முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜான் கால்வின் - (கி.பி.1509 - கி.பி.1564)
ஜான் கால்வின் - (கி.பி.1509 - கி.பி.1564)
புகழ் பெற்ற புரோட்டஸ்டன்டு இறைமையியலறிஞரும் அறநெறிப் போதனையாளருமாகிய ஜான் கால்வின், ஐரோப்பிய வரலாற்றில் தலையாய பெரியாராக விளங்குபவர். இறைமையியல், அரசு, தனிநபர் ஒழுக்கநெறி, பணிப் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு பொருட்பாடுகள் குறித்த இவரது கருத்துகள் 400 ஆண்டுகளுக்கு மேலாகக் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பெரும் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளன.
ஜான் கால்வின் (இயற்பெயர் ஜீன காவின்) 1509 ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள நோயோன் என்ற நகரில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த கல்வியைப் பெற்றார். பாரிசிலுள்ள மாண்டேகுக் கல்லூரியில் பயின்ற பின், ஆர்லியான்ஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலச் சென்றார். போர்ஜசிலும் இவர் கல்வி கற்றார்.
மார்ட்டின் லூதர், விட்டன்பர்க் தேவாலயத்தின் கதவில் தமது "95 நெறிமுறை"களை ஒட்டி வைத்து புரோட்டஸ்டான்டுச் சமயச் சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தபோது, கால்வின் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தார். கால்வின் சிறுவயதில் ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார். ஆனால், இளைஞரானதும் புரோட்டஸ்டான்டாக மாறினார். அடக்கு முறையிலிருந்து தப்புவதற்காக இவர் விரைவிலேயே பாரிசிலிருந்து வெளியேறிச் சிறிது காலம் பல இடங்களில் சுற்றியலைந்து விட்டு இறுதியில் சுவிட்சர்லாந்து பாசல் நகரில் குடியமர்ந்தார். அங்கு இவர் ஒரு புனை பெயருடன் வாழ்ந்தார். அதே சமயம் இறைமையியலைத் தீவிரமாகக் கற்று வந்தார். இவர், 1536 ஆம் ஆண்டில் தமது 27 ஆம் வயதில், தம் புகழ் பெற்ற நூலாகிய "கிறிஸ்தவ சமய நிறுவனங்கள்" என்ற நூலை வெளியிட்டார். இந்நூல், புரோட்டஸ்டான்டு கொள்கைகளைச் சுருங்க உரைத்ததுடன், அவற்றை முறைப்படத் தொகுத்து விரிவான முறையில் வழங்கியது. இந்நூல், இவருக்குகப் பெரும்புகழ் தேடித்தந்தது.
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் புரோட்டஸ்டான்டுகள் படிப்படியாக வலிமைப் பெற்று வந்தனர். அங்கு 1636 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கால்வின் வருகை புரிந்தார். அங்கு புரோட்டஸ்டான்டு சமுதாயத்தின் சமயப் போதகராகவும், தலைவராகவும் தங்கியிருக்கும்படி கால்வினை வேண்டினர். ஆனால், விரைவிலேயே தீவிர ஒழுக்க நெறியாளராகிய கால்வினுக்கும், ஜெனீவா வாசிகளுக்குமிடையே கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. 1538 ஆம் ஆண்டில் இவர் ஜெனீவா நகரிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். எனினும், 1541 ஆம் ஆண்டில் மீண்டும் இந்நகருக்கு வரும்படி இவர் அழைக்கப்பட்டார். அந்த அழைப்பை ஏற்று ஜெனீவா திரும்பிய கால்வின், அந்த நகரின் சமயத் தலைவராக ஆனது மட்டுமின்றி, 1584 ஆம் ஆண்டில் தாம் இறக்கும் வரையில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராகவும் விளங்கினார்.
