முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » திசை மாற்றிய இயக்குனர் - ஸ்ரீதர்
பொதுவான கட்டுரைகள் - திசை மாற்றிய இயக்குனர் - ஸ்ரீதர்
தமிழ்த் திரை உலகில் தனக்கென்று ஒரு நிகரற்ற இடத்தை நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டவர் இயக்குனர் ஸ்ரீதர்.
ஸ்ரீதர் என்ற மூன்றெழுத்து வெகுகாலத்திற்கு தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக இருந்தது. ஒரு இயக்குனருக்காக படம் பார்க்கிற நிலையை முதன் முதலாக உருவாக்கியவர் இவர்தான். அந்த காலகட்டத்தில் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்களின் மானசீக குருவாக விளங்கினார் ஸ்ரீதர். சலிப்பூட்டும் வகையில் இலக்கணத் தமிழில் பேசிக் கொண்டிருந்த சினிமாவை வெகுமக்களின் நடையில் பேச வைத்தவர் இவர். 50களின் மத்தியில் ஒரு வசனகர்த்தாவாக தன் கலைப் பயணத்தைத் துவங்கிய ஸ்ரீதர், 80களின் பிற்பகுதி வரை ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தார்.
நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாணப் பரிசு, சுமைதாங்கி, காதலிக்க நேரமில்லை, தேன் நிலவு, நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், நினைவெல்லாம் நித்யா போன்ற காலத்தால் அழியாத படைப்புகளின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்துக் கொண்ட இயக்குனர் ஸ்ரீதர் பற்றிய விரிவான ஒரு பார்வை:
சினிமா தமிழ் பேசத் தொடங்கியது 1931ல் வெளிவந்த காளிதாஸ் என்ற படத்தில். ஆரம்ப காலத்தில் ஏறத்தாழ எல்லாப் படங்களுமே தமிழ் நாடகத்தின் குரங்குப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. ஒய்.வி. ராவ், எல்லிஸ் ஆர். டங்கன், ஆச்சார்யா கே. ராம்நாத் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக தங்களுடைய படங்களை உருவாக்கினார்கள். பேசும் படம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் தமிழ்ப்படம் பேசிக் கொண்டே இருந்தது. அல்லது பாடிக் கொண்டே இருந்தது!
இந்த நிலைமையை மாற்றி தமிழ்த் திரைப்படங்களை ஒரு புதிய திசையில் எடுத்துச் சென்றவர் பிரபல இந்தியத் திரைப் படக் கதாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஸ்ரீதர்! இந்த மூன்றெழுத்து திரைப்பட சிற்பி 1950-1960களில் இந்தியா முழுவதும் வெற்றிக் கொடி நாட்டி புகழின் உச்சியில் பவனி வந்தவர். ஸ்ரீதரின் படம் என்றாலே அதற்கென்று ஒரு தனித்தன்மை, கலையம்கள் இருந்தது. ஸ்ரீதரின் படங்கள் மக்களைப் பெருமளவில் கவர்ந்ததற்கு இதுதான் முக்கிய காரணம்.
பிரம்மாண்டமான அரங்குகள், வண்ணவண்ண ஆடை அலங்காரங்கள், பணத்தை வாரியிறைக்கும் படாடோபங்கள் இவையெல்லாம் இல்லாமல் இவருடைய படங்கள் சிக்கனமான முறையில் எழுதி, இயக்கி, தயாரிக்கப்பட்டு வெளி வந்து பெருமளவில் வெற்றி கண்டன. அதுமட்டுமல்லாமல், திரைப்பட சரித்திரமும் படைத்தன. அந்த வகையில் வலம் வந்த படங்கள் கல்யாணப் பரிசு (1959), நெஞ்சில் ஓர் ஆலயம் (1962), தில் ஏக் மந்திர் (1963), காதலிக்க நேரமில்லை (1964), வெண்ணிற ஆடை (1965), ப்யார் கியா ஜா (1966) போன்றவை.
