முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » ஓசோன் படலத்தைக் காப்போம்
பொதுவான கட்டுரைகள் - ஓசோன் படலத்தைக் காப்போம்
- ஜி. ஆனிஜோஸ்பின்
விண்ணில் நடப்பது கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அந்த அதிசயங்களைக் காண நம் மனம் ஏங்கிக் கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் செவ்வாய்க் கிரகம் பூமிக்கருகில் வந்த போது, அதனைப் பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஓசோன் படலம் மெலிவடைந்து கொண்டிருக்கிறது.
ஓசோன் நீல நிறமுள்ள வாயு. இதுவும், ஆக்சிஜனின் ஒரு வடிவமே. மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தால் அது ஓர் ஓசோனாகும். இயற்கையிலேயே வாயு மண்டலத்தில், சூரிய ஒளிச்சக்தியினால் ஓசோன் உருவாகிறது. பூமியிலிருந்து 20 - 40 கி.மீக்குள் ஓசோன் படலம் காணப்படுகிறது. வாயு மண்டலத்தில் (15 - 50 கி.மீ) காணப்படும் மொத்த ஓசோனில் 90 சதவிகிதம் இப்படலத்தில் உள்ளது.
சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை பூமிக்கு வராமல் ஓசோன் படலம் வடிகட்டித் தடுக்கிறது. புற ஊதாக்கதிர்கள் நேரிடையாக நம் மீது விழுமானால் தோல் புற்று நோய், கண் வியாதி போன்றவை ஏற்படும். மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும், தாவரங்களும் பாதிக்கப்படும். நீரில் இக்கதிர்கள் ஊடுருவிச் சென்றால், நீர்வாழ் உயிரினங்களின் உணவிற்கு ஆதாரமான, நுண்ணுயிர்களும், நுண்தாவரங்களும் அழிக்கப்படும்.
இயற்கையிலேயே, வாயு மண்டலத்தில் உள்ள குளோரினால், ஓசோன் மூலக்கூறுகள் அழிக்கப்படவும் செய்கின்றன. ஆனால் அழித்தலும், உருவாக்கலும் மாறி மாறி சீரான விகிதத்தில் நடைபெறுகையில் ஓசோன் படலம் சமநிலையில் இருந்து வந்தது. ஆனால் 1980-களுக்குப் பின் இச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைய ஆரம்பித்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மனித செய்கைகளால் வாயு மண்டலத்தில் செலுத்தப்பட்ட மாசுப்பொருள்களில் உள்ள குளோரின் அணுக்கள் அதிகரிக்க அதிகரிக்க, ஓசோன் அழியும் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு குளோரின் அணு, ஒரு லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கும் திறன் படைத்தது.
ஓசோன் படலத்தை அழிக்கும் பொருள்களில் குளோரோஃப்ளூரோ கார்பன் என்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனப் பொருளே, மிக முக்கியமானது. குளோரோஃப்ளூரோ கார்பன் என்பது வாயுவாகவோ அல்லது திரவமாகவோ இருக்கலாம். சிஎஃப்சி-12 மற்றும் சிஎஃப்சி-11 ஆகியவையே மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் குளோரோஃப்ளூரோ கார்பன்களாகும். முக்கியமாக, குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் போன்றவற்றில் குளிர்ச்சியைத் தருவதற்காக இவை பயன்படுத்தப்படுகின்றன. வாசனையை அளிக்கும் ஸ்ப்ரே, அறையில் நறுமணமூட்டப் பயன்படுத்தும் தெளிப்பான்கள், வாசனைத் திரவியங்கள், தொலைபேசி மற்றும் கம்ப்யூட்டர் பாகங்களைச் சுத்தப்படுத்தும் திரவம், நுரை மெத்தை, நுரை இருக்கை, தூக்கியெறியும் ஸ்டைரோஃபோம் கப்புகள், கட்டும் பொருள்கள், தீயணைப்பான் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஓசோன் படலத்தைக் காக்க எண்ணிய உலக நாடுகள் 1987-ல் கனடாவிலுள்ள மாண்ட்ரீலில் கூடி ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஓசோன் படலத்தை அழிக்கும் குளோரோஃப்ளூரோ கார்பன்களைப் படிப்படியாகக் குறைத்து 2010-க்குள் அவற்றை முற்றிலுமாய் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. ஓசோன் படலத்தை அழிக்கும் பொருள்களைப் பயன்படுத்துவதையும், உற்பத்தி செய்வதையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுப் பொருள்களைக் கண்டறியும் தொழில் நுட்பங்களும் ஆராயப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை 6 நிறுவனங்கள், ஓசோனை அழிக்கும் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 55 நிறுவனங்கள் ஓசோனை அழிக்கும் பொருள்களைப் பயன்படுத்துகின்றன. இந்நிறுவனங்கள், ஓசோனை அழிக்கும் பொருள்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.
2000-ம் ஆண்டின் ஆய்வின்படி, ஓசோன் ஓட்டையின் அளவு 28.3 மில்லியன் ச.கி.மீ அளவாகும். இது, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல ஏறக்குறைய மூன்று மடங்கு பெரிதாகும். இன்றைய தினத்தில் ஓசோனை அழிக்கும் பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் கூட, நடந்து முடிந்திருக்கும் அழிவைச் சீரமைத்து மறுபடியும் ஓசோன் படலத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது 2050-ல் தான் சாத்தியமாகலாம் என்று கருதப்படுகிறது.
மாண்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தான செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக அனுசரிக்கும்படி 1994 டிசம்பர் 19-ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளில் நாடுகள் தங்களை அர்ப்பணிப்பதற்காகவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு ஓசோன் தினச் செய்தி இதுதான்: வானத்தைக் காப்பாற்றுங்கள். நமது குழந்தைகளுக்கு இந்த ஓட்டையால் என்ன ஆகுமோ?
ஓசோன் படலம் மெலிவடைவதால் ஊடுருவும் புற ஊதாக்கதிர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் உலக சுகாதார நிறுவனமும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பும் ஈடுபட உள்ளன. ஏனெனில், மிகச் சமீபத்திய அறிக்கையின்படி, இவ்வாண்டில் ஓசோன் ஓட்டை வரலாறு காணாத அளவிற்குப் பெரிதாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான நுரை மெத்தை, தலையணைகளுக்குப் பதிலாக, பாரம்பரியப் பஞ்சு மெத்தை மற்றும் தலையணைகளைப் பயன்படுத்துவதையாவது நாம் செய்யலாமே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓசோன் படலத்தைக் காப்போம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஓசோன், அழிக்கும், வாயு, படலம், குளோரோஃப்ளூரோ, ஓசோனை, நாடுகள், மண்டலத்தில், பொருள்களைப், ஐக்கிய, படலத்தை, அதிகரிக்க, நுரை, மெத்தை