பொதுவான கட்டுரைகள் - கூடாது இந்த அணுகுமுறை
- வெ. இன்சுவை
தினுசு தினுசாக, வகை வகையாக அழைப்பிதழ்கள்! ஆனால் அழைக்கப்படுபவர்களையும் அந்த அழைப்பிதழ்களுக்கு ஏற்பப் பிரிக்கிறார்களே, அது தான் கொடுமை!
'ஒரு நல்லது, கெட்டதுக்கு நாலு ஜனம் வேண்டும்' - மனித வாழ்க்கையில். எனவே தான் நாம் பலரையும் அனுசரித்துப் போக வேண்டியுள்ளது. கெட்டதிற்கு - மக்கள் செய்தி கேட்டவுடன், அவர்களாகவே வந்து விடுவார்கள். அதற்கு அழைப்புத் தேவையில்லை. ஆனால் நம் வீட்டு சுபகாரியங்களுக்கு நம் உற்றார், உறவினரையும் நண்பர்களையும் முறையாக அழைத்தால் தான் அவர்கள் வருவார்கள்.
மக்கள் எளிமையாக வாழ்ந்த போது, விருந்துகளும் எளிமையாக விரலுக்குத் தக்க வீக்கமாக இருந்தன. வெறும் பாக்கு, வெற்றிலை வைத்துத்தான் உறவினர்களை அழைத்தார்கள். சம்பந்தி, மாமன், மச்சான் போன்ற உறவு முறைகளுக்கு அந்த வெற்றிலையோடு ஒரு ரூபாய் வைத்தும், பணமுள்ளவர்கள் 11 ரூபாய் வைத்தும் அழைத்தார்கள். இது ஒரு சில குடும்பங்களின் பழக்கமாக இருந்தது. ஆனால் அழைப்பிதழ் அடிக்கும் கலாசாரம் தோன்றியதும் தட்டில் 'பத்திரிகையை' வைத்து சிலருக்கும், வெற்றிலை, பாக்கு, பழம், பத்திரிகை என்று முக்கியமானவர்களுக்கும் கொடுத்தனர். அழைப்பிதழை அழகாக (?) 'நோட்டீசு' என்றும் அழைக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அழைப்பிதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு 'மாதிரி' வடிவமைக்கப்பட்டு பின்பற்றப்பட்டது.
நாளடைவில் மக்களின் சக்திக்கும் அந்தஸ்திற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப எத்தனை புதுமைகள்! ஒருவரின் பணத்தைப் பறைசாற்றும் சாதனமாக அழைப்பிதழ் மாற ஆரம்பித்தது. இந்தப் பெருமைக்காகவே போட்டி போட்டுக் கொண்டு வெகு ஆடம்பரமான அழைப்பிதழ்கள் உலா வருகின்றன. கடைகளில் விற்பவற்றில் ஒன்றின் விலை அதிகபட்சம் ரூ.95 ஆகிறதாம்! ஆனால் வசதி படைத்தவர்கள் தங்கள் விருப்பப்படி தயார் செய்யச் சொல்லும் அழைப்பிதழ் ஒன்று ரூ.200 கூட செலவு பிடிக்கிறதாம்!
மக்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அழைப்பிதழ்களை அச்சடிப்பதில்லை. தினுசு, தினுசாக, வகை வகையாக அழைப்பிதழ்கள்! இது அவரவர் விருப்பம். ஆனால் அழைக்கப்படுபவர்களையும் அந்த அழைப்பிதழ்களுக்கு ஏற்பப் பிரிக்கிறார்களே, அது தான் கொடுமை! விலை உயர்ந்த அழைப்பிதழ்களை ஒத்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் மலிவான அழைப்பிதழ்களைத் தங்களின் கீழ் பணிபுரிபவர்களுக்கும், சுமாரான வசதி படைத்த சொந்தங்களுக்கும் கொடுக்கின்றனர். இப்படி ஒரு பேதத்தை உண்டு பண்ணுவது சரியா என்று கேட்டால் ஓர் அழைப்பிதழே ரூ.100 ஆகிறது; இதை எப்படி எல்லோருக்கும் கொடுப்பது என்கின்றனர்.
