முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வில்லியம் சேக்ஸ்பியர் (கி.பி.1550 - கி.பி.1604)
வில்லியம் சேக்ஸ்பியர் (கி.பி.1550 - கி.பி.1604)
தன்னேரிலாத ஆங்கில நாடக வேந்தன் - பாவேந்தன் வில்லியம் சேக்ஸ்பியர், இப்பூவுலகில் வாழ்ந்த மாபெரும் எழுத்து வேந்தன் என்று பொதுவாகப் போற்றப்படுபவர். இவருடைய அடையாளம் குறித்து எவ்வளவோ வாக்கு வாதங்கள் (இது பற்றி பின்னர் விவாதிப்போம்) நடை பெறுகின்றன. எனினும், இந்த மேதையின் படைப்பாற்றலையும், சாதனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
சேக்ஸ்பியர், குறைந்தது 36 நாடகங்கள் இயற்றினார். இவற்றில் ஹாம்லெட் (Hamlet), மாக்பெத் (Macbeth), லியர் மன்னன் (King Lear), ஜூலியஸ் சீசர் (Julius Caeser), ஒத்தல்லோ (Othello), போன்ற அழியாக் காவியங்களும் அடங்கும். இவை தவிர, அற்புதமான 154 ஈரேழ்வரிப் பாக்களையும் (Sonnets) சில நெடிய கவிதைகளையும் யாத்துள்ளார். இவருடைய நுண்மாண் நுழைபுலம், வித்தகம், ஏற்புடைய புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கால், இவருடைய பெயர் இந்தப் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பெறமாலிருப்பது விந்தையாகத் தோன்றலாம். சேக்ஸ்பியருக்கு நான் இத்துணை கீழ் வரிசையில் இடங்கொடுத்திருக்கிறேன் என்றால் அவருடைய கலைத் திறம்பாடுகளை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தினால் அன்று. மாறாக, பொதுவாக, இலக்கிய மற்றும் கலையுலகப் பிரமுகர்கள், மனித வரலாற்றில் குறைந்த அளவு செல்வாக்கினையே செலுத்தி வந்துள்ளார்கள் என்பதே காரணம்.
மானுட முயற்சியின் வேறு பல துறைகளில், நிகழ்வுகளில் பெரும்பாலும் செல்வாக்குச் செலுத்துவது ஒரு சமயத் தலைவரின், விஞ்ஞானியின், அரசியல்வாதியின், நாடாய்வாளரின் அல்லது தத்துவ அறிஞரின் நடவடிக்கைகள் தாம். எடுத்துக்காட்டாக, அறிவியல் முன்னேற்றங்களினால், பொருளாதார - அரசியல் விவகாரங்களில் மகத்தான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவை, சமய நம்பிக்கைகளையும், தத்துவ மனப்பான்மைகளையும், கலை வளர்ச்சிகளையுங் கூட வெகுவாகப் பாதித்திருக்கின்றன.
எனினும், புகழ் பெற்ற ஓவியர் ஒருவர், அவர் பிந்தி வரும் ஓவியர்களின் படைப்பில் எத்துணை பேரளவுச் செல்வாக்குப் பெற்றிருப்பினும், இசை மற்றும் இலக்கிய வளர்ச்சியில் மிகக் குறைந்த செல்வாக்கையே கொண்டிருக்க முடியும். அறிவியல், நாடாய்வு போன்ற மனித முயற்சியின் பிற துறைகளில் எந்தவிதச் செல்வாக்கையும் கொண்டிருக்க இயலாது. கவிஞர்கள், நாடகாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பற்றியும் இதையே கூற முடியும். பொதுவாக, கலையுலகவாதிகள், கலையில் மட்டுமே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். அவர்கள் பணியாற்றும் குறிப்பிட்ட துறையில் மட்டுமே அவர்களின் செல்வாக்குச் செல்லுபடியாகும். இந்தக் காரணத்தினால் தான், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் எவரும் முதல் 20 இடங்களில் சேர்க்கப்படவில்லை. விரல் விட்டு எண்ணி விடக்கூடிய மிகச் சிலர் மட்டுமே இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அப்படியானால், ஒருசில கலையுலகப் பிரமுகர்களுக்கு மட்டும் இப்பட்டியலில் இடங்கொடுத்திருப்பதேன்? நமது பொதுவான பண்பானது, சமூகவியல் அடிப்படையில் பார்த்தால் கலையினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். சமுதாயத்தை இணைக்கும் பசை உருவாவதற்குக் கலை உதவுகிறது. வரலாற்றில் இதுவரை இருந்து வந்துள்ள மனித நாகரிகம் ஒவ்வொன்றிலும் கலை ஓர் அம்சமாக இருந்து வருவது வெறும் தற்செயல் நிகழ்ச்சி அன்று.
மேலும், கலைகளைத் துய்ப்பது, ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் ஒரு நேரடியான பங்குப் பணியாற்றுகிறது. அதாவது, ஒரு தனி மனிதன், தனது நேரத்தில் ஒரு இசையைக் கேட்பதற்கு நாம் செலவிடும் நேரம் நமது மற்ற நடவடிக்கைகளில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையென்றாலும், அந்த நேரம் நமது வாழ்வில் முக்கியமற்ற நேரத்தின் ஒரு பகுதியேயாகும். ஆயினும், கலை நமது பிற நடவடிக்கைகளைப் பாதிக்கவே செய்கிறது. ஒரு வகையில், நமது வாழ்க்கை முழுவதையும் பாதிக்கிறது. கலை, நம்மை நமது ஆன்மாவுடன் இணைக்கிறது; நமது ஆழமான உணர்ச்சிகளை அது வெளிப்படுத்துகிறது; நமக்காக அந்த உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது.
சில நேர்வுகளில், கலைப்படைப்புகள், ஏறத்தாழ வெளிப்படையான தத்துவப் பொருளை உள்ளடக்கியிருக்கின்றன. இத்தத்துவம், மற்றத் துறைகளில் நமது மனப் போக்குகளில் தாக்கம் ஏற்படுத்தலாம். இசை, ஓவியம் போன்றவற்றை விட இலக்கியப் படைப்புகளில் இது அடிக்கடி நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, ரோமியோ ஜூலியத் நாடகத்தில் (அங்கம் III, காட்சி 1) இளவரசன் வாய்வழியாக, கொலையிற் கொடியரைக் கொல்லற்க; அவர் நாண நன்னயம் செய்திடுக என்று ஷேக்ஸ்பியர் கூறும் போது, ஒரு தத்துவக் கோட்பாட்டை அவர் தெரிவிக்கிறார். இந்தக் கோட்பாடு, மோனாலிசா ஓவியத்தைப் பார்ப்பதை விட அதிக அளவில் அரசியல் மனப்போக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இலக்கியவாதிகள் அனைவரிலும் தலைசிறந்தவராக சேக்ஸ்பியர் விளங்குகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. சாசர், வர்ஜில், ஹோமர் ஆகியோரின் படைப்புகளை, அவை பள்ளிப் பாட நூல்களாக இருந்தால் மட்டுமே, ஒருசிலர் இன்று படிக்கின்றனர். ஆனால், சேக்ஸ்பியர் நாடகங்கள் இன்று நடந்தாலும், அரங்கம், நிரம்பி வழிகிறது. சேக்ஸ்பியரின் சொல்லாட்சித் திறன் ஈடு இணையற்றது. அவரது நாடகங்களைப் பார்க்காதவர்களும், படிக்காதவர்களுங்கூட அவரது நாடகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவதை அடிக்கடி காண்கிறோம். மேலும், அவரது செல்வாக்கு இன்றிருந்து நாளை மறையும் ஒரு போலி பகட்டு அன்று என்பது தெளிவு, அவரது படைப்புகள், நானூறாண்டுகள் வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மகிழ்வூட்டியிருக்கின்றன. அவை ஏற்கெனவே காலத்தை வென்று நிற்கின்றன. எனவே, சேக்ஸ்பியரின் படைப்புகளுக்கும் இன்னும் பல நூற்றாண்டுகள் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று கருதலாம்.
சேக்ஸ்பியரின் முக்கியத்துவத்தைக் கணிக்கும் போது, அவர் வாழ்ந்திராவிட்டால், அவரது நாடகங்கள் ஒரு போதும் எழுதப்பட்டிருக்கமாட்டா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (ஒவ்வொரு கலையுலக அல்லது இலக்கியப் பிரமுகர் பற்றியும் இவ்வாறு கூறலாம். ஆனால், சிறிய கலைஞர்களின் செல்வாக்கினைக் கணிப்பதில் இது முக்கியத்துவம் பெறாது).
