முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஹெர்னாண்டோ கோர்ட்டே (கி.பி.1485 - கி.பி.1547)
ஹெர்னாண்டோ கோர்ட்டே (கி.பி.1485 - கி.பி.1547)
மெக்சிகோவை வெற்றி கொண்டவர் ஹெர்னாண்டோ கோர்ட்டே ஆவார். இவர் 1485 ஆம் ஆண்டில், ஸ்பெயினிலுள்ள மெடெல்லின் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு குறுங் கோமகன். கோர்ட்டே தம் இளமையில் சலமான்கா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். இவர் தமது 19 ஆம் வயதில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மேற்கு கோளார்த்தத்தில் பொருளீட்டும் நோக்குடன்ம ஸ்பெயினிலிருந்து புறப்பட்டார். 1504 ஆம் ஆண்டில் ஹ’ஸ்பானியோலா என்ற தீவைச் சென்றடைந்தார். அங்கு பல ஆண்டுகள் ஒரு குடியானவர் சீமானாகவும், உள்ளூர் டான்ஜூவானாகவும் விளங்கினார். 1511 ஆம் ஆண்டில் கியூபா மீது ஸ்பானியர் மேற்கொண்ட படையெடுப்பில் இவரும் பங்கு கொண்டார். இந்த வீரதீரச் செயலுக்குப் பிறகு, கியூபாவுக்குப் பேரரசின் ஆளூநரான டீகோ வெலாஸ் கியூவின் மைத்துனியை திருமணம் செய்து கொண்டார். அத்துடன், இவர் சாண்டியாகோவின் மேயராகவும் நியமிக்கப்பட்டார்.
1511 ஆம் ஆண்டில் மெக்சிகோவுக்கு நாடாய்வுக்காக அனுப்பப்பட்ட குழுவின் தலைவராக இவ€ லெவாஸ்கியூ தேர்ந்தெடுத்தார். ஆனால், கோர்ட்டேயின் பேராசையை அறிந்து கொண்ட ஆளுநர், விரைவிலேயே தம் ஆணையை நீக்கம் செய்தார். ஆனால், அதற்குள்ளேயே கோர்ட்டே மெக்சிகோவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். கோர்ட்டே, 1519 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 11 கப்பல்களுடனும், 110 மாலுமிகளுடனும், 55 படை வீரர்களுடனும், (கைத்துப்பாக்கி வைத்திருந்த 13 பேர், வில் அம்பு வைத்திருந்த 82 பேர் உள்பட) 10 கனத்த பீரங்கிகளுடனும், 4 இலேசான பீரங்கிகளுடனும், 16 குதிரைகளுடனும் பயணமானார். இன்றைய வெராக்ரூஸ் நகரம் இருக்கும் இடத்தில் இந்தக் குழுவினர் பெரிய வெள்ளிக்கிழமையன்று தரையிரங்கினார்கள். கோர்ட்டே கடற்கரை அருகிலேயே சிறிது காலம் தங்கியிருந்து மெக்சிகோவின் நிலைமை குறித்து தகவல்களைச் சேகரித்து வந்தார். மெக்சிகோவை ஆண்டு வந்த ஆஸ்டெக்குகள் நாட்டின் உட்பகுதியில் ஒரு பெரிய தலைநகரைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும், அவர்களிடம் விலையுயர்ந்த உலோகங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பதையும் அவர்களை அடக்கி வைத்திருக்கும் மற்றச் சிவப்பிந்திய மரபினர் வெறுக்கிறார்கள் என்பதையும் இவர் அறிந்து கொண்டார்.