தனக்கென்று ஒரு சிறப்பான தனியான பாதையை வகுத்துக் கொண்டு படங்களை உருவாக்கியவர் டைரக்டர் ஸ்ரீதர். ஆழமான கதை அமைப்பு, காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சி வெள்ளங்களில் சிக்கிக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரங்கள், பளிச்சென்று சுருக்கமாக சுடர்விட்டு சொல்லவேண்டியதை சொல்லும் வசனங்கள், இனிமையான பாடல்கள், புதுமையாக, கவர்ச்சிகரமாக கேமராவை அளவோடு விளையாடவிட்டு நடத்தப்பட்ட படப்பிடிப்புகள், இரட்டையர்த்த வசனங்கள் இல்லாமல், ஆபாசத்தின் நிழலே படாமல் சிரிக்க வைக்கும் நகைச் சுவைக் காட்சிகள்... இப்படிப் பட்ட குணாதிசயங்களை தம் படங்களில் புகுத்தி தமிழ்த் திரைக்கே புகழையும் பெயரையும் பெருமையையும் வாங்கித் தந்தவர் ஸ்ரீதர்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல், ஹ’ந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிப் பாதையில் பவனி வந்தார். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஹ’ந்தித் திரை உலகில் இவருடைய பெயரும் புகழும் செல்வாக்கும் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தன. அந்த கால கட்டத்தில் வெற்றியின் உச்சியில் உலாவிக் கொண்டிருந்த ஹ’ந்தி திரைப்பட நட்சத்திரங்கள் ராஜேந்திரகுமார், ராஜ்குமார், மீனா குமாரி, மெஹ்மூத் போன்றவர்கள் ஸ்ரீதரின் படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், அதை ஒரு பெருமையாகவே கருதினார்கள்.
சித்தாமூர் வீரராகவ ஸ்ரீதர், செங்கல்பட்டு ஜில்லாவில் காஞ்சி மாநகரத்திற்கு அருகிலுள்ள நெல்வாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை செங்கல்பட்டிலேயே படித்தார். பள்ளிப்பருவத்திலேயே கதைகள் எழுதுவது, நாடகங்களை எழுதி, இயக்கி, தயாரித்து, நடிப்பது இவைகளிலெல்லாம் பெருமளவில் நாட்டம் காட்டினார்.
பள்ளிப் பருவத்தில் இவரது தோழர் சடகோபன், பின்னாளில் அவருடனே பணிபுரிந்து சித்ராலயா கோபு என்ற பெயரில் படங்களை எழுதி, இயக்கி, ஓரளவு வெற்றியும் பெற்றார் சடகோபன்.
சினிமாவுக்கு வருவதற்காக நாடக உலகில் புகுந்து பெயரும் புகழும் பெற வேண்டும் என்ற ஆவல், ஸ்ரீதரை ஒரு ஆவி போல பிடித்துக் கொண்டது. அந்த எண்ணத்தோடு பல நாடகங்களை எழுதினார். அதில் ஒரு நாடகத்தை எடுத்துக் கொண்டு நாடக உலகின் ஜாம்பவான் என்று புகழப்படும் டி.கே. சண்முகத்தை சந்தித்தார். இது நடந்தது 1950களின் ஆரம்ப நாட்களில்.
முதல் பக்கத்தில் இருந்த அந்த நாடாகக் கதையின் கருவைப் படித்த உடனேயே டி.கே. எஸ்ஸ•க்குப் பிடித்துவிட்டது. மேடை நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்று சில மாற்றங்களை சுட்டிக்காட்டி, அந்த நாடகத்திற்கு மெருகூட்டச் செய்தார் அந்த நாடக உலக மேதை. அந்த நாடகம் மேடையேறி பெருமளவில் வெற்றி பெற்றது. அதுதான் டி.கே.எஸ் சகோதரர்களின் பல வெற்றி நாடகங்களில் ஒன்றான ரத்தபாசம்.
அன்னாளில் பிரபலமாக இருந்து, இன்று அடியோடு மறக்கப்பட்ட இயக்குனர் ஆர்.எஸ். மணியின் கைவண்ணத்தில் 1954ஆம் ஆண்டு ரத்தபாசம் திரைப்படமாக வெளிவந்தது. இந்தப் படத்தில்தான் கதை வசனகர்த்தாவாக ஸ்ரீதர் திரை உலகப் பிரவேசம் செய்தார். இதில் கிடைத்த பெயரும் புகழும் அதே ஆண்டில் வேறு படங்களுக்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தன. அவற்றில் ஒரு வெற்றிப் படம் சி.எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த எதிர் பாராதது(1954).
அந்த நாளில் அடையாறில் இருந்த ஸ்டுடியோ நெப்டியூன் மிகவும் பிரபலமான ஸ்டுடியோக்களில் ஒன்று. தொழில் காரணமாக இங்கு வந்து போய்க் கொண்டிருந்த ஸ்ரீதருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் தான் சத்யம், நஞ்சுண்டையா, வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. இவர்களுக்கு பிரபல இயக்குனரான தாந்தினேனி பிரகாசராவின் நட்பு கிடைத்தது. அவருடைய முற்போக்குப் படமான பரிவர்த்தனா என்ற தெலுங்குப் படத்தை அந்தப் புதிய நண்பர்கள் தமிழில் லட்சாதிபதி என்ற பெயரில் டப் செய்தார்கள். அந்த டப்பிங் படத்திற்கு வசனம் எழுதியவர் ஸ்ரீதர். இது திரைப் பட வரலாற்றில் பலர் அறியாத ஒரு விஷயம்.