சேக்ஸ்பியர் ஆங்கில மொழியிலேயே எழுதினார். எனினும், அவர் உலகப் புகழ் பெற்றார். ஆங்கிலம் உலகளாவிய மொழியாக இல்லாவிட்டால், வேறெந்த மொழியையும் விட அது ஓர் உலகளாவிய மொழியின் நிலைக்கு மிக நெருக்கமாக இருந்தது என்பதில் ஐயமில்லை. மேலும், சேக்ஸ்பியரின் படைப்புகள் மிகப் பெருமளவில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. அவை ஏராளமான நாடுகளில் படிக்கப்பட்டன. மேடைகளில் நடிக்கப்பட்டன.
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை இலக்கியத் திறனாய்வாளர்கள் இகழ்ந்துரைப்பதுண்டு. சேக்ஸ்பியருக்கு அந்த நிலைமை ஏற்படவில்லை. அவருடைய படைப்புகள், இலக்கிய அறிஞர்களால் ஒரு மனதாகப் பாராட்டப் பெற்றன. பல தலைமுறை நாடகாசிரியர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்தார்கள்; ஆராய்ந்தார்கள். அவருடைய இலக்கிய மாண்புகளைத் தாங்களும் முன்மாதிரியாகக் கொள்ள முயன்றார்கள். மற்ற எழுத்தாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற செல்வாக்கும், உலகம் முழுவதும் அவருக்கிருந்த பெருஞ் செல்வாக்கும் ஒன்று சேர்ந்து, இந்த நூலில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு வில்லியம் சேக்ஸ்பியரைத் தகுதியுடையவராக்கியுள்ளன. எனினும், வில்லியம் சேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் யார் என்பது பற்றிய ஒரு வாக்குவாதம் நெடுங்காலமாகவே நிலவி வருகிறது.
ஸ்டிராப்ஃபோர்ட்-ஆன்-ஆவோனில் 1564 இல் பிறந்து அங்கு 1616 இல் காலமான அதே வில்லியம் சேக்ஸ்பியர்தான் அவர் என்பதை பழைய மரபாளர்களின் கருத்து (இந்த நூலின் முதல் பதிப்பில் இந்தக் கருத்தையே ஆராயாமல் நானும் ஏற்றுக் கொண்டிருந்தேன்). எனினும், ஐயுறவுவாதிகளின் வாதங்களையும், பழைய மரபாளர்களின் எதிர்வாதங்களையும் கவனமாக ஆராய்ந்தபோது, ஐயுறவுவாதிகள் தங்கள் வாதங்களை அதிகத் திறம்பட எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் கருத்தை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார்கள் என்பைதயும் கண்டு கொண்டேன்.
வில்லியம் சேக்ஸ்பியர் என்பது 17 ஆம் ஆக்ஸ்ஃபோர்ட் கோமகன் எட்வர்ட்-டி-வேர் தமக்கு வைத்துக் கொண்ட ஒரு புனை பெயர் என்பதைப் பெரும்பாலான சான்றுகள் வலியுறுத்துகின்றன. வில்லியம் சேக்ஸ்பியர் என்பவர் ஒரு பணக்கார வணிகர். அவர் வணிகம் நிமித்தம் லண்டன் சென்றார். நாடகங்கள் எழுதுவதற்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
சேக்ஸ்பியர் தம் காலத்து நாடகங்களுக்காகப் பொது மக்களின் பெரும்போற்றுதலைப் பெற்றவர். சேக்ஸ்பியருக்காக ஒரு நிழல் எழுத்தாளாராக (Ghost-Writer) டி-வேர் இருந்தார் என்று நான் கூறவில்லை. சேக்ஸ்பியர், அவர் தம் வாழ்நாளில், ஓர் எழுத்தாளராகக் கருதப்படவில்லை. அவர், தம்மை ஓர் எழுத்தாளராக ஒரு போதும் கூறிக் கொள்ளவுமில்லை! தலைசிறந்த நாடகாசிரியர் வில்லியம் சேக்ஸ்பியராக இருந்தவர் சேக்ஸ்பியர்தான் என்னும் கோட்பாடு 1623 வரையில் - எழவில்லை! அந்த ஆண்டில் தான் சேக்ஸ்பியர் நாடகங்களின் முதலாவது இருமடிப்பதிப்பு (Folio Edition) வெளியானது. அதன் பதிப்பாசிரியர்கள், அதில் ஒரு முன்னுரையைச் சேர்த்திருந்தார்கள். அந்த முன்னுரையில் தான், அந்த நாடகங்களை எழுதிய ஆசிரியர் ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்- ஆவோனைச் சேர்ந்தவர் இல்லை என்பதற்கான வலுவான குறிப்புகள் (மறைமுகமாக) இடம் பெற்றிருந்தன.
நாடகாசிரியர், சேக்ஸ்பியராக இருக்க முடியாது என்பதற்பகான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு மரபுமுறைக் கூற்றினை முதலில் இங்கு குறிப்பிட வேண்டும். இந்தக் கூற்று வருமாறு.
சேக்ஸ்பியரின் தந்தை ஜான் ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அவர் நொடித்துப் போய் வறுமையில் வீழ்ந்தார். சிறுவன் வில்லியம் மிகுந்த வறுமைச் சூழலில் வளர்ந்தான். எனினும், அவன், ஸ்டிராட் ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் சேர்ந்தான்; அங்கு அவன் லத்தீனும், இலக்கியமும் கற்றான்.
வில்லியம் தனது 18 ஆம் வயதில் ஆனிஹத்தாவே என்ற இளம் பெண்ணுடன் நட்புக் கொண்டான்; அவள் கருவுற்றாள். அவளையே முறைப்படி மணந்து கொண்டான். சில மாதங்களில், அவளுக்குக் குழந்தை பிறந்தது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அவள் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்! ஆகவே, 21 வயதை எட்டுவதற்கு முன்பே, வில்லியம், மனைவியையும் மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியிருந்தது.
அடுத்த ஆறு ஆண்டுகளில் அவரது நடவடிக்கைகள் பற்றியோ, அவர் வாழ்ந்த இடங்கள் குறித்தோ, எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், 1590 களில், லண்டனில் ஒரு நடிகர் குழுவின் ஓர் உறுப்பினராக அவர் மீண்டும் தோன்றுகிறார். அவர் ஒரு வெற்றிகரமான நடிகராக விளங்கினார்! ஆனால், விரைவிலேயே நாடகங்களும், கவிதைகளும் எழுதுவதில் அவர் ஈடுபாடு கொண்டார். 1598-ம் வாக்கில் வாழ்கின்ற அல்லது இறந்துபோன ஆங்கில எழுத்தாளர்கள் அனைவரிலும் தலைசிறந்த எழுத்தாளர் என்று போற்றப்பட்டார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். இந்தக் கால அளவின்போது அவர் குறைந்தது 36 நாடகங்களை எழுதினார். 154 ஈரேழ் வரிப் பாடல்களை இயற்றினார். ஒரு சில ஆண்டுகளில் அவர் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்டிராட்ஃபோர்டில் 1597 இல் புதிய மாளிகை (New Palace) என்னும் விலையுயர்ந்த இல்லத்தை வாங்கினார். அவருடைய குடும்பத்தினர் எப்போதும் ஸ்டிராட் ஃபோர்டிலேயே இருந்து வந்தனர். அவர்களுக்கு அவர் தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.
அவர் எழுதிய சிறந்த நாடகங்களில் எதனையும் அவர் வெளியிடாமலிருந்தது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், இந்நாடகங்களின் வாணிகப் பெருமதியை நன்கறிந்திருந்த, பழி பாவங்களுக்கு அஞ்சாத அச்சக உரிமையாளர்கள், இந்நாடகங்களில் பாதியைத் திருட்டுத்தனமாக அச்சிட்டனர். இந்தத் திருட்டுப் பதிப்புகளை பெரும்பாலும் திரித்துரைப்பனவாக இருந்தபோதிலும், சேக்ஸ்பியர் அவற்றில் தலையிட முயலவில்லை.
சேக்ஸ்பியர் தமது 48 வயதில் (1612) எழுதுவதிலிருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஸ்டிராட் ஃபோர்ட் திரும்பி வந்து மனைவி மக்களுடன் வாழலானார். அவர் அங்கு 1616 ஏப்ரல் மாதம் இறந்தார். அவர் தேவாலய முற்றத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். இவருடையதெனக் கருதப்படும் கல்லறையின் மேலுள்ள கல்லில் இவருடைய பெயர் பொறிக்கப்படவில்லை. ஆயினும், சிறிது காலத்திற்குப் பிறகு, அருகிலிருந்த சுவரில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது; தாம் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் ஒரு விருப்புறுதி ஆவணம் (Will) எழுதினார். அதில் அவர் தமது சொத்துக்களைத் தம் மூத்த மகள் சூசன்னாவுக்கு (Susanna) உடைமையாக்கியிருந்தார். சூசன்னாவும், அவளது சந்ததியினரும், அவர்களில் கடைக் குட்டி, 1670இல் இறக்கும் வரையில், புதிய மாளிகையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.
மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றில் பெரும் பகுதி பழைய மரபாளர்களின் கற்பனை என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஸ்டிராட்ஃபோர்ட் இலக்கணப் பள்ளியில் எப்போதேனும் சேக்ஸ்பியர் ஒரு மாணவனாக இருந்ததற்கு உண்மையான சான்று எதுவுமில்லை. இந்தப் புகழ்பெற்ற நாடகாசிரியரின் வகுப்புத் தோழனாகவோ ஆசிரியராகவோ தாம் இருந்ததாக எந்த ஒரு மாணவனும் அல்லது ஆசிரியரும் கூறிக் கொண்டதில்லை. அதேபோன்று, அவர் எந்தச் சமயத்திலும், ஒரு நடிகராக இருந்ததற்கான தெளிவான சான்றுகளும் ஏதுமில்லை.
இருப்பினும் இந்த அதிகாரப் பூர்வமான வரலாறு முதல் நோக்கில் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆயினும், இதனை, நுணுகி ஆராயும்போது பல இடர்பாடுகள் எழுகின்றன.
முதலாவது சிக்கல், சேக்ஸ்பியரின் வாழ்க்கை பற்றி அற்ப அளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகும். அவரைப் போன்ற பெரும் புகழ்பெற்ற ஒரு மனிதரைப் பற்றி நாம் எதிர்பார்ப்பதைவிட மிகமிகக் குறைவான செய்திகளே கிடைத்துள்ளன. இந்த விந்தையான செய்திப் பற்றாக்குறைக்குக் காரணங்கூறும் சிலர், அவர் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்; எனவே, அவர் எழுதிய மற்றும் அவர் பற்றிய ஆவணங்களில் பெரும்பாலானவை அழிந்து போயிருக்கலாம், என்கின்றனர். ஆனால், இந்தக் கூற்று, சேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தைப் பற்றி நமக்குக் கிடைத்ததுள்ள ஏராளமான தகவல்களைக் குறைத்து மதிப்பிடுகிறது என்றே கூற வேண்டும்.
அவர் ஒரு பின்தங்கிய நாட்டிலோ, ஒரு காட்டுமிராண்டிக் காலத்திலோ வாழ்ந்திருக்கவில்லை. அவர் வாழ்ந்தது இங்கிலாந்தில்; அதுவும் எலிசபெத் அரசியின் ஆட்சிக் காலத்தில். அது, அச்சகங்கள் இருந்த காலம்; எழுது பொருள்கள் மிகப் பெருமளவில் கிடைத்து வந்த காலம்; ஏராளமானோர் எழுதப்படிக்கத் தெரிந்திருந்த காலம். அந்தக் காலத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மூல ஆவணங்கள் காலத்தை வென்று இன்றும் வாழ்கின்றனவே!
வில்லியம் சேக்ஸ்பியரிடம் கொண்ட பேரார்வம் காரணமாக ஒரு பெரிய அறிஞர்கள் படை, அந்தத் தகவல்களை அலசி ஆராய்வதில் மூன்று தலைமுறைக் காலம் செலவிட்டு, உலகின் மிகப் பெரும் இலக்கிய மேதை பற்றிச் செய்திகளைத் தேடியது. அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலனாக, அவர் காலத்திய மற்றப் பெருங்கவிஞர்கள் குறித்த இலட்சக் கணக்கான சான்றுகளைக் கண்டுபிடித்தனர். வேறு பல சிறு கவிஞர்கள் பற்றிய செய்திகளையும் கண்டறிந்தனர். ஆனால், சேக்ஸ்பியர் பற்றி அவர்கள் கண்டுபிடித்ததெல்லாம் அவர் குறித்த 36 அற்பக் குறிப்புகள் மட்டுமே. இவற்றில் ஒன்றுகூட இவரை ஒரு கவிஞராக அல்லது ஒரு நாடகாசிரியராக குறிப்பிடவில்லை!
சேக்ஸ்பியரின் வாழ்க்கையைவிட ஃபிரான்சிஸ் பேக்கன், எலிசபெத் அரசி, பென் ஜான்சன், எட்மண்ட் ஸ்பென்சர் ஆகியோரின் வாழ்க்கை குறித்து மிக அதிகமான தகவல்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. ஜான் லைலி (John Lyly) போன்ற ஒரு சிறிய கவிஞரைப் பற்றிக்கூட சேக்ஸ்பியரைவிட அதிகமான செய்திகள் கிடைத்திருக்கின்றன.
இங்கு, வரலாற்றின் முன்னணி அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் (Isaac Newton) குறித்துக் குறிப்பிட வேண்டும். நியூட்டனும் சேக்ஸ்பியரைப்போல், இங்கிலாந்தின் நகரிலிருந்து வந்தவர்தான். இவரைப் பற்றிய பல்லாயிரக் கணக்கான மூல ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. உண்மையைக் கூறின், நியூட்டன், சேக்ஸ்பியருக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர். அதே சமயம், சேக்ஸ்பியர் பிறந்த அதே ஆண்டில் பிறந்த கலீலியோ (Galileo), சேக்ஸ்பியருக்கு 89 ஆண்டுகளுக்கு முன் (1313) பிறந்த பொக்காக்சியோ (Boccaccio) ஆகியோரைப் பற்றிக் கூட சேக்ஸ்பியரைவிட மிகுதியான, விவரமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இந்தச் சிக்கலுடன் தொடர்புடைய இன்னொரு உண்மையும் உண்டு. அதாவது, இந்த நாடக மேதை லண்டனில் வாழ்ந்த காலத்தில், யாருக்கும் தெரியாமலேயே வாழ்ந்தார். சேக்ஸ்பியர் லண்டனில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் (1592-1612) வசித்தார் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்த 20 ஆண்டு காலத்தில், பெரிய நடிகரும், நாடகாசிரியருமான இவரை எவரும் நேரில் பார்த்ததற்கான சான்று ஒன்றுகூட இல்லை. புகழ்பெற்ற நடிகர் ரிச்சர்ட் பர்பாஜையோ (Richard Burbage), நாடகாசிரியர் பென் ஜான்சனையோ (Ben Johnson), பார்த்தவர் அல்லது சந்தித்தவர்கள், அதனை ஒரு பெருமைக்குரிய நிகழ்ச்சியாகக் குறித்து வைத்துள்ளனர். ஆனால், சேக்ஸ்பியர் லண்டனில் புகழ் பெற்று விளங்கிய 20 ஆண்டுகளில் எவரேனும் அவரை மேடையில் பார்த்திருந்தால், அல்லது அவரோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தால், அல்லது அவரோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தால், அல்லது அவரை ஒரு விருந்திலோ, வீதியிலோ சந்தித்திருந்தால், அதனை அவர்கள் பெருமைக்குரிய நிகழ்ச்சியாகக் குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மேற்சொன்ன உண்மைகளுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் காரணம் இதுதான்: வில்லியம் சேக்ஸ்பியர் என்பது இந்த எழுத்தாளர் சூடிக் கொண்ட புனைபெயரேயாகும். தன்னுடைய அடையாளத்தை இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு அவர் இந்தப் புனைபெயரை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவே, இந்த எழுத்தாளரைச் சந்தித்தவர்கள், தாங்கள் தலைசிறந்த நாடகாசிரியர் வில்லியம் சேக்ஸ்பியரைச் சந்திக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. (புகழ் பெற்ற ஓர் எழுத்தாளர், அதிக நாட்கள் ஒரு புனை பெயருக்குள் வெற்றிகரமாக ஒளிந்திருக்க முடிந்திருக்காது).
இந்த அதிகாரபூர்வமான வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் இன்னும் அதிகமான இடர்ப்பாட்டை உண்டாக்குவது, சேக்ஸ்பியர் பற்றி ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனில் நிலவிய மனப்பான்மையாகும். இங்கிலாந்தில் தலைசிறந்த நாடகாசிரியராகவும், மிகச் சிறந்த நடிகராகவும் சேக்ஸ்பியர் கருதப்பட்டு வந்தபோதிலும், அவரது சொந்த நகரில் எவரும், அவரை ஒரு புகழ் வாய்ந்தவராக அறிந்திருக்கவில்லை. அவரை வியப்புக்குரியவராக எவரும் மதிக்கவில்லை! அவர் ஸ்டிராட்ஃபோர்டிலிருந்து ஏழையாகச் சென்று ஒரு பெரும் பணக்காரராகத் திரும்பி வந்தபோதுங் கூட அவரை யாரும் கண்டு கொள்ளாதிருந்தது வியப்பளிக்கிறது. இந்தப் பெரும் மாற்றம், இயல்பாக உற்றார் உறவினரிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். எனினும், அவருடைய வாழ்நாளில், ஸ்டிராட்ஃபோர்டிலிருந்து அவருடைய நண்பர்களின் அல்லது அண்டை அயலாரில் ஒருவர்கூட, ஏன் அவரது குடும்பத்தினர்கூட, அவரை ஒரு நடிகராக, ஒரு நாடகாசிரியராக, ஒரு கவிஞராக அல்லது ஏதோவொரு இலக்கியவாதியாகவேனும் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.