ஆஸ்டெக்குகள் எப்படியும் வெற்றி கொண்டுவிட வேண்டும் எனக் கோர்ட்டே உறுதி பூண்டார். நாட்டின் உட்பகுதிக்குள் படை நடப்புச் செய்து, ஆஸ்டெக் ஆட்சிப் பரப்புகள் மீது படையெடுக்க முடிவு செய்தார். ஆஸ்டெக்குகளில் ஏராளமான எண்ணிக்கையையும் கண்டு இவரது படையினரில் சிலர் அச்சம் கொண்டனர். எனவே, உட்பகுதிக்குள் படை நடப்புச் செய்வதற்கு முன்னதாக தமது குழுவினரின் படகுகள் அனைத்தையும் அழித்துவிடும்படி செய்தார். இதனால், தாம் சொன்னபடி கேட்க வேண்டும் அல்லது சிவப்பிந்தியர்களின் கையால் சாக வேண்டும் என்ற நிலையை அக்குழுவினருக்கு இவர் உருவாக்கினார்.
உட்பகுதிக்குள் படைநடப்பு மேற்கொண்ட ஸ்பானியர்கள், சிவப்பிந்தியர்கள் 'டிலாக்ஸ்காளான்ஸ்' என்ற சுதந்திரமான மரபுக் குழுவினரால் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர். ஆனால், இக்குழுவினர் பெரிய இராணுவத்தை சில கடுமையான போர்களில் ஸ்பானியர்கள் தோற்கடித்து விடவே இக்குழுவினர் தாங்கள் கடுமையாக வெறுத்து வந்த ஆஸ்டெக்குகளுக்கு எதிராக ஸ்பானியருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். கோர்ட்டே, பின்னர் சோலூவை நோக்கி முன்னேறினார். அங்கு, ஆஸ்டெக் அரசன் இரண்டாம் மாண்டேசூமா ஸ்பானியர் மீது திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தான். ஆனால், சிவப்பிந்தியர்களின் இந்தத் திட்டம் குறித்து முன்னதாகவே தகவல் அறிந்த கோர்ட்டே, முதலிலேயே தமது தாக்குதலைத் தொடங்கி, சோலூலாவில் பல்லாயிரம் சிவப்பிந்தியர்களைப் படுகொலை செய்தார். பின்னர், இவர் தலைநகராகிய டெனோக்டிட்லான் நகரை (இன்றைய மெக்சிகோ) நோக்கி முன்னேறினார். 1519 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று, அந்நகரில் இவர் எதிர்ப்பின்றி நுழைந்தார். விரைவிலேயே ஆஸ்டெக் அரசன் மாண்டேசூமாவைச் சிறைப்பிடித்து அவனைத் தமது கைப்பாவையாக ஆக்கிக் கொண்டார். இத்துடன் ஸ்பானியரின் வெற்றி பெரும்பாலும் முற்றுப் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது.
ஆனால், பான்ஃபிலோ டி நார்வேஸ் என்பவரின் தலைமையில் மற்றொரு ஸ்பானியப் படை, கோர்ட்டேயைக் கைது செய்வதற்கான ஆணைகளுடன், கடற்கரையில் வந்து இறங்கியது. கோர்ட்டே தமது படையினரில் ஒரு பகுதியை டொனோக்டிட்லான் நகரில் நிறுத்தி விட்டு, மற்ற படையினருடன் கடற்கரைக்கு வந்தார். அங்கு, இவர் நார்வேஸ் படையைத் தோற்கடித்து, அவருடைய எஞ்சிய படையினரைத் தம்முடன் சேர்த்து கொள்ளும்படி செய்தார். ஆயினும், இவர் டொனோக்டிட்லான் நகருக்குத் திரும்பி வருவதற்குள், அங்கு இவர் பொறுப்பு ஒப்படைத்திருந்த துணை அதிகாரி ஆஸ்டெக்குகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத அளவுக்குத் தூண்டி விட்டிருந்தார். 