முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. நான்கு நண்பர்கள் - 2
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. நான்கு நண்பர்கள் - 2
எலி வளையின் உள்ளேயிருந்தபடியே, நீ யார்? ஏன் என்னை அழைத்தாய்?’ என்று கேட்டது.
“நான் ஒரு புறாவரசனின் பின்னால் வந்தேன். உன்னுடைய பெருந்தன்மையையும், நற்குணத்தை யும், நட்புத் திறத்தையும், மரியாதைப் பண்பையும் பாசவுறவையும் கண்டு மனம் வசப்பட்டேன். நானும் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், அதற்காகவே அழைத்தேன்’ என்று காகம் கூறியது.
அதற்கு அந்த அறிவுமிகுந்த எலி, நானோ உன்னால் தின்னப்படும் இரைகளில் ஒன்றாயுள்ளவன். நீயோ என்னைப் போன்ற எலிகளைக் கொன்று தின்னும் இனத்தைச் சேர்ந்தவன். நானும் நீயும் நட்பாய் இருப்பது எனக்குப் பேராபத்தாய் முடியுமே யல்லாமல் வேறல்ல. நரியோடு நட்புக் கொண்டாடிய மான், வலையில் சிக்கிக் கொண்டது போல், எனக்குத் தீங்கு வரக் கூடும், ஆகையால் உன்னுடன் நண்பனாயிருக்க நான் விரும்பவில்லை’ என்று பதில் சொல்லிவிட்டது.
அதைக் கேட்ட காகம் மனங்கரையும்படியாக இவ்வாறு கூறியது:
ஐயோ! எலியே, நீ என்ன சொல்லி விட்டாய். என் குணம் தெரியாமல் இவ்வாறு பேசி விட்டாய். உன்னைக் கொன்று தின்றால் ஒரு வேளைப் பசி ட எனக்குத் தீராதே. ஆனால், நட்பாக இருந்தால் எத்தனையோ காலம் நாம் நன்றாக வாழலாமே!
‘அந்தப் புறாவரசனிடம் உள்ளது போல் என்னிடமும் நீ நட்பாக இருந்தால், என் உயிருள்ள அளவும் நான் நட்பு மாறாமல் இருப்பேன். இது உண்மை. சூதாகச் சொல்லும் வார்த்தை அல்ல.
‘அலை வீசிக் கொண்டிருக்கும் கடல் பரப்பிலே, எரியும் கொள்ளிக்கட்டை போய் நுழைந்தால் கடல் நீரா வற்றி விடும்? கொள்ளித் தீ தானே அணையும். அறிவுள்ள மேலோரிடம் கோபம் பற்றி எரியாது. அவர்கள் கடலைப் போன்ற தங்கள் விரிந்த நெஞ்சால் அந்தக் கோபத் தீயை அணைத்து விடுவார்கள்’ என்று இலவமரத்துக் காகம் எடுத்துக் கூறியது.
‘உங்கள் காக்கைப் புத்தியே ஒரு நிலையில்லாதது. உன்னை நண்பனாகச் சேர்ப்பதால், என்னுடைய செயல்கள் ஒன்றும் ஆகப்போவதில்லை. மேலும் அவை கெட்டுத்தான் போகும். நானும் நீயும் எவ்வாறு கலந்து வாழ முடியும்?
கப்பல் கடலில்தான் ஒடும். அதைத் தரையில் ஒட்ட முடியாது. தேர் பூமியின் மீது தான் ஓடும். அதைக் கடலில் ஒட்டிச் செல்லமுடியாது. சேரக் கூடாதவை சேர்ந்தால் அந்த உறவு திடமாக நிலைப்பதில்லை. கெட்டுப் போவதே தவிர அந்தச் சேர்க்கையால் ஆகும் சிறப்பு எதுவும் இல்லை.
பெண்களிடத்தும், ஒழுக்கம் கெட்டவர்களிடத்தும் நியாயத்தை எதிர்பார்த்தும், தீயவர்களிடம் ஒரு நன்மையைச் செய்து கொள்ள எதிர்பார்த்தும், நட்புக் கொண்டு அதனால் இன்பம் அடைந்தவர்கள் உலகத்தில் இல்லவே இல்லை. பாம்பை மடியில் கட்டிக் கொண்டவர்களைப் போல், அவர்களுக்கு எந்தக் கணமும் துன்பம் தாம் ஏற்படும் என்று எலி காகத்தின் உறவை மறுத்துரைத்தது.