சேக்ஸ்பியர் தம் கைப்பட எழுதிய நாடகங்களின் எழுத்துப்படிகள் பற்றி என்ன கூறுவது? அவர்தான் எழுத்தாளர் என்று மெய்ப்பிப்பதற்கு இவை தக்க சான்றுகள் தாம். ஆனால், தீவினைப் பயனாக, அவர் தம் கைப்பட எழுதிய நாடகங்களின் எழுத்துப்படிகள் எதுவும் கிடைக்கவில்லை. முன் வரைவுகள், வரைவுத் துணுக்குகள், வெளியிடப்படாத அல்லது முடிவு பெறாத படைப்புகள் கூட கிடைக்கவில்லை. உண்மையில், சட்ட ஆவணங்களில் காணப்படும் ஆறு கையொப்பங்களைத் தவிர்த்து, அவர் கைப்பட எழுதிய வேறு எதுவும் கிடைக்கவில்லை. குறிப்புகள், குறிப்பேடுகள், விண்ணப்பங்கள், நாட்குறிப்புகள் எதுவுமே இல்லை. அவர் எழுதிய நேர்முகக் கடிதம் ஒன்றுகூட இல்லை. வாணிகமுறைக் கடிதம் எதுவுமில்லை. (இவர் தம் கைப்பட எழுதிய எழுத்து ஒரு வரியையாவது தாங்கள் பார்த்ததாக இவர் வரலாற்றை முதலில் எழுதிய எழுத்தாளர்களில் ஒருவர்கூடக் குறிப்பிடவில்லை). சான்றுகளிலிருந்து கணிக்கும்போது, சேக்ஸ்பியர் ஓர் எழுத்தாளராக இருந்ததில்லை என்பது மட்டுமின்றி, அவர் மிகக் குறைந்த கல்வியறியுடையவராக அல்லது அறவே எழுத்தறிவற்றவராகக்கூட இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
சேக்ஸ்பியரின் பெற்றோர், மன€வி, குழந்தைகள் அனைவருமே எழுத்தறிவற்றவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதன் தன் பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் படிக்கத் தெரிந்தவள் என்பதற்காக மட்டுமே அவளை ஒருவன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால், எழுத்துலக மேதை எனப் போற்றப்பட்ட ஒருவர், தம் சொந்தப் புதல்வியை எழுதப் படிக்கத் கற்பிக்காமல் வளர்த்தார் என்பதை சிறிதும் நம்ப முடியவில்லை. சேக்ஸ்பியர், சேக்ஸ்பியராக இருந்திருந்தால், வரலாற்றில் தம் குழந்தைகளை எழுத்தறிவற்றவராக வளர்த்த உலகப் புகழ்பெற்ற ஒரே எழுத்தாளர் அவராகத்தான் இருப்பார்!
இங்கு சேக்ஸ்பியரின் விருப்புறுதி ஆவணம் (Will) பற்றிய சிக்கல் எழுகிறது. இந்த மூல ஆவணம் இன்றும் உயிர் வாழ்கிறது. இது மூன்று பக்கங்கள் நீளமுடையது. இதில் அவரது சொத்துக்கள் விவரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்தச் சொத்துகளில் பல குறித்த நபர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் எந்த இடத்திலும் அவரது கவிதைகள், நாடகங்கள், எழுத்துப்படிகள், எழுதப்பட்டு வரும் நூல்கள், இலக்கிய உரிமைகள் எதனைப் பற்றியும் குறிப்பிடவில்லை. அவரது சொந்த நூல்கள் அல்லது ஆய்வுரைகள் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. அவரது நாடகங்களில் குறைந்தது 20 நாடகங்கள் அப்போது அச்சிடாமலிருந்த போதிலும் வெளியாகாமலிருக்கும் அவரது நாடகங்களை வெளியிடுவது குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை. அவர் தம் வாழ்நாளில், ஒரு கவிதையை அல்லது நாடகத்தை எழுதியதற்கான குறிப்பு எதுவுமில்லை. பள்ளிக்குச் சென்றிராத, எழுத்தறிவற்ற ஒரு வணிகர் எழுதிய ஒரு விருப்புறுதி ஆவணமாகவே அது அமைந்துள்ளது.
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஒருவர் இறந்தால் அவருக்கு ஆடம்பரமான ஈமச் சடங்குகளை நடத்துவதும், கவிஞர்கள் நீண்ட கவிதைகள் இயற்றிப் புகழஞ்சலி செலுத்துவதும், பெரு வழக்கமாக இருந்து வந்த ஒரு காலத்தில், 1616 இல் சேக்ஸ்பியர் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தாமல் அறவே விட்டுவிட்டது வியப்புக்குரியது. பிற்காலத்தில் வில்லியம் சேக்ஸ்பியரை வியந்து போற்றுபவராகவும் அவருடைய நெருங்கிய நண்பராகவும் விளங்கிய தன்னைக் கூறிக்கொண்ட பென் ஜான்சன்கூட, சேக்ஸ்பியர் இறந்தபோது சிறிதும் இரங்கல் தெரிவிக்கவில்லை; அவர் மரணம் குறித்து குறிப்பிடவுமில்லை. ஸ்டிராட்ஃபோர்ட் மனிதருக்கும் புகழ் பெற்ற நாடகாசிரியருக்குமிடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மற்றக் கவிஞர்களும் வாளா இருந்தனர் போலும்.
மேற்சொன்ன வாதங்களே முடிவான சான்றுகள் என்று நான் கருதுகிறேன். சேக்ஸ்பியர் நாடகாசிரியர் அன்று என்பதற்கும், வில்லியம் சேக்ஸ்பியர் என்னும் பெயர் உண்மையான எழுத்தாளரை மறைப்பதற்குப் பயன்படுத்தப் பட்ட புனைபெயர் என்பதற்கும் இதற்குமேல் சான்றுகள் தேவையில்லை. எனினும், சேக்ஸ்பியர் எழுத்தாளர்தான் என்பதற்கு எதிரான வலுவான கூடுதல் வாதங்களும் உள்ளன.
எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடகாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளைத் தங்கள் படைப்புகளில் சேர்த்திருப்பார்கள். (பல சமயங்களில், இந்நிகழ்ச்சிகள் கதையின் முக்கியப் பகுதியாகவும் அமைந்திருக்கும்). ஆனால், சேக்ஸ்பியரின் நாடகங்களில், அவருடைய சொந்த அனுபவங்கள் எனக் கருதத்தக்க நிகழ்ச்சிகள் அல்லது சூழ்நிலைகள் எதுவும் காணப்படவில்லை.
இன்னொரு வாதமும் உண்டு. எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் நன்கு கற்றறிந்த மேதையாகத் தோன்றுகிறார். அவருடைய சொல்லாட்சித் திறன் இதற்குச் சாந்று; வேறெந்த நாடகாசிரியரையும்விட, மிக அதிகமான சொற்களை அவர் கையாண்டிருக்கிறார்; ஃபிரெஞ்சு, லத்தீன் இருமொழிகளிலுங்கூட அவர் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார்; சட்டச் சொற்களை மிகத் துல்லியமாகக் கையாண்டிருக்கிறார்; பண்டைய இலக்கியங்களில் அவர் நுண்மாண் நுழைபுலம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கிறார்; ஆயினும், அவர் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்ததில்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். முன் கூறியது போல், அவர் இலக்கணப் பள்ளியில் படித்தாரா என்பதுகூட ஐயத்திற்கிடமாகவே உள்ளது.
மற்றொரு செய்தியும் உள்ளது. எழுத்தாளர் சேக்ஸ்பியர் மேட்டுக்குடி (Aristocratic) ஆதரவாளராகவும், உயர் குடிப் பின்னணியுடையவராகவும் தோன்றுகிறது. நரி வேட்டை, வல்லூறு வளர்ப்பு (Falconry) போன்ற உயர் குடியினர் விளையாட்டுகளில் நல்ல தேர்ச்சி இருந்தது. அரசவை வாழ்க்கையையும் அரசவை சூழ்ச்சிகளையும் அவர் நன்கறிந்திருந்தார். இதற்கு மாறாக, இந்த சேக்ஸ்பியர் ஒரு சிறிய நகரிலிருந்து வந்தவர்; ஒரு நடுத்தர வர்க்கப் பின்னணியைக் கொண்டிருந்தவர்.
