பொதுவான கட்டுரைகள் - நன்மையே செய்யும் உலகம்
- ஸ்ரீ. மதிவாணன்
உலகுக்கு ஒவ்வொரு மனிதனும் கடமைப் பட்டிருக்கிறான். உலகு எனும் வார்த்தையைச் சமூகக் கட்டமைப்பு என்னும் பொருளில் உணரும் பட்சத்தில், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு மனிதனுக்கும் கடமைப்படுகிறான். புவி அறத்தின் படியே, மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும், இயற்கை அமைப்பிற்கும், அதை வகுத்த இறைக்கும் கட்டுப்பட்டுள்ளன.
மனிதனுக்கு மட்டும் உயர்ந்ததும் சூட்சுமத்தின் பாற்பட்டதுமான ஆன்ம நிலையைச் சேர்த்துத் தந்துள்ளான் இறைவன். அந்த இறைவனுக்குப் பட்ட கடனைத் தீர்க்க வேண்டிய கடமையும் வழிமுறைகளும் மனிதனுக்கு, வாழுமளவும் உள்ளன.
மனிதனின் வாழ்வை, மூன்று விதமாகப் பிரித்துக் கொள்ளலாம்.
1. தன் சொந்த மகிழ்ச்சிக்காக எப்படியும் வாழலாம்; எதையும் செய்யலாம் என்பது கீழ்நிலை வாழ்க்கை நிலை.
2. இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நல்லொழுக்க வரைமுறைக்குள் வாழ்வையமைத்துக் கொண்டு அதற்கேற்ப வாழ்தல் நன்னிலை வாழ்வு நிலை - இந்த நிலை, பிறருக்குத் துன்பமளிக்காது.
3. உலகம் மற்றும் இறைவனுக்குத் தாம் பட்ட கடனைத் தீர்த்தல் மட்டுமின்றி, உலகம் தனக்குக் கடன்படும் வண்ணம் வாழ்வை உயர்ச்சியின் உச்சியில் வாழ்ந்து நிறைதல் மேல்நிலை வாழ்வு நிலை!
உலகில் மானுடம் தொடங்கிப் புல் பூண்டுகள் ஈறாய் அனைத்துச் சக்திகளுக்கும் எந்தத் தீங்கும் செய்யாது வாழ்தலே மனித இனம் உலகுக்குச் செய்யக்கூடிய பேருதவியாகும். மனிதன் மனம் வைத்தால், நிச்சயமாக இவ்வுதவியை உலகுக்குச் செய்ய முடியும்.
காடு மலைகளை வெட்டி விற்காமல், நதிநீரைப் பதுக்காமல், சாயக்கழிவை ஆற்றில் கலக்காமல், கண்டவற்றை எரித்து ஓஸோன் படலத்தை ஓட்டையிடாமல், ஜாதீய குண்டாயிஸத்தால் அப்பாவி ஏழையரின் மனித வளத்தை அழிக்காமல், அனைவருள்ளும் அனைத்தினுள்ளும் இறைமையை உணர்ந்து வாழுதலே மனிதன் உலகிற்குச் செய்யக்கூடிய பெரும் சேவை. அதற்கு மேலாகத் திருக்குறள், நாலடியார் போன்ற நீதிச் செல்வங்கள், உலகினரின் நல்வாழ்விற்கு ஆதாரமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நாட்டின் மீதான சிறந்த நிர்வாகம், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக அரவணைக்கும் ஆன்மிகம் போன்றவற்றின் கர்த்தாக்களாயிருப்பவர்கள் உலகிற்குப் பேருதவிகளை, உலகுள்ள காலம் வரை செய்தோராவர்! துன்ப - துயரங்கள், பிணி - மூப்பு, பசி - தாகம், ஆசை - அறியாமை, பிறப்பு - இறப்பு போன்ற அத்தனை உலகியல் துன்பங்களுக்கும் (இறப்பு நீங்கலாக) விடை காணக் கூடியவர்கள் மேற்கண்ட சாதனை நாயகர்களே!
