பல்சுவைக் கதைகள் - மனோ
மனோவிற்கு மனசு படபடவென்று அடித்துக் கொண்டது.
ஆசிரியர் ஆரோக்கியசாமி பையன்களின் புத்தகப்பையை ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார்.
அவர் தேடிக் கொண்டிருந்த அவரின் மணிபர்ஸ் மனோவின் பைக்குள் பத்திரமாக இருந்தது.
மனோ ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். மனோ பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பையன்.
தன் வகுப்பில் படிக்கும் பையன்களின் பென்சில், ரப்பர் என்று விளையாட்டாக எடுக்க ஆரம்பித்தான் மனோ.
சின்ன சின்ன பொருட்களை அவ்வப்போது எடுப்பது என்பது அவனுக்கு அன்றாட வழக்கமாகிவிட்டது.
ஆனால் இன்றுதான் முதன்முறையாக வகுப்பு ஆசிரியரின் மணிப்பர்ஸைத் திருடிவிட்டான்.
இவ்வளவு சீக்கிரமாகவா தேட ஆரம்பிப்பார். அதுவும் இப்படி ஒவ்வொரு பையாகவா தேடுவார்?
இன்னும் சிறிது நேரத்தில் அகப்பட்டு விடுவான். திருடியது இவன் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பையன்கள் இவனை திருடன் திருடன் என்று அழைப்பார்கள்.
பள்ளிக்கூடத்தை விட்டு விலக்கி விடுவார்கள். அப்பா, அம்மா இவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
மனோ என்று ஆசிரியர் குரல் கேட்டது.
அடுத்த வினாடி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான்.
ஆரோக்கியசாமி அவன் பையில் கையை விட்டார். மணிபர்ஸ் கையில் அகப்பட்டது. வெளியே எடுத்தார். அதே பர்ஸ். பிரித்துப் பார்த்தார் பணம் அப்படியே இருந்தது.
மனோ தலையைக் குனிந்தபடி நின்று கொண்டிருந்தான்.
பையன்கள் எல்லோரும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
"என்ன மிஸ்டர் ஆரோக்கியம் பர்ஸ் கிடைச்சிருச்சா?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினார் ஆசிரியர். வாசலில் ஹெட்மாஸ்டர் நின்று கொண்டிருந்தார்.
"ஆமா சார் கிடைச்சிடுச்சி சார்"
"யார் எடுத்தது? நிக்கறானே இவந்தான் எடுத்தானா?"
"இல்லை சார். நாந்தான் பிரேயருக்கு வர்றதுக்கு முன்னாடி பைக்குள்ள வைக்க சொன்னேன். பத்திரமா இருக்கும்னு அவங்கிட்டே கொடுத்தது மறந்திடுச்சு."
"என்ன இது முட்டாள்தனமா பேசறீங்க. கொஞ்சங்கூட பொறுப்பு இல்லாம. யோசனை பண்ணி சொல்றது இல்லையா? ஒரு ஆசிரியரே இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா எப்படி? நாங்கூட நம்ம மாணவர்களைப் பத்தி தப்பா நினைச்சிட்டேன்" என்றார் கோபமாக தலைமை ஆசிரியர்.
"சாரி சார்"
"என்னது சாரி... பொடவை"
"எஸ் ஸார்......." என்றார் ஆரோக்கியசாமி தலையை குனிந்தபடி.
கோபமாக அங்கிருந்து சென்றார் ஹெட்மாஸ்டர்.
வகுப்பில் பையன்கள் ஆசிரியரைப் பரிதாபமாகப் பார்த்தனர்.
மனோவின் கண்களில் கண்ணீர் முட்டியது.
"மணிப்பர்சை நாந்தானே உங்கிட்ட குடுத்தேன் சொல்லக் கூடாது? போய் உட்கார் போ" என்றார் ஆரோக்கியசாமி.
மனோ தன் இடத்திற்குப் போனான்.
தலைமை ஆசிரியரிடம் தன்னால் இத்தனை பையன்கள் முன்னிலையில் ஆசிரியர் அவமானப் பட்டதை நினைத்துப் பார்த்தான்.
மனோவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது.
சிறிது நேரத்தில் கடைசி மணி அடித்தது. பையன்கள் முண்டியடித்து வகுப்பைவிட்டு வெளியேறினர்.
எல்லோருக்கும் பின்னால் ஆசிரியர் ஆரோக்கியம் மெல்ல நடந்தார்.
மனோ அவர் பின்னாலேயே சென்றான்.
அடுத்த வினாடி மனோ ஆசிரியரின் முன்னால் சென்று அவர் கால்களைப் பிடித்துக் கொண்டான். ஆரோக்கியம் அவனை தூக்கி நிறுத்தினார்.
மனோ தேம்பித் தேம்பி அழுதான். "தெரியாம செஞ்சிட்டேன் சார். என்ன மன்னிச்சிருங்க. இனிமேல் செய்யமாட்டேன்" என்று அழுகையோடு அழுகையாகச் சொன்னான்.
"இனிமே எந்த தப்பும் நீ செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே அவனை மார்புடன் ரே அணைத்துக் கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனோ - பல்சுவைக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - ", ஆசிரியர், பையன்கள், என்ன, ஆரோக்கியசாமி, என்றார், சார், ஆரோக்கியம், வகுப்பில், அவர்