அந்த நண்பர்கள் எல்லோருமாக சேர்ந்து வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதில் ஸ்ரீதரும் ஒரு பாகஸ்தர். வீனஸ் பிக்சர்ஸின் வெற்றிப் படம் அமரதீபம் (1966). கதை வசனம் ஸ்ரீதர்; இயக்கியவர் டி. பிரகாச ராவ். இதில் சிவாஜிகணேசன், சாவித்திரி, பத்மினி, சித்தூர் வி. நாகையா, எம்.என். நம்பியார், கே.ஏ. தங்கவேலு முதலியோர் நடித்தனர். பிரகாசராவின் உறவினரான தாத்தினேனி சலபதிராவ் இசை அமைத்தார். பல பாடல்கள் வெற்றி பெற்றன. இந்த வெற்றிப் படம் அமர்தீப் என்று இந்தியிலும் எடுக்கப்பட்டது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உலக அளவில் தன்னுடைய நாவல்களால் சரித்திரம் படைத்தவர் பிரபல பிரெஞ்ச் கதாசிரியர் அலெக்ஸாண்டர் ட்யூமா. இவருடைய பல நாவல்கள் பெரும் வெற்றிப் படங்களாக ஆங்கிலத்தில் பல முறை எடுக்கப்பட்டன. அந்த வகையில் அவருடைய நாவல்களில் ஒன்று தி மேன் இன் அயன் மாஸ்க். இது ஹாலிவுட்டில் 1939-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை 1940-ல் தென்னிந்திய மூவிமொஹல் என்று அழைக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் முதலாளி டி.ஆர். சுந்தரம் 1940ல் உத்தமபுத்திரன் என்ற பெயரில் எடுத்தார். பி.யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது.
உத்தமபுத்திரன் என்ற அதே பெயரில் அந்தக் கதைக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் கதை வசனகர்த்தாவான ஸ்ரீதர். பிரகாசராவின் இயக்கத்தில் சிவாஜிகணேசன் இரட்டை வேடங்களில் நடிக்க, 1958ல் வெளிவந்த இந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பல காரணங்களினால் வீனஸ் பிக்சர்ஸை விட்டு விலகினார் ஸ்ரீதர். தன்னுடன் பல படங்களில் பல வகைகளில் உழைத்த, வெற்றிக்குக் காரணமாக இருந்த நண்பர்களுடன் கூடி சித்ராலயா என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார் ஸ்ரீதர்.
அதற்கு முன்பாக 1959ல் திரைப்பட இயக்குனராகவும் மற்றுமொரு அவதாரம் எடுத்தார் ஸ்ரீதர். அந்த அவதாரத்திற்கு உபயம் பெரும் வெற்றி பெற்ற கல்யாணப் பரிசு. இதில் ஜெமினிகணேசன், வி.சரோஜாதேவி, விஜயகுமாரி, கே.ஏ. தங்கவேலு, எம். சரோஜா போன்றவர்கள் நடித்தார்கள். கல்யாணப் பரிசு ஒரு முக்கோண காதல் கதை. இந்த அடிப்படை, ஸ்ரீதருடைய பல படங்களில் காணப்படும். இவருடைய படத்தில் ஒரு பிரபலமான பாடலின் முதல் வரி, காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன். ஸ்ரீதரின் படங்களை அலசிப் பார்த்தால் ஏறத்தாழ எல்லாமே இந்தப் பாட்டின் மையக் கருத்தை அடிப்படையாக வைத்திருக்கும்.
உலகின் தலை சிறந்த இயக்குனர்கள் தங்களுடைய படங்களில் ஒரே அடிப்படையில், ஒரே கருத்தில் பல வகையான கதைகளை திரையில் சொல்வார்கள். பிரபல ஹாலிவுட் இயக்குனர், நாடக உலக மேதை என்று புகழப்பட்டு அண்மையில் மறைந்தவர் அமெரிக்கத் திரை, நாடக உலகங்களில் சரித்திரம் படைத்த ஈலியா கேஸன். இவருடைய படங்களும் இதே அடிப்படையில் தான் இருக்கும்.