இந்த சேக்ஸ்பியரின் வாழ்க்கை பற்றிய இன்னும் ஏராளமான அம்சங்களும் உண்டு. இவை, புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் இவர்தான் என்ற கருதுகோளுக்கும் பொருந்துவனவாக இல்லை. இந்தக் கருதுகோளை ஏற்றுக் கொள்வதற்குத் தடங்கலாக உள்ள இன்னும் எத்தனையோ இடர்ப்பாடுகள் குறித்து எழுதுவதற்கு என்னிடம் நிறையச் சான்றுகள் உள்ளன. (இது பற்றி இன்னும் அதிகமான விவரங்கள் அறிய விரும்பும் வாசர்கள் சார்ல்டன் ஆக்பர்ன் (Charlton Ogburn) எழுதிய மர்மான வில்லியம் சேக்ஸ்பியர் (Mysterious William Shakespeare) என்ற அரிய நூலைப் பார்க்க). இந்த இடர்ப்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மரபுமுறை வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள். கருதுகோள் விளக்கங்களில் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை; ஆனால், ஒவ்வொன்றையும் தனித் தனியே ஆராய்ந்தால் அது உண்மை என்றே சொல்லத் தோன்றும்.
எடுத்துக்காட்டாக, புகழ் பெற்ற மனிதர்களிடமிருந்து வரும் கடிதங்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பது பொதுவாக மக்களின் மனப்போக்காக இருந்து வந்தபோதிலும், சேக்ஸ்பியர் எழுதிய நேர்முக அல்லது வாணிகக் கடிதம் ஒவ்வொன்றும் அவருடைய குறிப்புகள், குறிப்பேடுகள், எழுத்துப்படிகள் ஆகியவற்றுடன் அடியோடு மறைந்து போயின என்பதை ஏற்றுக் கொள்வோம். இந்தத் தலைசிறந்த ஆங்கிலக் கவிஞர், தமது கல்லறையில் காணப்படும் சிறுபிள்ளைத்தனமான நையாண்டிப் பாடல் வரிகளைத் தமது கல்லறை வாசகமாக எழுதினார் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். தமது நாடகங்களில், அறிவார்ந்த, கற்றறிந்த பெண்மணிகளைப் போற்றிச் சித்தரித்த ஒருவர், தம் புதல்வியரை எழுத்தறிவின்றி வளர்த்தார் என்பதையும் ஒப்புக் கொள்வோம். இங்கிலாந்தில் மிகவும் போற்றப்பட்ட எழுத்தாளராக சேக்ஸ்பியர் விளங்கியபோதிலும், ஸ்டிராட் ஃபோர்டிலிருந்த அவருடைய நண்பர்களில், குடும்பத்தினரில், அண்டை அயலாரில் ஒருவர் கூட அவரை ஒரு நடிகராகவோ, கவிஞராகவோ, நாடகாசிரியராகவோ குறிப்பிடவில்லை என்பதையும் ஏற்றுக் கொள்வோம். இவை நடந்திருக்க இயலாது; இருந்தாலும் நடந்ததாகக் கொள்வோம்!
எனினும், இந்த நேர்விலுங்கூட, பெரும்பாலான நேர்வுகளில் போலவே, ஒரு முழுமை, அதன் எந்தவொரு பகுதியையும் விட, பெரிது என்பதே எண்பிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் ஓரிரு இடர்ப்பாடுகள் மட்டுமே இருந்தால்கூட, அவற்றுக்காக வலிந்து கூறப்படும் விளக்கங்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த விளக்கங்களில் ஒன்றுகூட அதிகாரபூர்வ வரலாற்றுக்கு இயல்பாகப் பொருந்தவில்லை என்னும் போது, நாம் எதுவும் செய்வதற்கில்லை. இந்தக் கதையில் கண்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் வலிந்து கூறும் விரிவான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. இதற்குக் காரணம் இதுதான். ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனைச் சேர்ந்த வில்லியம் சேக்ஸ்பியர், ஒரு சிறிய நகரைச் சேர்ந்த ஒரு வணிகர்; மிகக் குறைந்த அளவே கல்வியறிவுடையவர். அவருடைய கல்வி, அவரைப் பற்றி அவர் குடும்பத்தினரும் அண்டை அயலாரும் கூறியவை. இவற்றில் எதுவும், அவர் புகழ் பெற்ற எழுத்தாளர் வில்லியம் சேக்ஸ்பியர் என்பதற்குப் பொருத்தமுடையனவாக இல்லை.
சரி, நாடகங்களை இயற்றிய எழுத்தாளர், சேக்ஸ்பியர் இல்லையென்றால், அவர் யார்? வேறு பலரின் பெயர்கள் கூறப்படுகின்றன. இவர்களில் குறிப்பிடத் தக்கவர் புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon) ஆவார். ஆனால், அண்மை ஆண்டுகளில், அவர் எட்வர்ட்-டி-வேர் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன.
எட்வர்ட்-டி-வேர் பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. அவர் தம் வாழ்வில் பல வீர சாகசங்களைப் புரிந்துள்ளார். அவருடைய வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகள், நாடகங்களில் இடம் பெற்றுள்ளன. அவர் 1550இல் பிறந்தவர். 16ஆவது ஆக்ஸ்போர்ட் கோமகனின் (16th Earl of Oxford) மைந்தன்; செல்வம் கொழிக்கும் உயர் குடியைச் சேர்ந்தவர். நார்மானியர் வெற்றி பெற்ற (Norman Conquest) காலத்திலிருந்து இவருடைய குடும்பத்திற்குக் கோமகன் பட்டம் வழங்கப்பட்டு வந்தது. அந்தப் பட்டத்திற்குரிய வாரிசாக விளங்கிய இளம் எட்வர்ட், ஓர் இளம் கோமகனுக்குரிய தேர்ச்சித் திறன்கள் அனைத்திலும் பயிற்சி பெற்றார். குதிரையேற்றம், வேட்டையாடுதல், இராணுவக் கலை, இசை, நடனம் எல்லாம் முறையாக கற்றுத் தேர்ந்தார். உயர்கல்வியும் கற்றார். தனி ஆசிரியர்களிடம் ஃபிரெஞ்சு, லத்தீன் மொழிகளும் மற்றப் பாடங்களும் பயின்றார். இறுதியில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் (Bachelor's Degree) ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் (Master's Degree) பெற்றார். லண்டனிலுள்ள புகழ்பெற்ற வழக்குரைஞர் கழகத்தைச் (Inns of Court) சேர்ந்த கிரே சட்டக் கல்லூரியில் (Grays's Inn) ஓராண்டு சட்டம் பயின்றார்.
எட்வர்டின் 12 ஆம் வயதிலேயே அவர் தந்தை காலமானார். அவர் தாய் பின்னர் மறுமணம் செய்து கொண்டார். எனினும், எட்வர்ட் தம் தாயுடன் அதிக நாட்கள் தங்கியிருக்கவில்லை. மாறாக அவர் அரசவைக் காப்பாண்மையின் கீழ் (Royal Ward) வந்தார்; அவருக்கு ஒரு காப்பாளர் (Gardian) நியமிக்கப்பட்டார். அவருக்குக் காப்பாளராக அமர்த்தப் பட்டவர் இங்கிலாந்து நிதி அமைச்சர் (Lonr Treasurer of England) வில்லியம் செசில் (William Cecil) ஆவார். இவர் எலிசபெத் அரசியாரின் அரசப் பேரவையின் (Privy Council) ஓர் உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அரசியாரின் மிகுந்த நம்பிக்கைக்குரிய மூதறிஞராகவும், ஆலோசகராகவும் விளங்கிய செசில், இங்கிலாந்தில் மிகவும் வல்லமை வாய்ந்த பிரமுகராகத் திகழ்ந்தார்.
இளம் டி-வேர் அவரது உயர் குடிப்பிறப்பின் உயர் தகுதிக்கேற்ப செசிலின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே மதிக்கப்பட்டார். (ஒரு மர்மமான நிகழ்ச்சியில், செசிலின் பணியாட்களில் ஒருவனை டி-வேர் கொன்று விட்டதாகவும், அந்த வழக்கு செசிலின் செல்வாக்கினால் நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் கூறுவர்). அவர் தம் குமரப் பருவத்தின் பிற்பகுதியில் அரசவையில் அறிமுகப் படுத்தப்பட்டார்; அங்கு அரசியார் உட்பட அரசவைப் பிரமுகர்கள் அனைவரையும் அவர் சந்தித்தார். அவர் அறிவுத் திறன்மிக்கவராக விளங்கினார்; கவர்ச்சிமிக்க அழகிய இளைஞனாக எல்லோருடனும் சுமுகமாகப் பழகினார். இப்பண்புகள் காரணமாக இவர் அரசியாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரானார்.