1520 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் நாளன்று, டொனோக்டிட்லான் நகரில் ஒரு புரட்சி தோன்றியது. ஸ்பானியப் படையினர் கடும் உயிர்ச் சேதங்களுக்குப் பின்னர், டிலாக்ஸ்லாவுக்குப் பின் வாங்கினார். எனினும், அடுத்த மே மாதத்தில் கோர்ட்டே கூடுதல் படைகளை, வரவழைத்து, டொனோக்டிட்லானை முற்றுகையிட்டார். ஆகஸ்ட், 18 ஆம் நாளன்று அந்நகர் வீழ்ச்சியடைந்தது. அதன் பின்பு, மெக்சிகோவின் எல்லையோர மண்டலங்களின் மீதான வெற்றியை வலுப்படுத்துவதற்கு கோர்ட்டே சிறிது காலம் செலவிட நேர்ந்தபோதிலும், மெக்சிகோ மீது ஸ்பானியர் ஆதிக்கம் பெருமளவிற்குப் பாதுகாப்பாகவே இருந்தது. டொனோக்டிட்லான் நகரம் மீண்டும் நிறுவப்பட்டு, மெக்சிகோ நகர் எனப் பெயரிடப்பட்டது. அது ஸ்பெயினின் குடியேற்ற நாடாகிய புதிய ஸ்பெயினின் தலைநகராகவும் ஆகியது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படையினருடன் கோர்ட்டே தமது படையெடுப்பைத் தொடங்கினார் என்பதை கருதுகையில், 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு பேரரசின் மீது அவர் பெற்ற வெற்றி உண்மையிலேயே ஒரு மகத்தான இராணுவச் சாதனை என்பதில் ஐயமில்லை. பேரளவு எண்ணிக்கையினரை எதிர்த்து ஒரு சிறிய படை பெற்ற வெற்றிடககு வரலாற்றில் மற்றொரு எடுத்துக்காட்டுக் கூறவேண்டுமானால், அதற்குப் பெருவில் இன்காக்கள் மீது பிரான்சிஸ்கோ பிசாரோ பெற்ற வெற்றியை மட்டுமே கூறலாம். கோர்ட்டே ஏன் இவ்வாறு வெற்றி பெற்றார் என்பது இங்கு ஆராய்வதற்குரியது. இவர் பெற்றிருந்த குதிரைகளும், சுடுபடைக் கலங்களும் இவருடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பது உண்மைதான். எனினும், இவரிடம் இருந்த துப்பாக்கிகளும், குதிரைகளும் எண்ணிக்கையில் மிகக் குறைவு. இவர் சந்தித்த எதிரிகளின் மிகப் பெரிய எண்ணிக்கையைச் சமாளிப்பதற்கு அவை போதுமானவை அல்ல. இதற்கு முன்பு இரண்டு முறை ஸ்பானியர், மெக்சிகோ கடற்கரையை அடைந்த போதிலும், ஒரு முறைகூட, அவர்கள் அங்கு ஓர் குடியேற்றத்தை ஏற்படுத்துவதிலோ, ஒரு நிரந்தரமான வெற்றி பெறுவதிலோ, வெற்றியடையவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது). கோர்ட்டேயின் திறமையான தலைமையும், அவரது துணிவும், மன உறுதியும், அவரது வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என்பது உண்மையே. அதே சமயம் அவரது தேர்ந்த அரசியல் தந்திரமும், இதற்கு மிக முக்கிய காரணம் என்பதை மறந்து விடலாகாது. கோர்ட்டே மிகுந்த அரசியல் மதிநுட்பத்துடன், தமக்கு எதிராகச் சிவப்பிந்தியர்கள் கூட்டணிச் சேர்ந்து விடாமல் தவிர்த்தார். அது மட்டுமின்றி, பெரும்பாலான சிவப்பிந்தியர்களை ஆஸ்டெக்குகளுக்கு எதிராக தம்முடன் சேர்ந்து கொள்ளும்படியும் செய்தார்.
