முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » மறைந்திருக்கும் மகிழ்ச்சி
பொதுவான கட்டுரைகள் - மறைந்திருக்கும் மகிழ்ச்சி
- வி.எஸ். ஸ்ரீதரன்
மகிழ்ச்சியை மனத்தின் ஒரு நிலை என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே மனம்தான் அதன் நிலைக்களம், உற்பத்தி மையம் என்று தெரிகிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்ற நிலையை யாரும் தேடுவதில்லை. மகிழ்ச்சிக்குக் காரணமான சில பொருள்களையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தான் தேடுகின்றனர். அதனால்தான் மிகழ்ச்சி அவர்களை விட்டு விலகிப் போகிறது.
மகிழ்ச்சி என்பதை எதிலிருந்தோ கிடைப்பது என நினைப்பதால் தான் அது கிடைப்பதில்லை. கிடைத்தாலும் நிலைப்பதில்லை. மகிழ்ச்சி தன்னிடமே தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தால் மகிழ்ச்சியை அவர்கள் தேடவேண்டிய அவசியம் குறைவு. ஞானிகள், உதாரணம் ஒன்றைக் கூறுகிறார்கள். நாய் ஒன்று எலும்பைக் கடிக்கும் போது அதிலிருந்து கசியும் ரத்தத்தை ஏதோ அந்த எலும்பில் இருந்து வருவதுபோல் நினைத்து சுவைக்குமாம். உண்மையில் தன்வாயில் இருந்து வெளிவரும் ரத்தம்தான் அது என்று அந்த நாய்க்குத் தெரியாது. அதுபோல் வேறு எதிலோ - யாரிடமோ கிடைக்கும் மகிழ்ச்சி, உண்மையில் தன்னிடம் இருக்கும் மகிழ்ச்சிதான் என்பது மனிதர்களுக்குத் தெரிவதில்லை.
பொருள்கள், மனிதர்கள் மூலமாய் மகிழ்ச்சி கிடைக்கும் என்று மகிழ்ச்சிக்காக அவற்றைச் சார்ந்திருப்பவர்கள், அவற்றின் மூலம் தங்கள் மகிழ்ச்சி குறையவும் கூடும் என்பதை உணர வேண்டும். அது கிடைத்தால் - அது நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்பது ஒரு மாயை. நடப்பதிலும் கிடைப்பதிலும் மகிழ்ச்சிக்கு எதிரான அம்சமும் இருக்கலாம். இந்த நிமிடத்துக்கு ஒன்று மகிழ்ச்சியைத் தருகிறது என்றால், அடுத்த நிமிடத்தில் அது மகிழ்ச்சிக்கு எதிரானதாகவும் மாறலாம். நாமாக நம் மகிழ்ச்சியைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பெரும்செல்வம், பெரிய பங்களா, கார் போன்றவை எல்லாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்குத்தேவை மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்ற மன உறுதி தான். மகிழ்ச்சி தான் முக்கியம் என்று கருதுபவர்களுக்கு மனத்தைக் கட்டுப்படுத்தும் பழக்கமும் வந்துவிடும். குறிப்பிட்ட சில விஷயங்களால் அல்லது பிரச்சினைகளால் மகிழ்ச்சி குறையும் என்பதை நடைமுறை ரீதியாக ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். சராசரி மனிதர்கள் எல்லாம் தவஞானிகள் அல்ல. ஆனால், இது நீங்கலாகப் பார்க்கும்போது யார் யார் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பதை ஒரு பொதுப்பார்வையாகப் பார்த்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
மற்றவர்களைத் தேவையில்லாமல் ஆராய்பவன் தன்னுடைய மகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்கிறான்.
மற்றவர்களுக்கு ஏதாவது கிடைத்தாலோ அல்லது யாராவது கொடுத்தாலோ, அதைப் பொறுக்க முடியாதவனுக்கு மகிழ்ச்சி போய்விடுகிறது.
கிடைத்ததிலும் இருப்பதிலும் திருப்தி அடையாத குணம் உள்ளவனுக்கு மகிழ்ச்சியும் நிலைக்காது.
அணுஅணுவாக எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்கொள்பவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. ஏனென்றால், ஏமாற்றம், தோல்வி என்று வரும் போது அவர்கள் மனத்தின் சமநிலை கெட்டுப்போகும்.
தத்துவ மனப்பான்மை இல்லாதவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு, வருவதையும் நடப்பதையும் பார்வையாளனாகப் பார்க்கும், பக்குவம் தத்துவ மனப்பான்மை கொண்டவர்க்கு உண்டு.
பிறர் பேசுவதையும் செய்வதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் தன்மை எவ்வளவு குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சியும் குறையும்.
மனத்தையும் பேச்சையும் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளத் தெரியாதவர்கள் அவ்வப்போது மகிழ்ச்சியை இழக்க நேரிடும்.
மனித உறவுகள் விஷயத்தில் கவனமும் விழிப்புணர்வும் இல்லாது போனால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும்.
மற்றவர்களிடம் குறை அல்லது பிழைகாண்பதை ஒரு வழக்கம் ஆக்கிக் கொள்பவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது.
மற்றவர்களின் விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சரியான அணுகுமுறையைக் கற்றுக் கொள்ளாதவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அளவுக்கு மீறி விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் கவலையைத்தான் வளர்ப்பார்கள்.
மிகையான கோபமும் வெறுப்பும் யாரிடம் இருக்கின்றனவோ அவர்கள் மகிழ்ச்சியைத் தியாகம் செய்ய வேண்டியதுதான். மேற்கூறியவை குறிப்பிட்ட சில உதாரணங்களே. மகிழ்ச்சிக்கு எதிரானவற்றை அடையாளம் கண்டு அவற்றை ஒதுக்கினால் உண்மையான மகிழ்ச்சி என்னும் ஒளி தெரியும். எங்கிருந்தோ வருவது மகிழ்ச்சி என்று நினைப்பவர்களுக்கு அது எட்டாக் கனியாகத்தான் இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மறைந்திருக்கும் மகிழ்ச்சி - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - மகிழ்ச்சி, இருக்க, தான், முடியாது, என்பதை, மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாய், வேண்டும், மகிழ்ச்சியை, அந்த, அல்லது, யார், மகிழ்ச்சிக்கு, இருக்கும்