இவர் தமது 21 ஆம் வயதில் தம் காப்பாளரின் மகள் ஆனி செசிலை (Anne Cecil) மணந்து கொண்டார். அவர்கள் இருவரும் இளைமையிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனால், அவள் அவருடைய தங்கை போன்றே கருதப் பட்டாள். அவர்களிடையே திருமணம் நடந்தது. அப்போது மரபு மீறியதாகக் கருதப்பட்டது. (சிம்பெலின் (Cymbelin) என்ற நாடகத்தின் நாயகன் பாஸ்துமஸ் லியோனாட்டஸ் (Pothumsus Leonatus) அரசவைக் காப்பாண்மையில் வளர்ந்தவள்; அவனும் தம் காப்பாளரின் மகளை மணந்து கொண்டான்; அவன் கதைக்கும் டி-வேரின் வரலாற்றுக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன).
டி-வேர் தம் 24 ஆம் வயதில் ஐரோப்பா முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். ஃபிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் சென்றார். இத்தாலியில் 10 மாதங்கள் தங்கியிருந்தார். பின் ஃபிரான்ஸ் வழியாக இங்கிலாந்து திரும்பினார். அவர் திரும்பி வருகையில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது, அவரது கப்பலைக் கடற்கொள்ளையர் தாக்கினார்கள். அவரைப் பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், எலிசபெத் அரசியாருடன் தமக்குள்ள நெருங்கிய நட்பு குறித்துக் கொள்ளையரிடம் டி-வேர் தெரிவித்தார். பணயத் தொகை கேட்காமல் அவரை விடுவித்து விடுவதே அறிவுடைமை என்று கொள்ளையர்கள் முடிவு செய்தனர் (இதே போன்றதொரு அனுபவம், ஹேம்லெம் நாடகத்தில் கதாநாயகனுக்கு ஏற்படுகிறது.)
இதற்கிடையில், இவருடைய மனைவி ஆனி ஒரு மகளுக்குத் தாயானாள். இங்கிலாந்தை விட்டு டி-வேர் புறப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகே இந்தக் குழந்தை பிறந்திருந்தது. எனினும், இக்குழந்தை தமக்குப் பிறந்தது இல்லை என்று டி-வேர் வாதிட்டார்; ஆனி நடத்தை கெட்டவள் என்று பொய் குற்றச் சாட்டுகள் கூறப்படுவதை மிகச் சாதாரணமாகக் காணலாம். (எடுத்துக்காட்டாக, நன்மையில் முடிவதெல்லாம் நம்மையே (All's Well Thats Ends Well) சிம்பலின், குளிர் காலத்தை (Cymbeline the Winter's Tale) ஒத்தெல்லோ (Othello) ஒவ்வொரு நேர்விலும், பாதிக்கப்பட்ட மனைவி தன் கணவனை மன்னித்துவிடுகிறாள்).
மனைவியரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஐந்தாண்டுகளின் போது, அரசவைப் பெண்மணி ஒருத்தியுடன் டி-வேர் தொடர்பு கொண்டிருந்தார். இதனால், அவள் கருவுற்றாள். இதனால் கோபங்கொண்ட எலிசபெத் அரசியார் இவரைக் கைது செய்து, லண்டன் கோபுரச் (Tower of London) சிறைச் சாலையில் அடைத்தார். சில மாதங்களுக்குப் பிறகு இவர் விடுதலையானார். ஆனால், இவரது நடவடிக்கையினால், ஆத்திரமடைந்திருந்த அந்த இளம் பெண்ணின் நண்பர் ஒருவர், டி-வேரைத் தாக்கினார்; அதனால் இவர் படு காயமடைந்தார். இதைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்குமிடையில் தெருச் சண்டைகள் சிறிது காலம் அடிக்கடி நடந்தன. இறுதியில், இந்தச் சண்டைகளை நிறுத்தாவிட்டால், அவர்கள் அனைவரையும் சிறையிடைத்துவிடப் போவதாக எலிசபெத் அரசியார் அச்சுறுத்திய பிறகே இச்சண்டைகள் ஓய்ந்தன. (இது, ரோமியோ ஜூலியத் நாடகத்தில் வரும் தெருச் சண்டைகளை நினைவுபடுத்துகிறது.
டி-வேர் தம் மனைவியுடன் மீண்டும் வாழத் தொடங்கிய பிறகு, அவர்களுக்கு மேலும் நான்கு குழந்தைகள் பிறந்தனர்; மொத்தத்தில் அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். அப்போது ஆனிக்கு 32 வயதுதான். அந்த வயதில் ஆனி திடீரெனக் காலமானாள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி-வேர் மறுமணம் செய்து கொண்டார். அவருடைய இரண்டாம் மனைவி, அவருக்குப் பின்னரும் உயிர் வாழ்ந்தாள்.
இதற்கிடையில், டி-வேரின் ஊதாரிப் பழக்க வழக்கங்களினால் படுமோசமாகிவிட்டிருந்த அவருடைய நிதி நிலைமை வெகுவாகச் சீரடைந்தது. இவரது 36 ஆம் வயதில் (1586) எலிசபெத் அரசியார், இவருக்கு மாதம் 1,000 பவுன் என்ற அளவுக்கு ஒரு பெருந்தொகையை ஆயுட் கால ஓய்வூதியமாக வழங்கினார். இத்தொகை, இன்று ஆண்டுக்கு 1,00,000 டாலருக்குச் சமம். இதற்கு வரிவிலக்கும் அளிக்கப் பட்டிருந்தது. பணம் கொடுப்பதில் எலிசபெத் மிகவும் சிக்கனமானவர் எனப் பெயர் எடுத்தவர். அவர், இத்துணை பெருமளவுத் தொகையை வழங்கியது வியப்பாக இருந்தது. இந்த ஓய்வூதியத்திற்காக டி-வேர் எந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடப்படவில்லை. அவருடைய எந்த கடந்த காலப் பணிகளுக்காக இந்த வெகுமதி வழங்கப் பட்டது என்பதும் தெரியவில்லை. எனினும், இந்த மானியம், இவருடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இவருக்கு ஒழுங்காக வழங்கப்பட்டு வந்தது; அரசியார் 1603 இல் காலமான பின்பு அவருக்குப் பின் அரியணைக்கு வந்த முதலாம் ஜேம்ஸ் மன்னரும் இந்த மானியத்தைத் தொடர்ந்து வழங்கி வந்தார்.
டி-வேர் எப்போதுமே கவிதையிலும், நாடகத்திலும் தீவிர ஆர்வங்கொண்டிருந்தார். இலக்கிய உலகப் பிரமுகர்கள் பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இளம் வயதில் தம் சொந்தப் பெயரிலேயே கவிதைகளும், நாடகங்களும் எழுதி வந்தார். (இவரது இளமைக் கால நாடகங்கள் கிடைக்கவில்லை; ஆனால் இவரது தொடக்கக் கால கவிதைகள் பல கிடைத்துள்ளன. இக்கவிதைகள் முதிர்ச்சியடைந்த வில்லியம் சேக்ஸ்பியரின் தரத்திற்கு மிகக் குறைவாக இருப்பினும், ஓரளவிற்குத் தரமான கவிதைகளாகவே உள்ளன.) ஆனால், இவற்றில் எதனையும் இவர் வெளியிடவில்லை. ஓர் உயர் குடியைச் சேர்ந்தவர், வெளியிடுவதற்காக கவிதை எழுதுவது மதிப்புக் குறைவு என்று அப்போது கருதப்பட்டதே இதற்குக் காரணம். (இத்தகைய மனப்போக்கு இன்று நமக்கு மிகவும் விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆனால், அந்தக் காலத்தில், இந்த மனப்போக்குப் பொதுவாக நிலவியது உண்மைதான் என்றும், இந்தத் தடைக் கட்டு மிக அரிதாகவே மீறப்பட்டது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
எலிசபெத் அரசியாரின் மானியத்தைப் பெறத் தொடங்கிய பிறகு டி-வேர் ஒருவரிகூடத் தம் சொந்தப் பெயரில் எழுதவில்லை. ஆயினும், சில ஆண்டுகளுக்குள்ளேயே வில்லியம் சேக்ஸ்பியர் என்ற இனம் தெரியாத எழுத்தாளரின் பெயரில் கவிதைகளும், நாடகங்களும் வெளி வரலாயின.