குவட்சால்கோட்டின் என்ற தெய்வத்தைப் பற்றி ஆஸ்டெக்குகளிடம் வழங்கி வந்த புராணக் கதைகளும் கோர்ட்டேக்குத் துணை புரிந்தன. சிவப்பிந்தியரின் புராணக் கதையின்படி, இந்தத் தெய்வம்தான் சிவப்பிந்தியர்களுக்கு வேளாண்மை தெய்வத்தையும், உலோகக் கலவையையும், அரசு முறையையும் கற்றுக் கொடுத்தது. இந்தக் கடவுள் உயரமானது, வெண்ணிறமானது, நீண்ட தாடியை உடையது. சிவப்பிந்தியர்களிடம் மீண்டும் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு இத்தெய்வம் "கிழக்குப் பெருங்கடலு"க்கு மேலாக சென்று விட்டது. அந்தக் கிழக்குப் பெருங்கடல்தான் மெக்சிகோ வளைகுடாவாகும். அப்படி திரும்பி வந்த கடவுள்தான் கோர்ட்டே என மாண்டசூமா அஞ்சினான். அவனது அந்த, அச்சம் அவனுடைய நடத்தைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். ஸ்பானியப் படையெடுப்புக்கு எதிராக அவன் மேற்கொண்ட நடவடிக்கை, போதிய வலுவின்றியும், திட்டமுடிபற்றதாகவும் இருந்தது.
ஸ்பானியரின் வெற்றிக்கான கடைசி முக்கிய காரணம் அவர்களுடைய தீவிர சமய உணர்வு ஆகும். கோர்ட்டேயின் படையெடுப்பு மன்னிக்க முடியாத ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால், தமது படையெடுப்பு அறநெறிப்படி நியாயமானது எனக் கோர்ட்டே கருதினார். "நமது குறிக்கோள் நியாயமானது", நாம் சிலுவைக் கொடியின் கீழ் போரிடுகிறோம் எனவே, நாம் வெற்றியடைவது உறுதி" என்று கோர்ட்டே தம் வீரர்களிடம் கூறி ஊக்குவித்தார். கோர்ட்டே மனமார்ந்த நம்பிக்கையுடனேயே அவர்களின் சமய உணர்வைத் தூண்டிவிடடார். ஒரு தடவைக்கு மேலாக, அவர் தம் வெற்றியைப் பணயம் வைத்து, சிவப்பிந்தியர்களைக் கிறிஸ்துவத்திற்கு மாற்றுவதற்கு இரும்புக்கர முயற்சிகளை மேற்கொண்டார்.
சிவப்பிந்தியர்களைச் சமாளிக்கும்போது, கோர்ட்டே தேர்ந்த அரசியல் விவேகத்துடன் நடந்து கொண்ட போதிலும், தமது ஸ்பானிய எதிரிகளுடன் அவர் நடத்திய அரசியல் போராட்டத்தில அவருடைய அரசியல் விவேகம் வெற்றி பெற்றதாகக் கூற முடியாது. ஸ்பானிய அரசர், கோர்ட்டேக்கு ஏராளமான நிலங்களை மானியமாக வழங்கி அவரைச் செல்வந்தராக்கினார். அவருக்கு கோமகன் பட்டமும் வழங்கினார். ஆனால், மெக்சிகோவின் ஆளுநர் பதவி யிலிருந்த அவரை நீக்கி விட்டார். 1540 ஆம் ஆண்டில் கோர்ட்டே ஸ்பெயினுக்குத் திரும்பினார். அவர் தமது வாழ்நாளின் கடைசி 7 ஆண்டுகளை, புதிய ஸ்பெயினில் தமது அதிகாரத்தை மீண்டும் தமக்கு அளிக்கும்படி அரசருக்கு விண்ணப்பம் அனுப்புவதிலேயே கழித்தார். அவருடைய விண்ணப்பம் ஏற்கப்படவே இல்லை. 1547 ஆம் ஆண்டில் ஸ்பெயினிலுள்ள செவில் அருகே கோர்ட்டே காலமான போது, அவர் செல்வந்தராக இருந்தபோதிலும், மிகுந்த விரக்தி கொண்டவராகவே இறந்தார். மெக்சிகோவில் அவருக்குச் சொந்தமாக இருந்த பெரிய பண்ணைச் சொத்தினை அவருடைய மகன் மரபுரிமையாகப் பெற்றார்.