கல்யாணப் பரிசின் வெற்றியைத் தொடர்ந்து அவருடைய சொந்த நிறுவனம் சித்ராலயா தமிழ்த் திரையுலகின் சரித்திரத்தை மாற்றத் தொடங்கியது. காதல் கதையாக, காஷ்மீரின் இயற்கையழகு படத்தில் மின்ன வெளிவந்தது தேன் நிலவு (1961). இயற்கையின் அழகு சொட்ட உருவாக்கப்பட்ட இந்தப் படம் ஓரளவிற்கு வெற்றி அடைந்த போதிலும் ஸ்ரீதருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. புதிய முறையில், புதிய பாணியில் செலவுகளைக் குறைத்து ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற வெறியோடு செயல்படத் தொடங்கினார். அந்த வகையில் உருவாகி அவருடைய கனவுகளை நினைவாக்கியது நெஞ்சில் ஓர் ஆலயம் (1962). ஏறத்தாழ 28 நாட்களில் ஒரே செட்டில் எடுக்கப்பட்ட படம் இது. இதில் முக்கியமான வேடங்களில் நடித்தவர்கள் புதுமுகமான முத்துராமன், தேவிகா, கன்னட உலகிலிருந்து பெயரோடும் புகழோடும் வந்த கல்யாண்குமார் ஆகியோர்.
நெஞ்சில் ஓர் ஆலயம் கண்ட வெற்றி, ஸ்ரீதரை ஹ’ந்தி திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கத் தூண்டியது. விளைவு, ஹ’ந்தி திரை உலகை பிரமிக்க வைத்த தில் ஏக் மந்திர் (1963). இதில் மீனாகுமாரி, ராஜேந்திர குமார், ராஜ்குமார் ஆகியோர் நடித்தார்கள்.
இந்த வெற்றியால் ஹ’ந்தி உலகில் ஸ்ரீதர் ஒரு பெரும் புள்ளியாகக் கருதப்பட்டார். அந்த வகையில் வெளிவந்த படங்கள் ப்யார்கியே ஜா (1966), நயிரோஷனி (1967), ஸாத்தி (1968), தர்த்தி (1970), துனியா கியா ஜானே (1971), எ ஹரிசால் (1973) போன்றவை.
தமிழ்த் திரைப்படம் வண்ணக் கோலங்கள் பூண்ட போது மங்காத புதுமையோடு தமிழ் மக்களுக்கு படங்களை அளித்தவர் ஸ்ரீதர். அந்தப் படம்தான் காதலிக்க நேரமில்லை (1964).
1965ல் சரித்திரம் படைத்த ஸ்ரீதரின் மற்றொரு படம் வெண்ணிற ஆடை. இதில் கதாநாயகியாக நடித்தவர் தமிழ்த் திரை உலகிலும் அதற்குப் பிறகு பலதுறைகளிலும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா!
பல மொழிகள். பல படங்கள். பல வெற்றிகள், சில தோல்விகள் இப்படி உருண்டது ஸ்ரீதரின் திரைப்பட வாழ்க்கை. அவருடைய மறக்க முடியாத படங்களில் முக்கியமானவை நெஞ்சம் மறப்பதில்லை (1963), போலீஸ்காரன் மகள் (1962), சுமைதாங்கி (1962), கலைக் கோவில் (1964), சிவந்த மண் (1969), உரிமைக் குரல் (1974) போன்றவை.
ஸ்ரீதர் திரைப்படக் கலையை நன்றாக அறிந்தவர். அதுமட்டுமல்லாமல், அதன் நுணுக்கங்களை, அருமையான முறைகளை தன் படங்களில் புகுத்தினார். வசூல் அளவில் வெற்றி பெறாத ஸ்ரீதரின் படம் என்றாலும் அது ஒரு கலையம்சம் நிறைந்த படமாகவே இருந்தது. இதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திசை மாற்றிய இயக்குனர் - ஸ்ரீதர் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஸ்ரீதர், அந்த, படம், வெற்றி, திரைப்பட, தமிழ்த், படங்களில், ஸ்ரீதரின், வகையில், இதில், திரை, ஹ’ந்தி, இவருடைய, கல்யாணப், படங்களை, படங்கள், இந்தப், அவருடைய, வெற்றிப், நாடக, உலகில், சரித்திரம், வீனஸ், பெயரில், பெருமளவில், கொண்டிருந்த, தமிழ், ஆலயம், பரிசு, இயக்குனர், பிரபல, நெஞ்சில், வெளிவந்த, வேண்டும், இருந்த, நண்பர்கள், பெரும், வேடங்களில், தனக்கென்று, பிரகாசராவின், அதில், வசனம், புகழும், இயக்கி, நேரமில்லை, எழுதி, படத்தில், ஏறத்தாழ, போன்றவை, கொண்டு, சித்ராலயா, பெயரும், காதலிக்க, காதல், தமிழில்