எலிசபெத் அரசியார், டி-வேருக்கு இத்துணையளவு தாராளமான ஓய்வூதியத்தை ஏன் வழங்கினார்? இதற்கான காரணம் இதுவரை வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனினும், இவரைப் போன்ற ஒரு திறமையான கலைஞரைப் புரந்தருவதால், அவருடைய சாதனைகள் தமது ஆட்சிக்குப் பெரும் புகழ் சேர்க்கும் எனத் தமக்கு முந்திய பல அரசர்கள் நம்பியதைப் போல் எலிசபெத்தும் நம்பியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படும் காரணம் ஏற்புடையதாகவே உள்ளது. இதுதான் அரசியாரின் நோக்கமாக இருந்தது என்றால், அதற்கு அவருக்குப் போதிய பிரதிபலன் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். உண்மையில், அவருக்கு முந்திய அல்லது பிந்திய அரசர்களில் எவரும் இத்துணை போற்றத் தக்க செயலைச் செய்ததில்லை எனலாம்!
மிகச் சுறுசுறுப்புடன் செயற்பட்டு வந்த எட்வர்ட்-டி-வேர், அரசியாரின் ஓய்வூதியத்தைப் பெற்ற பிறகு, அரசவை வாழ்விலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார். அவர் தமது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை முழுவதிலும், வில்லியம் சேக்ஸ்பியர் என்ற பெயருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்த நாடகங்களையும், கவிதைகளையும் திருத்தி எழுதுவதிலும் கழித்தார் எனக் கருதலாம். பிளேகு (Plague) என்ற கொள்ளை நோய் பரவியபோது, 1604 இல் அவர் காலமானார். ஸ்டிராட்ஃபோர்ட் கிராமத்தின் அருகிலிருந்த ஹேக்னி (Hackney) என்னுமிடத்தில், அவருடைய நாட்டுப்புற இல்லத்தின் அருகே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டார். (அப்போது இங்கிலாந்தில் ஸ்டிராட்ஃபோர்ட் என்ற பெயரில் இரண்டு ஊர்கள் இருந்தன. ஒன்று, ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனைவிடப் பெரிதாக இருந்தது).
சேக்ஸ்பியர் அல்லது எழுத்தாளர் எனக் குறிப்பிடப்படும் வேறு நபர் எவரையும் போலன்றி, எட்வர்ட்-டி-வேர், மர்மமான வில்லியம் சேக்ஸ்பியருக்குரிய தகுதிப்பாடுகளுக்கு முற்றிலும் பொருத்தமுடையவராகத் தோன்றுகிறார்.
அவர் மிக உயர்ந்த கல்வித் தகுதி பெற்றிருந்தார்; சட்டம் பயின்றிருந்தார்; அயல்மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார். (லத்தீனும், ஃபிரெஞ்சும் அவர் நிச்சயமாகக் கற்றிருந்தார்; மற்ற மொழிகளையும் அறிந்திருந்தார்.) நாடகங்கள் இயற்றுவதற்கு அவருக்கு நிறைய ஓய்வு நேரம் இருந்தது.
அவர் மதிநுட்பம் வாய்ந்தவர் என்றும், மிகுந்த திறமையுடையவர் என்றும் மற்றவர்கள் அடிக்கடி அவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
அவர் தம் வாழ்நாள் முழுவதும் நாடகத் துறையில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். தம் இளமைப் பருவத்தில் சொந்த பெயரிலேயே நாடகங்களையும், கவிதைகளையும் அவர் எழுதியிருந்தார். உண்மையில், கவிதைகள் எழுதிய கோமகன்களில் ஒருவர் என்று அவருடைய வாழ்நாளிலேயே அவர் குறிப்பிட்டுக் கூறப்பட்டிருந்தார். ஆனால், மேற்சொன்ன தடைக்கட்டு (Taboo) இருந்தமையால், அவர் தம் சொந்தப் பெயரில் கவிதைகளை வெளியிடவில்லை. மேலும், இவ்வாறு செய்த சீமான்களில் மிகுந்த தேர்ச்சித் திறனும், பேராற்றலும் வாய்ந்தவர் என்று இவர் போற்றப்பட்டார். (இதற்கான சான்றுகள் அந்தக் காலத்திய ஆவணங்களில் உள்ளன).
வில்லியம் சேக்ஸ்பியரின் நாடகங்களில், எட்வர்ட்-டி-வேர் வாழ்வில் எதிர்ப்பட்ட நிகழ்ச்சிகள், ஆட்கள், சூழ்நிலைகள் தொடர்பான நிகழ்ச்சிகளும், கதை மாந்தர்களும் ஏராளமாக உண்டு. (இவற்றில் சிலவற்றை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன்; இதுபோன்ற வேறு பல நேர்வுகளும் உள்ளன).
நாடகங்கள் எழுதிய ஆசிரியராக டி-வேரை ஏற்றுக் கொள்வதில் எதிர்ப்படும் ஒரே சிக்கல் இந்தக் கேள்விதான்: அவர் தமது அடையாளத்தை ஏன் இரகசியமாக வைத்திருந்தார்? இதற்குப் பல விளக்கங்கள் உண்டு.
1. கோமகன்கள், வெளியிடுவதற்காகக் கவிதைகள் இயற்றுவதற்கு அல்லது வாணிக முறையில் மேடையில் நடிப்பதற்கு நாடகங்கள் எழுதுவதற்குக் கடுமையான தடைக்கட்டு இருந்து வந்தது.
2. டி-வேர் அரசவைக்குள்ளேயே செயற்படுபவராக நன்கு அறியப்பட்டவர். அவருடைய நாடகங்களில் அரசவை வாழ்க்கை விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த நாடகங்களை எழுதியவர் தாம் தான் என்பது வெளியே தெரியவருமானால், அரசவையில் உண்மையில் இருந்த பல பிரமுகர்களை அவமதிப்பதற்காகவே அவர் பல்வேறு கதை மாந்தர்களைப் படைத்தார் என்று இயல்பாக அனுமானிக்க வழியுண்டாகும். இன்று, இத்தகைய எழுத்துகள் மிகச் சாதாரணமாகி விட்டன. இவ்வாறு எழுதுவது நட்புமுறையில் எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும், இது பற்றி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. எனினும், வாழ்க்கைத் தர நிலைகளிலிருந்து பார்க்கும்போது, அந்தக் காலத்தில் இத்தகைய எழுத்துக்கு எதிராக நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எழுந்திருக்கும்; அத்துடன் வாட்போர் மோதலும் (Duel) ஏற்பட்டிருக்கும். டி-வேர் தமது அடையாளத்தை மறைத்ததன் மூலம், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்து விட்டார்.
3. வில்லியம் சேக்ஸ்பியர் இயற்றிய ஈரேழ் வரிப் பாடல்களில் பல, ஒரு காதலியை நினைத்து எழுதப்பட்டவை. இவற்றைத் தாம் எழுதியதாக டி-வேர் ஒப்புக் கொண்டிருந்தால், அது அவரது மனைவிக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும்.
4. இதைவிட இக்கட்டான நிலை என்ன வென்றால், அவருடைய வேறுபல ஈரேழ் வரிப் பாடல்கள், ஓர் ஆடவனை மனதிற்கொண்டு எழுதப்பட்டவை. அதனால், இந்த எழுத்தாளர் ஓரினச் சேர்க்கையில் (Homosexual) மோகம் கொண்டவர் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கும். அவ்வாறு எண்ணுவது தவறு என்றே பெரும்பாலான திறானாய்வாளர்கள் கருதுகிறார்கள். எனினும், இந்த எண்ணம் சரியோ, தவறோ, இந்தப் பாடல்களை இயற்றியவர் தாம்தான் என்பதை ஒப்புக் கொண்டால், அது அவரது குடும்பத்தினருக்கு பெரும் இக்கட்டான நிலைமையை உண்டாக்கும். அலர் தூற்றுவதற்கு வழி உண்டாக்கியிருக்கும்.
இந்த விளக்கங்களில் எதுவும் முற்றிலும் நம்பக் கூடியதாக இல்லை. எனினும், இவற்றை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், டி-வேர் தமது அடையாளத்தை மறைத்து வைத்ததற்கு ஒரு முழுமையான விளக்கம் கிடைக்கலாம். ஆயினும், நமக்குத் தெரியாத கூடுதல் காரணங்களும் அவருக்கு இருந்திருக்கலாம். (எடுத்துக்காட்டாக, ஓய்வூதியம் வழங்குவதற்கு ஒரு நிபந்தனையாக, சமூகக் கட்டுத் திட்டங்களை அவர் அனுசரிக்க வேண்டும் என்றும், அவருடைய எழுத்துகளில் எதனையும் அவரது சொந்தப் பெயரில் வெளியிடுவதைத் தவிர்த்து, அரசவையினருடன் வாட் போர் மோதலைத் தவிர்க்க வேண்டும் என்றும் எலிசபெத் அரசியார் வற்புறுத்தியிருக்கலாம்.)
