மௌரியப் பேரரசு
பேரரசின் அனைத்துவகை வருவாய்களையும் வசூலிக்கும் துறையான வருவாய்த்துறையின் தலைவர் சம்ஹர்த்தர் என்று அழைக்கப்பட்டார். நிலவரி, நீர்ப்பாசனவரி, சுங்கவரி, வணிகவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி, புல்வெளிக்கான வரி, தொழில் வரி, நீதிமன்றங்களில் விதிக்கப்படும் தண்டனைக்கீடான கட்டணம் என பல்வகை வருவாய் அரசுக்குக் கிடைத்தது. பொதுவாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரது அவை மற்றும் அவரது குடும்பச்செலவுகள், ராணுவம், அரசுப் பணியாளர்கள், பொதுப் பணிகள், ஏழைகளுக்கு நிவாரணம், சமயம் சார்ந்த செலவுகள் என்பன அரசாங்க செலவினங்களில் குறிப்பிடத்தக்கவை.
ரானுவம்
நன்கு சீரமைக்கப்பட்டிருந்த மௌரிய ராணுவத்துக்கு தலைவராக சேனாபதி இருந்தார். வீரர்களுக்கு ஊதியம் பணமாக வழங்கப்பட்டது. ராணுவத்தின் பல்வேறு நிலையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கான ஊதிய விகிதம் குறித்து கௌடில்யர் கூறுகிறார். கிரேக்க நாட்டு அறிஞர் பிளினி என்பவரது கூற்றுப்படி மௌரியரது படையில் ஆறு லட்சம் காலாட்படை வீரர்களும், முப்பதாயிரம் குதிரைப்படை வீரர்களும், ஒன்பதாயிரம் யானைகளும், எட்டாயிரம் தேர்களும் இருந்தன என்பது தெரிகிறது. இந்த நான்கு பிரிவுகளைத் தவிர, கடற்படை மற்றும் போக்குவரத்து பிரிவுகளும் ராணுவத்தில் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் அத்யட்சகர்கள் என்ற மேற்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் அடங்கிய படைவாரியம் படைநிர்வாகத்தை மேற்கொண்டதாக மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.
வாணிகம் மற்றும் தொழில்துறை
இத்துறையின் அலுவலர்கள் அத்யட்சகர்கள் எனப்பட்டனர். பொருட்களின் சில்லரை மற்றும் மொத்த விலைகளைக் கட்டுப்படுத்துவதும் தொடர்ந்து பொருட்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதும் இந்த துறையின் பொறுப்பாகும். எடைகள், அளவுகள் ஆகியன முறைப்படுத்தப்பட்டன. சுங்க வரிகளை விதிப்பதும் அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்துவதும் இதன் ஏனைய பணிகளாகும்.
நீதி மற்றும் காவல் துறை நிர்வாகம்
உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டதை கௌடில்யர் விவரித்துள்ளார். தலைநகரிலிருந்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தர்மாதிகாரி என்று அழைக்கப்பட்டார். மாகாணத் தலைநகரங்களிலும், மாவட்டங்களிலும் அமாத்தியர்கள் தலைமையிலான துணைநீதி மன்றங்கள் இருந்தன. அபராதம் விதித்தல், சிறைவாசம், உறுப்புகளை சிதைத்தல், மரண தண்டனை போன்ற பல்வேறு தண்டனை முறைகள் வழக்கிலிருந்தன. உண்மையை வரவழைக்க சித்ரவதை செய்யும் வழக்கமும் இருந்தது. முக்கிய மையங்களில் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறைகள், சிறை அதிகாரிகள் பற்றி கௌடில்யரது நூலும் அசோகரது கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. முறைகேடாக சிறைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அசோகர் தர்மமகாமாத்திரர்களுக்கு ஆணையிட்டார். தண்டனைகள் குறைக்கப்பட்டது பற்றியும் அசோகரது கல்வெட்டுகள் கூறுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மௌரியப் பேரரசு , வரலாறு, இருந்தன, இந்திய, மௌரியப், பேரரசு, அத்யட்சகர்கள், அசோகரது, வீரர்களும், தண்டனை, காவல், அழைக்கப்பட்டார், இந்தியா, வருவாய், நிர்வாகம், பல்வேறு, கௌடில்யர்