முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » வெள்ள நீரையும் அறுவடை செய்யலாம்
பொதுவான கட்டுரைகள் - வெள்ள நீரையும் அறுவடை செய்யலாம்
- மு. சுவாமிநாதன்
ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி இன்றயை தினத்தில் 22 நாடுகளில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு! இன்னும் 10 ஆண்டுகளில் 58 நாடுகளாக இது விரிவடையும்.
இந்தியத் துணைக் கண்டத்தின் நீர் ஆதாரத்தில் நாம் பயன்படுத்துவது வெறும் 5 விழுக்காடு மட்டுமே. வீணே கடலில் கலப்பதோ 95 விழுக்காடு. இது இந்திய நிலை என்றால், சிங்காரச் சென்னையின் நீர் ஆதாரங்களில் 10 விழுக்காடு மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் வாழ்வோரையும், வந்து போவோரையும் சேர்த்து 1 கோடிப் பேருக்கு நீர் வழங்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பில் தமிழக அரசு உள்ளது.
மக்கள் தொகை 10 லட்சம் பேருக்கு மேல் உள்ள எந்த ஒரு நகரையும் நிர்வகிப்பது மிகமிகக் கடினம் என்பது மேனாட்டு அறிவியலாளர்களின் கூற்று. இந்த நிலையில் அரசுக்கு அனுசரணையாக மக்கள் சக்தி திரும்ப வேண்டும். சென்னையின் ஆண்டுத் தேவை எவ்வளவோ, அதே அளவு மழை பொழிகிறது. சென்னையின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு 1,300 மி.மீ. இதில் 5 விழுக்காடு அளவே பயன்பாட்டுக்கு வருகின்றது. மீதி எல்லாம் வங்கக் கடலுக்கே சொந்தம்.
கங்கை பெருக்கெடுக்கின்றது, காவிரி பெருக்கெடுக்கின்றது, என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். மக்கள் நடமாடும் சாலைகள் பெருக்கெடுப்பதைக் கேட்டதுண்டா? அந்தக் காட்சியைச் சென்னையில் தான் காணலாம். தண்ணீர் வேண்டி யாகங்கள் செய்கின்றோம். அமிர்தவர்ஷினி பாடி மேகத்தைக் கூட்டுகின்றோம். கழுதைகளுக்கும், பருந்துகளுக்கும் திருமணம் நடத்தி விருந்துண்டு மகிழ்கின்றோம். ஆனால் சாலையில் வீணாகப் போகும் தண்ணீரைத் தேக்க என்ன முயற்சி எடுத்தோம்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மழை நீர் சேகரிப்புக்காக அரசு கடும் சட்டம் இயற்றும் நிலையல்லவா உருவாகி இருக்கிறது. இன்று வீடுகளில் மழைநீர் சேகரிப்பு மட்டுமல்லாமல் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளநீரையும் அறுவடை செய்யும் மகத்தான திட்டமும் தொடங்கப்பட வேண்டும் - அதுவும் உடனடியாக! மக்கள் சக்தியின் முழு உந்துதலோடு! இதற்கு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு மிகவும் தேவை.
மழைநீர் வடிகாலில் எண்ணற்ற துளைகளிட்டு, வீணாகும் நீரைப் பூமியில் செலுத்த ஆணை பிறப்பிப்பதும் அரசின் தலையாய கடமை. அது மட்டுமின்றி இனி மழைநீர் வடிகால் அமைப்பதற்குப் பதிலாக சாலையோர நீர் அறுவடை அமைப்புகளை உருவாக்குவது மிகுந்த பயன் தரும்.
இன்றைய நிலையில் பூமி தானே உறிஞ்சுவது வெறும் 5 விழுக்காடே. வீடுகளில் சேமிக்கப்படுவதன் மூலம் மேலும் 10 விழுக்காடு அளவே கிடைக்கும். மீதமுள்ள 85 விழுக்காடு சென்னையின் சாலைகள் வழியே ஓடி வங்கக்கடலை அடைகிறது. சாலையோரத் திட்டத்தின் மூலம் 75 விழுக்காடு அளவிற்கு அறுவடை செய்ய இயலும். இதன் பலனாக பக்கிங்ஹாம், கூவம், அடையாறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுக்காது. நீர் தேங்காமல் இருப்பதால் சாலைகள் பழுதடையாது. கொசுத்தொல்லை அறவே இருக்காது.
மரம் இன்றி மழை கிடையாது. மழை மேகங்களை ஈர்க்கின்ற சக்தி மரங்களுக்கு மிக அதிகம். எந்த ஒரு நாட்டிலும் 33 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும். நம் நாட்டில் காட்டிலாகா உருவாவதற்கு முன்பு 48 விழுக்காடு அடர்ந்த காடுகள் இருந்தன. ஆனால், இன்றோ 17 விழுக்காடு காடுகளே உள்ளன. பின்பு எங்கிருந்து மழை பொழியும்?
இதனை உணர்ந்ததால் தான் நம் அரசர்கள், ஊர்ச்சபை மூலம் ஒவ்வொரு திருமணத்திற்கும், அரசு ஆணைகளைப் பானைகளிலிட்டு, கூடவே மரக்கன்றுகளையும் அனுப்பி திருமணச் சடங்காக மரங்களை வளர்க்கச் செய்தனர். இதுவே அரசாணி மரம் என்றும், அரசாணி-பானை என்றும் அழைக்கப்பட்டது.
எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்டான், சிரியா போன்ற பாலைவனப்பகுதியின் மையத்தில் புதிதாக இஸ்ரேல் நாடு முகிழ்ந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் தலைக்கு 100 மரமாவது வளர்ப்போம் என்பது தான். இன்று அந்நாடு பாலைவனத்தின் சோலையாக, விவசாயத்தில் உலகின் வழிகாட்டியாகத் திகழ்கிறது. காரணம் - மக்கள் சக்தி!
நம் மாநிலத்திலும் ஒருங்கிணைந்த செங்கை மாவட்டத்தில் 6,000 ஏரிகள் அமைக்கப்பட்டன. அதுவும் பொக்கிளின், புல்டோசர் போன்ற இயந்திர சாதனங்கள் இல்லாத காலத்தில்!
நிற்க இடமும், நீண்ட கடப்பாரையும் கொடுத்தால், இந்தப் பூமியைப் பிரபஞ்சத்தில் வேறு ஓர் இடத்திற்கு நகர்த்திக் காட்டுகிறேன் என்றான் ஒரு கிரேக்க அறிஞன். மக்கள் பங்கேற்காத எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறாது. அரசு என்ற இடமும், மக்கள் சக்தி என்ற நீண்ட கடப்பாரையும் கிடைத்து விட்டால் வீதிகளில் வீணாக ஓடி, கடலில் கலக்கும் வெள்ள நீரைத் தன்னார்வத் தொண்டர்களால் நிச்சயம் சேமிக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெள்ள நீரையும் அறுவடை செய்யலாம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - விழுக்காடு, மக்கள், நீர், சக்தி, அரசு, சென்னையின், மழைநீர், அறுவடை, தான், மூலம், எந்த, நிலையில், வேண்டும், சாலைகள்