கோர்ட்டே மிகவும் பேராசை கொண்டவராகவும், புகழார்வம் மிக்கவராகவும் இருந்தார் என்பது தெளிவு. கோர்ட்டேக்கு மிக நெருக்கமாக இருந்தவரும், அவரை வியந்து பாராட்டுபவருமான ஒருவர், அவரை "ஈவிரக்கமற்றவர்; இறுமாப்பு கொண்டவர்; பொல்லாங்கு செய்பவர்; வலுச்சண்டை பிடிப்பவர்" என்று வருணித்துள்ளார்.
அதே சமயம், கோர்ட்டே போற்றத்தக்க பல பண்புகளையும் கொண்டிருந்தார். அவர் துணிச்சல் மிகுந்தவர்; அஞ்சா நெஞ்சம் வாய்ந்தவர்; அறிவாற்றல் நிரம்பியவர்; அவர் பொதுவாக எப்போதும் முக மலர்ச்சியுடன் இருந்தார். அவர் உறுதி வாய்ந்த இராணுவத் தலைவரா விளங்கிய போதிலும், அவர் வேண்டுமென்றே கொடூரமாக நடந்து கொள்ளவில்லை. சிவப்பிந்தியர்கள் அனைவரின் கடும் வெறுப்புக்குள்ளான பிசாரோவைப் போலன்றி, கோர்ட்டே ஏராளமான சிவப்பிந்தியர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவர்கள் மீது கடுமையாக ஆதிக்கம் செலுத்த இவர் முயலவில்லை. கோர்ட்டே அழகிய தோற்றமுடையவராகவும், கவர்ச்சி மிக்கவராகவும் விளங்கினார். அவர் எப்போதும் பெண்களைக் கவரும் ஆணழகராகவே திகழ்ந்தார்.
கோர்ட்டே தமது உயிலில், சிவப்பிந்தியர்கள் அடிமைகளாகச் சொந்தம் கொண்டிருப்பது அறநெறிப்படி சரியானதுதானா என்பது தமக்கு உறுதியாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அடிமை முறை அவருடைய மனத்தை உறுத்தியிருக்க வேண்டும். எனவே இது குறித்து கவனமாகச் சிந்தித்துப் பார்க்கும்படி அவர் தம் மகனிடம் கேட்டுக் கொண்டார். அவருடைய காலத்தில் அவரது இந்தச் செயல் அபூர்வமானது எனலாம். பிரான்சிஸ்கோ பிசாரோ (அல்லது கிறிஸ்டோபர் கொலம்பஸ்) இவ்வாறு சிந்தித்துப்பார்கள் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மொத்தத்தில், ஸ்பானிய வெற்றி வீரர்கள் அனைவரிலும் கோர்ட்டே தான் மிக்க பண்பு நலம் வாய்ந்தவராகத் தோன்றுகிறார்.
கோர்ட்டேயும், பிசாரோவும் 50 மைல் தொலைவிற்குள், 10 ஆண்டு இடைவெளியில் பிறந்தவர்கள். இவ்விருவருடைய சாதனைகளும் வியத்தகு வகையில் ஒப்புமையுடையனவாக விளங்குகின்றன. ஒரு பெருங் கண்டத்தின் அளவுக்குப் பரப்புடைய மண்டலத்தை இவர்கள் வெற்றி கொண்டார்கள். அந்த மண்டலத்தில், தங்கள் மொழியையும், சமயத்தையும், பண்பாட்டையும் புகுத்தினார்கள். அந்த மண்டலத்தின் பெரும் பகுதியில் அது முதற்கொண்டு, அரசியல் அதிகாரம் ஐரோப்பிய மரபினர் வசமே இருந்து வந்துள்ளது.