கால்வின் தலைமையில் ஜெனீவா, ஐரோப்பாவில் ஒரு முக்கியமான புரோட்டஸ்டான்டு மையமாக விளங்கியது. மற்ற நாடுகளில் குறிப்பாக, பிரான்சில் புரோட்டஸ்டான்டு சமயத்தின் வளர்ச்சிக்குக் கால்வின் தீவிரமாகப் பாடுபட்டார். சிறிது காலம் ஜெனீவா, "புரோட்டஸ்டான்டு ரோம்" என்று அழைக்கப்பட்டதும் உண்டு. ஜெனீவா திரும்பியதும் கால்வின் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று அங்கிருந்த புரோட்டஸ்டான்டுத் திருச்சபைகளின் சமயக் குருக்களான ஒழுக்க நெறிமுறை ஒன்றை வகுத்ததாகும். இந்த ஒழுக்கநெறிமுறைகளை ஐரோப்பாவிலிருந்த மற்ற புரோட்டஸ்டான்டுத் திருச்சபைகளும் முன்மாதிரியாகக் கொண்டன. கால்வின் ஜெனீவாவிலிருந்த போது, ஆற்றல்மிக்க சமய, ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதினார். "கிறிஸ்தவ சமய நிறுவனங்கள்" என்ற நூலை மறு ஆய்வு செய்து மாற்றியமைத்தார். இறைமையியல் விவிலியம் பற்றி பல சொற்பொழிவுகளும் ஆற்றினார்.
கால்வின் காலத்து ஜெனீவா கடுமையான பழக்க வழக்கமும், கடுங்கண்டிப்பான சமய நெறிமுறைகளும் கொண்ட ஓரிடமாக விளங்கியது. கூடா ஒழுக்கமும். மணமாகாத ஆண் பெண் கலவியும் கடுமையான குற்றங்களாகக் கருதப்பட்டதுடன். சூதாட்டம், குடிபோதையிலிருத்தல், நடனாமாடுத்ல, ஆபாசப் பாடல்களைப் பாடுதல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டன. இவற்றைச் செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாயினர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் தேவாலயங்களுக்கு வழிபாட்டுக்கு வர வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டிருந்தது. தேவாலயங்களில் நீண்ட சமய விளக்கவுரைகள் நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.
சுறுசுறுப்புடன் உழைப்பதற்குக் கால்வின் தீவிரமாக ஊக்கமளித்தார். கல்வியறிவைப் பெருக்குவதில் முனைப்புக் காட்டினார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஜெனீவாப் பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது.
கால்வின் சமயச் சகிப்புணர்வு அற்றவராக இருந்தார். சமய விரோதிகள் என இவரால் கருதப்பட்டவர்கள் ஜெனீவாவில் குறுகிய தீர்ப்புத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என விதி செய்திருந்தார். இவருடைய தண்டனைக்கு ஆளானவர்களில் புகழ்வாய்ந்தவர் மைக்கேல் செர்விட்டஸ் என்பவர் ஒருவர். செர்விட்டஸ், ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவ வல்லுநர், கிறிஸ்தவ இறைமையியலறிஞர், அவர் "மும்மைக் கோட்பாட்டினை நம்ப மறுத்தார். செர்விட்டஸ் ஜெனீவாவுக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். கிறிஸ்தவத் திருச்சபையின் கருத்துக்கு மாறான கருத்துக் கொண்டிருந்தமைக்காக விசாரணை செய்யப்பட்டு, கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். (1553). இது தவிர, பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாக ஐயுறப்பட்ட ஏராளமானவர்கள் கால்வின் ஆட்சியின்போது, கம்பத்தில் பிணைத்து எரிக்கப்பட்டனர்.
கால்வின் 1564 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் காலமானார். இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடைய மனைவி 1549 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். இவருடைய ஒரே குழந்தையும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டது.