டி-வேர் தமது அடையாளத்தை மறைத்து வைத்ததற்கான முழுக் காரணத்தை நாம் அறிந்திருந்தாலும், இல்லாவிட்டாலும், மற்ற அனைத்து அம்சங்களிலும் அவர் சேக்ஸ்பியரின் தகுதிப்பாடுகளுக்கு முழுவதுமாகப் பொருந்துகிறார். அவருக்கு நெருக்கமாக வேறெவரும் வரவில்லை! எனவே, என்னைப் பொறுத்தவரையில், அவர்தான் எழுத்தாளர் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
இங்கு கடைசியாக ஒரு கேள்வி எழுகிறது; நாடகங்களை எழுதியவர் சேக்ஸ்பியர்தான் என்று கருதும் எண்ணம் அப்போது தோன்றியது? சேக்ஸ்பியர் காலமான சில ஆண்டுகளுக்குப் பின் கூறப்பட்ட ஐயப்பாடான மூன்று குறிப்புகளிலிருந்து இந்த நம்பிக்கை தோன்றியது எனலாம். யாரேனும் ஒருவர் வேண்டுமென்றே இந்தக் கட்டுக் கதையை இட்டுக் கட்டியிருக்க வேண்டும். இதனைச் செய்தவர் யார்? ஏன் செய்தார்?
இந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான பதில் கிடைக்குமெனத் தோன்றவில்லை. ஆனால், இதற்கு ஒரேயொரு விளக்கம் மட்டுமே இருக்க முடியும். அதாவது, டி-வேர் படைப்புகளின் முழுத் தொகுப்பினை வெளியிடவும், அவருடைய அடையாளத்தை இரகசியமாக வைத்திருக்கவும் அவருடைய குடும்பத்தினர் (1620 இல்) முடிவு செய்தபோது, அவரது குடும்பத்தினர்தான் இதனைச் செய்திருக்க வேண்டும். அதாவது, வீண் அவதூறுகளைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். (அரசியாருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுதல் போன்ற வேறு நோக்கங்களும் இருந்திருக்கலாம்). இந்த ஏமாற்று வேலை முழுமையாகச் செய்வதற்காக, வேறொரு ஆளை எழுத்தாளராக முன்னிலைப்படுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். பெயர் ஒற்றுமை காரணாக சேக்ஸ்பியரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். மேலுமூ, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதால், அவரால் இந்த மோசடி அம்பலமாக வழியில்லை. அத்துடன், லண்டனில் அவர் நன்கறியப்படாதவர் என்பதாலும், அவரை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை என்பதாலும், இந்தக் கட்டுக்கதை போலியானது என்பதை நகரிலுள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
இந்தப் போலிச் செய்தியைப் பரப்புவதும் எளிதாக இருந்தது. முதலாவது இருமடிப் பதிப்புக்கு ஒரு முன்னுரைக் கவிதை எழுதிய பென் ஜான்சன் (Ben Jonson) அதன் எழுத்தாளர் ஸ்டிராட்ஃபோர்ட்-ஆன்-ஆவோனைச் சேர்ந்தவர் என்று குறிப்பாகத் தெரிவிக்கும் ஓரிரு தெளிவற்ற வரிகளைச் சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டார். சேக்ஸபியரின் கல்லறைக்கு அருகே, பாராட்டுரைகளை கல்லறை வாசகமாகக் கொண்டு ஒரு நினைவுச் சின்னத்தை நிறுவவும் அவர்கள் ஏற்பாடு செய்தனர். வில்லியம் சேக்ஸ்பியரின் அடையாளம் எப்போதுமே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமையால், அவர் ஸ்டிராட்ஃபோர்ட்டைச் சேர்ந்தவர்தான் என்று கூறும் ஒரு சில குறிப்புகளே இந்தக் கட்டுக் கதையை பரப்புவதற்குப் போதுமானதாக இருந்தது. இந்த கதை சரியானது தானா என்று கவனமாக ஆராய்வதில் அந்தக் காலத்தில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. (இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றில் இன்று போல் அன்று யாரும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை). சேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் 1709 இல் வில்லியம் ரோவ் (Willaim Rowe) என்பவர் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்குள், உண்மையை அறிந்தவர்கள் மாண்டு மறைந்து போனார்கள்; சேக்ஸ்பியர் பற்றிய கட்டுக்கதை நம்பிக்கையுடன் ஏற்கப்பட்டு விட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்லியம் சேக்ஸ்பியர் (கி.பி.1550 - கி.பி.1604), அவர், சேக்ஸ்பியர், வில்லியம், வேர், அவருடைய, அல்லது, அவரது, சேக்ஸ்பியரின், எனினும், எழுதிய, எழுத்தாளர், இந்தக், இல்லை, வேண்டும், ஏற்றுக், தமது, பற்றி, எலிசபெத், என்பதை, புகழ், அந்த, வாழ்க்கை, மட்டுமே, நாடகங்கள், அவரை, பெரும், இவர், ஸ்டிராட்ஃபோர்ட், ஒருவர், பெற்ற, புகழ்பெற்ற, பிறகு, நமது, காலத்தில், எட்வர்ட், பற்றிய, என்பது, சான்றுகள், அரசியார், நாடகங்களில், இவருடைய, காரணம், வேறு, எடுத்துக்காட்டாக, எதுவும், அவருக்கு, இலக்கிய, வயதில், என்றும், பெயரில், கொள்ள, ஆயினும், லண்டனில், கொண்டார், அடையாளத்தை, இன்று, எவரும், அரசியாரின், இந்தப், அப்போது, உயர், நாடகங்களை, இளம், தாம், பெயர், சொந்த, இருந்து, குறித்து, வரலாற்றில், மூன்று, எழுதினார், காலம், கொள்வோம், தங்கள், வாழ்ந்த, இவற்றில், அன்று, என்றே, இங்கிலாந்தில், இன்னும், உண்டு, அதிகமான, தொடர்ந்து, எனக், மேலும், நாம், நாடகாசிரியர், தான், மிகச், அந்தக், தலைசிறந்த, கவிதைகள், சொந்தப், ஸ்டிராட், ஆண்டுகளுக்குப், அவள், இங்கு, மிகுந்த, ஆண்டுகளில், விளங்கிய, கிடைக்கவில்லை, எழுத்துப்படிகள், கைப்பட, வரலாற்றை, முடிவு, உண்மையில், இவரது, மிகவும், அரசவை, ஒப்புக், இரகசியமாக, சேர்ந்தவர், அவரைப், தோன்றுகிறது, மேற்சொன்ன, மனைவி, கிடைத்துள்ளன, வந்த, பென், குறிப்பிடவில்லை, ஒன்றுகூட, மேதை, வந்தார், குறிப்புகள், சிறிய, பற்றியும், இவ்வாறு, நான், வரும், பெரும்பாலான, பெற்றார், பொதுவாக, மிகக், ஏராளமான, பிரமுகர்கள், என்பதையும், முழுவதும், ஒவ்வொரு, படைப்புகள், அங்கு, அதாவது, மற்ற, அடிக்கடி, வாழ்வில், எழுத்தாளராக, போது, இடம், குறைந்த, சேக்ஸ்பியருக்கு, என்னும், இருந்திருக்கலாம், கடிதம், தத்துவ, தவிர்த்து, அறிவியல், அண்டை, நேரம், இதுதான், கொண்டிருந்தால், கொள்வதில், யாரும், கவிஞர்கள், குழந்தைகள், முடியும், மனித, செசிலின், கவிதைகளையும், செய்து, வந்தது, இத்துணை, இதற்குக், அதனால், பின், இத்தகைய, ஆர்வம், அவருக்குப், குறைந்தது, கொண்டிருந்தார், விளக்கங்களில், இடர்ப்பாடுகள், நெருங்கிய, நடந்த, தொடர்பு, ஆங்கிலக், துறைகளில், நிகழ்ச்சிகள், பல்கலைக், மாறாக, இதற்கு, உள்ளது, போல், கழகத்தில், செல்வாக்குச், கூறும், வைத்துக், தோன்றுகிறார், குறிப்பும், எந்தக், கொண்ட, நடிகராக, நாடகங்களும், ஈரேழ், வரிப், ஆண்டுகள், மரபாளர்களின், கவிதைகளும், வணிகர், வாழ்நாளில், அதில், முதலாவது, குறிப்பிட, ஆவோனைச், முதலில், அவன், நாடகங்களின், கொண்டான், மணந்து, சேக்ஸ்பியராக, பள்ளியில், இலக்கணப், பழைய, அவர்களுக்கு, காலத்தை, ஆவணங்கள், உலகப், மிகப், ஆவணங்களில், குறித்த, அதிக, முன், ஏறத்தாழ, பிறந்த, நாடகத்தில், ஆங்கில, ஆண்டுகளுக்கு, எழுத்தாளர்கள், இந்தத், திரும்பி, எதனையும், காலமான, சேக்ஸ்பியர்தான், யார், விருப்புறுதி, எந்த, சிக்கல், எதுவுமில்லை, எழுதியவர், ஆவணம், எவ்விதத், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்