முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » ஆறுதலில் செய்வோம் மாறுதல்
பொதுவான கட்டுரைகள் - ஆறுதலில் செய்வோம் மாறுதல்
- எஸ். ஸ்ரீதுரை
தற்காலத்தில் - நோய்வாய்ப்பட்டவர்களோ, விபத்து அல்லது உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்களோ, தங்களுக்கு ஆறுதல் சொல்ல வருபவர்களிடம் படும்பாடு சோகத்திலும் பெரும் சோகம்.
ஆறுதல் கிடைக்காதது மட்டுமன்றி, மனவருத்தங்களின் ஆழ அகலங்கள் அதிகப்பட்டுப்போவதுதான் மிச்சம். தெரிந்தோ தெரியாமலோ தனிமனித சோகங்களை ஆறவிடாமல், அவற்றை நீடித்துப் பழுக்கச் செய்வதில் நமக்கு ஒரு சுவராசியம் ஏற்பட்டுவிட்டது. பாதிக்கப்பட்டவர் நாமாகவோ, நம்மைச் சேர்ந்தவராகவோ இல்லாத பட்சத்தில், அந்தப் பாதிப்புகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களில் ஓயாமல் அலசத் தயாராகிவிடுகிறோம் - பாதிக்கப்பட்டவருடன் கூட. பல சமயங்களில் கடமை அல்லது சம்பிரதாயத்திற்காகவும் வெகு சில சமயங்களில் உள்ளார்ந்த அக்கறையுடனும் கூறப்படுகின்ற இத்தகைய ஆறுதல் வார்த்தைகள், தங்களது அர்த்தத்தைத் துறந்து வெகுகாலமாகிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் மனப்புண் விரைவில் ஆறி, அவர்களும் மற்றவர்களைப் போன்ற இயல்புநிலைக்கு விரைவாக மாறுவதற்கு எதுவழி செய்யுமோ அதுதான் உண்மையான ஆறுதல் மொழி.
உதாரணத்திற்கு - நமக்குத் தெரிந்த ஒருவர் புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களைச் சந்திக்கும்போது, புற்றுநோய் என்றால் அவ்வளவுதான், பிழைப்பது கடினம் என்று தனக்குத் தெரிந்த சகல புற்றுநோய் வகைகளையும் அதன் கஷ்டங்களையும் வரிசைப்படுத்துவது கூடவே கூடாது. நாம் கூறுவது உண்மையாகவே இருந்தாலும், அதில் ஆறுதலைவிடக் குரூரமே எஞ்சி நிற்கும்.
மாறாக - புற்றுநோய் பாதித்த பிறகும், போராடி உயிர் மீண்ட ஒரு சிலரைப் பற்றிக் கூறலாம். இதயநோய் உள்ளிட்ட பிற நோயாளிகள் விஷயத்திலும் இப்படிப்பட்ட உற்சாகம் தரும் தகவல்களைத்தான் தரவேண்டும்.
ஆனால் இதைக்காட்டிலும் மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. கூடியவரை, நாம் மேற்படி நோயாளிகளைச் சந்திக்காமல் இருந்துவிடுவது நல்லது. அதற்குப் பதில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் உறவினர், மருத்துவர் போன்றவர்களைச் சந்தித்து நமது நல்லெண்ணத்தைக் கூறலாம்.
ஏனெனில் - எந்த நோயாளிக்கும் தன்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் தனது அவஸ்தைகளை விலாவாரியாகக் கூறவேண்டும் என்ற அவா இருக்கும். ஆனால் ஒவ்வொருவரிடமும் முழுதாக எடுத்துக்கூறக்கூடிய தெம்பு இருக்காது. விசாரிக்கும் ஒவ்வொருவரிடமும் நாலுவார்த்தை பேசினால் கூட, அந்த நோயாளி பலவீனமாகி, அவரது நோயின் தீவிரம் அதிகமாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல், நமக்குத் தெரிந்தவர்கள் ஆபரேஷன் போன்றவற்றிற்காக ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அவர்களை அங்கேயே போய்த்தான் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் முதலில் நமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் பிறகு அவர்கள் வீடு திரும்பிய பின்பு கூட போய் விசாரிக்கலாம்.
நோயாளிகள் விஷயம் கூடப் பரவாயில்லை. இறப்பு நேர்ந்த வீடுகளில் நமது ஆறுதல்கூறும் முறைதான் வெகுவாக மாறவேண்டியிருக்கிறது.
திருமணம்போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தலைகாட்டாத உறவு, சுற்றமெல்லாம் இறப்புகளின் போது கட்டாயம் ஆஜராகிவிடுவார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் இறந்து போனவரின் இறுதி விநாடிகளை விவரிப்பது என்பது யாராலும் முடியாத காரியம் என்பதை உணரவேண்டும்.
நான் விசாரிச்சபோது, அவன் சரியா முகம் கொடுத்துப்பேசலே.. இன்னும் கூட அவன் கொழுப்பு குறையலே... என்று சிலர் கூறுவது எத்தகைய தவறான கணிப்பு? நெருங்கிய உறவையே இழந்துவிட்ட ஒருவரால், வருகிற அனைவரையும் பன்னீர் தெளித்தா வரவேற்க முடியும்?
இன்னும் ஒரு வகையினர் - இறப்பு வீட்டில் சற்றுநேரம் அழுகை ஓய்ந்தால் கூட அவர்களுக்குப் பிடிக்காது. இறந்தவர் சம்பந்தப்பட்ட ஏதாவது பழைய நினைவுகளைக்கூறி மீண்டும் அங்கு அழுகை ஒலிக்கும் வரை ஓயமாட்டார். பெரும்பாலும் வயதான பெண்மணிகள் இப்படிப்பட்டவர்களே.
காலம் மாறிவிட்டது. நாமும் மாறவேண்டும். இப்போதெல்லாம், விசாரிப்பது, ஆறுதல் கூறுவது போன்றவற்றுக்கு (ஒரே பாலராயின்) இதமான ஓர் அணைப்பு, வயதில் சிறியவர் எனில் அன்புடன் அவர்களின் பின்தலையை வருடுதல், மெல்லிய புன்னகை அல்லது கனிவுடன்கூடிய பார்வை இவற்றில் ஏதேனும் ஒன்றே போதும்.
ஏனெனில் - உடற்புண், மனப்புண் இவற்றை ஆற்றுவதற்குப் பெயர்தான் ஆறுதல். கிளறுவதற்கல்ல.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறுதலில் செய்வோம் மாறுதல் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ஆறுதல், புற்றுநோய், ஒவ்வொருவரிடமும், நமது, கூறுவது, அல்லது