உலகம் இனிதா, கொடிதா அன்றி இரண்டுமேயற்றதா எனில், நிச்சயமாக இனியதே! பாரதி கூறுகிறார், இவ்வுலகு இனிது; நிலம் இனிது; நீர் இனிது; காற்று இனிது என!
உலகைப் பற்றிய பார்வை, யுதிஷ்டிரனுடையதாயும் இருக்கக் கூடாது; துரியோதனனுடையதாகவும் இருக்கக் கூடாது. யுதிஷ்டிரனோ, எல்லாவற்றிலும் நல்லதையே பார்த்துத் துரியன், சகுனியையும் நம்பிச் சூதாடிக் கெட்டுப் போனான். துரியோதனனோ, சகல மனிதருள்ளும் தீமையையே பார்த்துப் பாண்டவர்களுக்குத் துன்பமிழைத்து முடிந்தே போனான். எனவே உலகைப் பற்றிய பார்வை இறைவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையதாக இருக்க வேண்டும். கிருஷ்ண பகவான் மட்டுமே நல்லவை யாவன, தீயவை யாவன என உணர்ந்து, நல்லோர்க்குத் துணை நின்று பாரதப் போரையும் நடத்தினான்.
விளம்பரமும் மேடைப் பேச்சும் தாம் அரசியலாரின் சேவையாக இருக்கின்றன என்பது உண்மையே! ஆனால் அவை தற்சேவைகளே! ஆத்ம சாதகர்களும் நல்லுளம் கொண்டோரும் அவ்விளம்பரங்களையும் மேடைப் பேச்சுகளையும் கையிலெடுப்பது தவறன்று! ஆசான் பாரதி, உடையவர் ஸ்ரீராமாநுஜர், வீரத்துறவி விவேகானந்தர் போன்றோர், விளம்பரங்களை மக்கள் நலம் சார்ந்த இறைநெறிக்கும், இறைவனின் புகழுக்கும், மேடைப்பேச்சுகளைப் பொதுச் சேவைக்கும் பயன்படுத்தினர். எனவே ஒரு சாதனம், அதைப் பயன்படுத்துவோரைப் பொறுத்தே நல்லதையோ அல்லதையோ செய்கிறது.
கொடுப்பவரின் கைகள் - உயர்ந்தும், வாங்குபவரின் கைகள் தாழ்ந்துமிருப்பது ஏற்றத்தாழ்வைக் காட்டுவதில்லை. மாறாக, வாங்கும் கைகள், புண்ணியம் எனும் பொருளைத் தானமளிப்போர் பெற உதவி செய்கின்றன. நான் கொடுக்கிறேன், நான் கொடுத்தேன் எனப் பெருமிதமுறுவோர், விளம்பரம் ஏதுமின்றி உயரத்தே நின்று மழையைக் கொடுக்கும் முகில்களையும், வெப்பம் மற்றும் ஒளியைத் தரும் சூரியனையும், குளிர்ச்சி மற்றும் ஒளியைத் தரும் சந்திரனையும் மனத்தில் எண்ணித் தருக்கைத் துறக்க வேண்டும்.
உலகம் பரிபூரணமாகவே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. பரிபூரணமாக இயங்கும் வகையிலும் இறைவனால் பணிக்கப் பட்டுள்ளதெனினும், மனிதன் உலகின் இயற்கை நிலையையும் நடைமுறைக் கூறுபாடுகளையும் தன் சுயநலத்திற்காக மாற்றி அமைக்க முயலாதவரை உலகு மனிதனுக்கு நன்மையையே செய்யும்.
மனிதன் எத்தனை தான் வலிமையுடையவனாக இருப்பினும், உலகின் இயற்கை மற்றும் இயல்புச் சமநில மாறாத வரையே அவனது கொற்றம் செல்லும். எனவே மனிதன், தனது குழு சார்ந்த கொள்கை வெறி என்பதை மாற்றி, உலகநலம் சார்ந்த கொள்கை நெறியைக் கடைப்பிடிப்பதே அவனை இறைமையை நோக்கி இட்டுச் செல்லும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நன்மையே செய்யும் உலகம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - மனிதன், இனிது, உலகம், நிலை, சார்ந்த, கைகள், இயற்கை, மனிதனுக்கு, வேண்டும், ஒவ்வொரு