கோர்ட்டே, பிசாரோ ஆகிய இருவரின் ஒருங்கிணைந்த செல்வாக்கு, சைமன் பொலீவாருடைய செல்வாக்கை விட அதிகம். இவர்களுடைய வெற்றிகளினால், தென் அமெரிக்காவில் அரசியல் அதிகாரம், சிவப்பிந்தியர்களிடமிருந்து, தென் அமெரிக்காவில் பிறந்த ஐரோப்பிய மரபினரின் கைக்கு மாற்றுவதில் மட்டுமே வெற்றி கண்டன.
கோர்ட்டேயின் வெற்றி பிசாரோவுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதாலும், கோர்ட்டேயின் வெற்றியே பிசாரோவுக் அகத் தூண்டலாக அமைந்தது என்பதாலும், பிசாரோவுக்கு முற்பட்டு கோர்ட்டேக்கு இடமளிக்க வேண்டும் என முதலில் கருதத் தோன்றும். மேலும், பிசாரோ இருந்த போது, பெருவில் சிவப்பிந்தியர்களின் எதிர்ப்பு முடிவுறவில்லை. ஆனால், கோர்ட்டே மெக்சிகோவை முழுமையாக வெற்றி கொண்டிருந்தார். எனினும், இந்த அம்சங்களை மட்டுமின்றி, மற்றொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, ஸ்பானியரின் நாடு பிடிக்கும் வேட்டையும், ஆயுத பலத்தில் அவர்களுடைய மேம்பாடும், ஆஸ்டெக்குகள், இன்காக்கள் ஆகிய இருவரும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தன. மலைப்பாங்கான பகுதிகளினால் பாதுகாக்கப்பட்ட பெரு தனது சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்வதற்குச் சிறிது வாய்ப்பிருந்தது. எனவே, பிசாரோவின் துணிச்சலான, வெற்றிகரமான தாக்குதல்தான் வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது எனலாம்.
ஆனால், ஆஸ்டெக் நாடு, பெருவைப் போல் மலைப்பாங்கானதாக இருக்கவில்லை. மேலும் (பெருவைப் போலன்றி) மெக்சிகோவின் எல்லைகள், அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி இருந்தமையால், ஸ்பானியப் படையினரால் எளிதில் அணுகத்தக்கதாக இருந்தன. ஆகவே, மெக்சிகோவை ஸ்பெயின் வெற்றி கொள்வது ஓர் இன்றியமையாத நிகழ்வாகவே அமைந்திருந்தது. அந்த வெற்றியையே விரைவுபடுத்தியதுதான். கோர்ட்டேயின் துணிவுமிக்க திறமையான தலைமையின் முதன்மையான விளைவு ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹெர்னாண்டோ கோர்ட்டே (கி.பி.1485 - கி.பி.1547), கோர்ட்டே, இவர், வெற்றி, தமது, அவர், மீது, வேண்டும், அரசியல், என்பது, முக்கிய, செய்தார், கோர்ட்டேயின், அவருடைய, ஆண்டில், மெக்சிகோ, அங்கு, பெரிய, கொண்டார், ஆண்டு, சிவப்பிந்தியர்கள், அவரது, டொனோக்டிட்லான், ஸ்பானியப், பிசாரோ, ஆஸ்டெக், மெக்சிகோவை, வந்த, மெக்சிகோவின், ஸ்பானியர், அந்த, ஸ்பானிய, பெற்ற, கோர்ட்டேக்கு, அவரை, கொண்டிருந்தார், நாம், ", போதிலும், இருந்த, காரணம், மீண்டும், தமக்கு, கடும், ஆஸ்டெக்குகள், என்பதையும், எனக், குறித்து, சிறிது, நகரில், மேற்கொண்ட, கொண்ட, உட்பகுதிக்குள், ஏராளமான, ஸ்பானியரின், மற்றொரு, திரும்பி, நாளன்று, பின்னர், சிவப்பிந்தியர்களின், எதிராக, சேர்ந்து, எனினும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்