கால்வினுடைய தனி முக்கியத்துவம் அவருடைய நேரடியான அரசியல் நடவடிக்கைகளைச் சார்ந்திருக்க வில்லை. மாறாக, அவர் பிரகடனம் செய்த கோட்பாட்டினையே சார்ந்திருக்கிறது. விவிலியத்தின் மேலாண்மையும் முக்கியத்துவத்தையும் கால்வின் வலியுறுத்தினார். லூதரைப் போலவே, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் ஏற்க மறுத்தார். லூதர், புனித அகஸ்டைன், புனித பால் ஆகியோரைப் போன்ற எல்லா மனிதரும் பாவிகள் என்றும் தற்செயல்களினால் வீடுபேறு கிடைக்காது என்றும் கடவுள் பக்தியினால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்றும் கால்வின் கருதினார். வீடுபேற்றிற்கும், இறவா வாழ்விற்கும் எனக் க்டவுளார் சிலர் முன்னுறுதி செய்யப்பட்டுள்ளனர் ஆகியவை, பற்றிய கால்வினுடைய கருத்துகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கால்வின் கருத்துப்படி, தகுதியைப் பொருட்படுத்தாமல் யார் யார் நரகத்துக்குரியவர்கள் என்பதையும் இறைவன் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கிறார். அப்படியானால், தனிநபர்கள் அறநெறியில் ஒழுகுவது குறித்து ஏன் கவலைப்பட வேண்டும். இந்தக் கால்வின் கூறிய மறுமொழி இதுதான். வீடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே நன்னெறியில் நடப்பதற்கும் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் நற்செயல்களைப் புரிவதால், நமக்கு மீட்பளிக்கப்படவில்லை. மாறாக, நாம் வீடுபேற்றுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் காரணமாகவே நாம் நற்செயல்களைச் செய்கின்றோம். இது போன்ற கோட்பாடு சிலருக்கு விசித்திரமாகத் தோன்றலாம். எனினும், கால்வின் ஆதரவாளர்கள் பலர் தீவிர சமயப் பற்றாளர்களாகவும், நேர்மை வாய்ந்தவர்களாகவும் வாழ்க்கை நடத்துவதற்குத் தூண்டுதலாக அமைந்தது இந்தக் கோட்பாடுதான் என்பதில் ஐயமில்லை.
கால்வின், உலகின் மீது மிகப் பெருமளவுச் செல்வாக்குப் பெற்றிருந்தார். இவருடைய இறைமையியல் கோட்பாடுகள், லூதரின் கோட்பாடுகளை ஆதரித்த ஆதரவாளர்களின் எண்ணிக்கையைவிட கால்வினுக்கு மிகப்பெருமளவு எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கால்வினுக்கு ஈட்டித் தந்தன. வடக்கு ஜெர்மனியும், ஸ்காண்டிநேவியாவும் முக்கியமாக லூதர் ஆதரவு நாடுகளாக மாறியபோதிலும், சுவிட்சர்லாந்தும், நெதர்லாந்தும் கால்வின் ஆதரவு நாடுகளாயின. போலந்து, அங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கணிசமான சிறுபான்மையினர் கால்வின் ஆதரவாளர்களாயினர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொது ஆட்சிமுறைச் சமயக் கிளையினரும் பிரான்சில் கத்தோலிக்க சமயத்திலிருந்து பிரிந்து முளைத்த சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயக் கொள்கையுடையவர்களும் இங்கிலாந்திலிருந்த கடுஞ் சீர்திருத்த சமயவாதிகளும் கால்வின் ஆதரவாளர்களாக இருந்தனர். அமெரிக்காவில்,கடுஞ் சீர்திருத்த சமயவாதம் நீண்ட காலம் வலுவாகச் செல்வாக்குப் பெற்றிருந்தது.
கால்வின் காலத்திய ஜெனீவாவில் மக்களாட்சியை விட, இறைமையாட்சிதான் முனைப்பாக நடந்திருக்க வேண்டும். ஆனால், கால்வினியத் தத்துவத்தின் நிகர விளைவு, மக்களாட்சி முறை வளர்ச்சி பெற்றதேயாகும். பல நாடுகளில் கால்வின் ஆதரவாளர்கள் கணிசமான சிறுபான்மையினராக இருந்தமையால், அவர்கள் சட்டப்படி நிறுவப் பெற்ற ஆட்சியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த அவர்கள் முனைந்தால் மக்களாட்சி முறை செல்வாக்குப் பெற்றிருக்கலாம். அல்லது, கால்வின் ஆதரவுத் திருச்சபைகள் உள்ளாட்சிச் சுதந்திரத்துடன் செயற்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாயினும், ஆதியில் கால்வின் ஆதரவாளர்கள் கோட்டைகளாக விளங்கிய சுவிட்சர்லாந்து, ஹாலந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் மக்களாட்சியின் கோட்டைகளாகவும் விளங்கின என்பது உறுதி.