எலியே, நீ சொல்வது உண்மைதான். தீயவர்களின் உறவு ஒருக்காலும் சேர்க்கக் கூடாதுதான். ஆனால், என்னை ஒரு காக்கை என்பதற்காக ஒதுக்கித் தள்ளி விடாதே. நான் உனக்கு என்றும் உயிர் நண்பனாவேன். நீ என் நட்பை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விட்டால், நான் என் உயிரை விட்டு விடுவேன், சத்தியம்!
செல்வத்தினால் மனிதர்களுக்குள் நட்பு உண்டாகும். ஒன்றாகக் கூடித் தின்பதால், பறவைகளுக்குள் நட்பு உண்டாகும். கோப புத்தியால் துட்டர் களுக்குள்ளே நட்பு உண்டாகி விடும்.
மென்மையான ஊசி காந்தத்தைக் கண்டவுடன் போய் ஒட்டிக் கொள்ளும். இரும்புத் துண்டுகளோ, நெருப்பில் கலந்து வருத்தப்பட்ட பின்பே ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். அது போல, கண்டவுடனே நல்ல வர்கள் நண்பர்களாகி விடுவார்கள். தண்டனையடைந்த பின் ஒன்று சேர்ந்து புல்லர்கள் நண்பர்களாயிருப்பார்கள்.
உன் அறிவின் உயர்வையும், உன் நெஞ்சில் உள்ள நட்பின் தன்மையையும், அந்த நட்பை நீ பாது காக்கும் முறையையும் கண்டு, உன் நட்பைப் பெற எண்ணியே நான் உன்னிடம் வந்தேன். என் நிலைமையை நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அன்பு ஒன்றுக்காகவே நான் உன்னை நாடி வந்திருக்கிறேன்’ என்று காக்கை கூறியது.
இவ்வளவு உறுதிமொழிகள் கூறியபின், அந்த எலி, இந்த இலவமரத்துக் காகத்தை நம்பிவிட்டது. நம்பிக்கை பிறந்தவுடன் அதன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது. மலர்ந்த முகத்துடன் அது காகத்தை நோக்கி, நன்று, இனி நாம் என்றும் நண்பர்களாய் இருப்போம்” என்று ஆதரவான பதிலை யளித்தது.
அன்று முதல், காகம் தனக்குக் கிடைக்கும் மானிறைச்சி முதலியவற்றில் எலிக்கும் ஒரு பங்கு கொண்டு வந்து கொடுத்து வந்தது. இப்படியாய்ப் பல நாட்கள் அவை ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்து வந்தன.
ஒரு நாள் காகம் எலியிடம் வந்து, இந்தக் காட்டில் இரை எளிதாகக் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஆமை ஒன்று இருக்கிறது. அதனிடம் சென் றால் குளத்தில் இருக்கும் மீன்களையெல்லாம் நமக்கு உண்ணத் தந்திடும். நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு நலமாக இருக்கலாம் என்று கூறியது.
சரி, நானும் அங்கு வருகிறேன். எனக்கு அங்கே ஒரு வேலையிருக்கிறது. அதை நான் அங்கு சென்ற பின் உனக்குத் தெரிவிக்கிறேன்” என்று எலி சொல்லியது.
உடனே காகம், தன் கால்களால் எலியைத் தூக்கிக் கொண்டு ஆமையிருக்கும் குளத்தை நோக் கிப் பறந்தது.
அங்கு போய்ச் சேர்ந்ததும், ஆமை வெளியில் வந்து, காகத்தை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தது. பேசிக் கொண்டிருக்கும் போது, காகத்தை நோக்கி ஆமை, இந்த எலி யார்?’ என்று கேட்டது.
ஆமை நண்பனே, நாம் முன் வருந்திச் செய்த தவத்தால் நமக்கு அருமையாகக் கிடைத்த நண்பன் இந்த எலி. இதன் பெருமையை யாராலும் சொல்ல முடியாது” என்று சொல்லிப் புறா அரசன் வேடன் வலையில் அகப்பட்டுக் கொண்டதையும் அதை எலி மீட்டதையும் விளக்கமாகக் கூறியது.
அத்தனையும் கேட்ட ஆமை, ஆ! இவன் உண்மையான நண்பனே!” என்று சொல்லி அன்பு பாராட்டி, காகத்திற்கும் எலிக்கும் விருந்து வைத்து அவற்றோடு மகிழ்ச்சியாக இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. நான்கு நண்பர்கள் - 2 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - நான், காகம், கூறியது, நட்பு, காகத்தை, கொண்டு, நானும், அந்த, வந்து, அங்கு, போல், எனக்குத், நாம்