அவனுக்குத் தேவையானதை செஞ்சுக்கிட்டான். இப்ப அவன் நல்லாயிருக்காண்ணா இருக்கத்தான் செய்வான். தலையை விட்டுபுட்டு வாலைப் புடிச்சா வழுக்கத்தான் செய்யும்."
"அடப்போடா நீயும், உம் பேச்சும். அவங்க என்னமோ நம்ம வூட்ல சாப்புடலேங்கிறியே சாப்புடாட்டா போயிட்டுப் போறாக. அவுங்க வந்துட்டுப் போனா நம்ம வீட்டுக்கு ஒரு மரியாதைடா. உனக்கு அதெல்லாம் எங்க புரியப்போகுது".
"எதும்மா மரியாதைங்கிற. சாப்பிடாமப்போனா போயிட்டுப் போறாகங்கிறியே. கல்யாணம்னா என்னம்மா. அதுக்கு எதுக்குமா நாலுபேர் நாலு திசையிலிருந்து வர்றாக.
வாழ்த்துறதுக்குத்தானே. வர்றவகள உபசரிக்கிறது தாம்மா கல்யாணம். அவுங்க நல்லா சாப்புட்றாங்க பாரு அதுதான் திருப்தி. அத விட்டுட்டு, வருவாங்களாம். மொய் செய்வாங்களாம். உட்காரக்கூட செய்யாம போயிருவாகளாம். இதுக்கு எதுக்கு வரணும்".
"உனக்கு என்னடா என்னயென்னத்தையோ பேசுற. போயி பேசாமத் தூங்கு" என்று கோபமாய்ச் சொன்னாள்.
"நமக்குன்னு சுய மரியாதை கூட வேணாமா" ன்னு அண்ணனிடம் கூடக் கேட்டுப் பார்த்திட்டான்.
"நமக்குன்னு என்ன சுயமரியாதை வேண்டிக் கெடக்குது. நம்ம என்னதான் கூட்டமாயிருந்தாலும் அவனுக்கு இருக்கும் அடிமையாக்குற புத்தி நமக்கு இருக்காதுடா. நம்ம பயலுகளெல்லாம் முரட்டுக்காரங்க. எல்லாம் நாலு காசப் பாத்துட்டா கறித்துண்டமுனு சோயா மாவதின்னுற பயலுக. நம்ம சாதி எப்பவும் அடிமைதாண்டா. சாதிங்கறது அழிக்க முடியாத ஒண்ணா ஆகிப்போச்சு. உன்னாலேயோ என்னாலயோ மட்டும் அழிக்க முடியுமா? ஆனா, அது அதுக்குன்னு ஒரு நெறிமுறை வச்சுக்கணும். அவனவன் மனசாட்சிதான்டா அவனவன் ஜாதி".
முன்னாடி ஒருமுறை சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.
பாயை விரித்துப் படுத்தான்.
ராத்திரியில் பாதி நேரம் வரை தூங்காததால், காலை நேரத்தில் தூக்கம் அசத்தியது. அப்படியே தூங்கிப் போனான். கண் திறந்தபோது,
சாமி வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் விட்டு, வீடு திரும்பியிருந்தாள் அவன் அம்மா.
"என்னம்மா கல்யாணத்துக்கு போயிட்டு வந்து பழைய சோத்தை ஊத்திச் சாப்பிடுறே" சிரித்துக் கொண்டே கேட்டான்.
"அதுக்கு என்னடா இப்போ. சாமி வீட்டுச் சொந்தக்காரங்க எவ்வளவு பேரு வந்திருக்காங்க. அவங்களெல்லாம் முதல்ல சாப்புடட்டும். நம்ம போயி அவங்க மத்தியிலே சகுணம் புடிச்சாப்ல உக்கார முடியுமா. நாளைக்குப் போனா ஏதோ பழக பட்டை கெடந்தா ஊத்துவாக. சாவகாசமா உக்காந்து சாப்புட்டு வரலாம்" - சொல்லிக் கொண்டிருந்தவள், வீட்டிற்குள் நுழையும் இளைய மகன் பாண்டியைப் பார்த்து "என்னடாக் கண்ணு" என்றாள்.
"அம்மா நீ வந்தப்புறம் அங்க நடந்துச்சுல்ல பந்தி அதிலே சாப்பிடப்போனேம்மா. அப்போ அந்தச் சாமிவுக வந்து என்னைய எந்திரிக்கச் சொல்லி, போகச் சொல்லிட்டாரும்மா. ஆட்டுக்கறி ஒண்ணுகூட திங்கலமா". ஒழுகிய ஊழை மூக்கை "ம்ஹ்" என்ற உறிஞ்சிக் கொண்ட வண்ணம் ஏங்கி ஏங்கி அழுதான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கல்யாணச் சோறு, ", நம்ம, போயி, அவங்க, நாலு, மட்டும், வந்து, அவன், மாதிரி, அம்மா, சாமி, அந்த, என்ன, என்னடா, அவுங்க, உனக்கு, அவனவன், வீட்டுக், வீடு, என்னம்மா, Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்