"புரோட்டஸ்டான்டு உழைப்பு நெறிமுறை" உருவாகியதற்குகம், முதலாளித்துவம் எழுச்சி பெற்றதற்கும் கால்வின் கோட்பாடுகள் தாம் முக்கிய காரணம் என்று கூறுவர். இந்தக் கூற்று எந்த அளவுக்கு நியாயமானது என்பதை மதிப்பிட்டுக் கூறுவது கடினம். எடுத்துக்காட்டாக, கால்வின் தோன்றுவதற்குக நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே டச்சுக் காரர்கள் "கடும் உழைப்பாளிகள்" எனப் புகழ் பெற்றிருந்தார்கள். எனினும், கடும் உழைப்பினை வலியுறுத்திக் கால்வின் கூறிய கருத்துகள் அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தவில்லை என்று கூறிவிட முடியாது. ஆதி கிறிஸ்தவ அறநெறியாளர்களில் பெரும்பாலோர் வட்டி வாங்குவதை வன்மையாகக் கண்டித்தனர். ஆனால், முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான இந்த வட்டி வசூலிப்பை கால்வின் அனுமதித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கால்வினுக்கு இந்தப் பட்டியலில் எத்துணை உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும்? கால்வினுடைய செல்வாக்கு முக்கியமாக மேற்கு ஐரோப்பாவுடனும், வட அமெரிக்காவுடனும் நின்றுவிட்டது. மேலும், சென்ற நூற்றாண்டில் அவருடைய செல்வாக்கு, வெகுவாக வீழ்ச்சியடையலாயிற்று. எந்த நேர்விலும், கால்வின் தத்துவம் தோன்றியதற்கான பெருமையில் பெரும் பகுதி ஏற்கெனவே இயேசு கிறிஸ்து, புனித பால், லூதர் போன்ற முற்போந்த பெரியோர்களுக்கு குறித்தளிக்கப்பட்டிருக்கிறது.
புரோட்டஸ்டான்டுச் சமயச் சீர்திருத் இயக்கம் மிகப் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தபோதிலும், அந்தப் பேரெழுச்சிக்குத் தலையாய காரணமாக இருந்தவர் மார்ட்டின் லூதரேயாவார். லூதருக்குப் பின் செல்வாக்கு மிக்க பல புரோட்டஸ்டான்டுத் தலைவர்கள் தோன்றினார்கள். அந்தப் பலரில் ஒருவர்தான் கால்வின். எனவே, லூதருக்கு மிகவும் பிற்பட்டுத்தான் கால்வினுக்கு இடமளிக்க வேண்டும் என்பது தெளிவு. அதேசமயம், வால்ட்டேர், ரூசோ போன்ற தத்துவ ஞானிகளுக்கு மிகவும் முற்பட்டு கால்வினுக்கு இடமளிக்க வேண்டும். ஏனெனில், வால்ட்டேர், ரூசோ ஆகியோரின் செல்வாக்கு நீடித்த கால அளவை விட இருமடங்குக் கால அளவுக்குக் கால்வினுடைய செல்வாக்கு நீடித்தது. மேலும், கால்வினுடைய ஆதரவாளர்களின் வாழ்வை அவருடைய கொள்கைகள் ஆழ்ந்த செயல் விளைவு கொண்டனவாக இருந்தன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜான் கால்வின் - (கி.பி.1509 - கி.பி.1564), கால்வின், இவர், ஜெனீவா, ", வேண்டும், செல்வாக்கு, புரோட்டஸ்டான்டு, ஆண்டில், கால்வினுடைய, கால்வினுக்கு, இவருடைய, கிறிஸ்தவ, ஜெனீவாவில், லூதர், செர்விட்டஸ், அவர், அவருடைய, என்றும், செல்வாக்குப், என்பது, ஆதரவாளர்கள், நாம், ஆகிய, இந்தக், புனித, எனினும், சமயச், சீர்திருத்த, பெரும், கருத்துகள், பெற்ற, இறைமையியல், காலம், அங்கு, சமயக், செய்து, புரோட்டஸ்டான்டுத், புகழ், கடும், கடுமையான, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்