அந்த அழகிய விலையுயர்ந்த அழைப்பிதழை அவர்கள் சட்டம் போட்டு கண்ணாடிக்குள்ளா வைக்கப் போகிறார்கள்? அழைப்பிதழ் அளிப்பதன் நோக்கமே, நம் வீட்டிற்கு இவர்கள் எல்லோரும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தானே! எல்லோரும் முக்கியம் தானே! அதில் ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? சிலரோ அழைப்பிதழைத் தெரிவு செய்த சிரமத்தில், புதுவையில், நூறில் ஒரு பங்கு கூட மாப்பிள்ளையைப் பற்றி ஆராய்ந்திருக்க மாட்டார்கள். யோசித்து, யோசித்துப் புதிய வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்; மூளையைக் கசக்கி நூதனமாகச் செய்கின்றனர். இதில் உள்ள ஈடுபாட்டை, உபசரிப்பில் காட்டாமல் கோட்டை விட்டு விடுவதும் உண்டு.
அடுத்ததாக அழைத்தல்; சிலர் ஒரு மாதத்திற்கு முன்பே இம் மாபெரும் பணியைத் தொடங்கி விடுவர். மிகவும் முன்னதாகவே கொடுத்தாலும் நாம் மறந்து போய் விடுவோம். இன்னும் சிலரோ வெறும் இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அழைக்கின்றனர். இதுவும் தவறு. ஒரு திருமணத்திற்குப் போக வேண்டுமென்றால் அது உள்ளூராகவே இருந்தாலும், சட்டென மறுநாள் போய் விட முடியுமா? அரை நாள் விடுப்பா? ஒரு மணி அவகாசமா? என முகூர்த்த நேரத்தையும், இடத்தையும் பொறுத்துத் தீர்மானம் செய்ய வேண்டியுள்ளது.
சில குடும்பங்களில் மகன்/மகள் திருமணமென்றால் நெருங்கிய சுற்றத்தை, தம்பதி சமேதரராய் வந்து அழைத்தால்தான் இவர்கள் கணவன், மனைவி இருவரும் போகின்றனர். இல்லாவிட்டால் ஆண் வந்து அழைத்தால், இந்த வீட்டு ஆணும், பெண் வந்து அழைத்தால் இந்த வீட்டுப் பெண் மட்டும் போகின்றனர். அழைப்பிதழை மகள் அல்லது மகன், மருமகன் கொண்டு வந்து கொடுத்தால் அதை மரியாதைக் குறைவாக எண்ணுகின்றனர். தற்போது பெருகி உள்ள வட்டத்திற்கு நேரில் போய்த்தான் கொடுக்க வேண்டும் என்றால் சாத்தியமாகுமா?
அதேநேரத்தில் சில அதிகாரிகள் தம் கீழ் பணிபுரிபவர்களை நேரில் அழைக்காமல் கடைநிலை ஊழியரிடம் கொடுத்து அனுப்புகின்றனர். நிறையப் பேர் வேலை செய்யும் அலுவலகமாக இருந்தால் கூட மன்னிக்கலாம். ஆனால் 20 பேர் உள்ள அலுவலகத்தின் அதிகாரி கூட இப்படிச் செய்கிறார். இருக்கையில் ஆள் இல்லாவிட்டால் மேசை மீது வைத்து விட்டுப் போகலாம், தவறில்லை. கூடவே ஒரு குறிப்பு எழுதி வைத்து விட்டுப் போகலாம். பின்னர் தொலைபேசியில் பேசலாம். நேரில் வந்து அழைக்க முடியாத அளவிற்கு நேரமின்மையா? வேலைப் பளுவா? அலட்சியமா? கௌரவக் குறைச்சலா? இவர்களை இப்படி அழைத்தால் போதும் என்ற எண்ணமா?
புதுமனை புகுவிழா அழைப்பிதழில் பெரும்பாலும் அந்த இடத்திற்குச் செல்லும் மார்க்கத்தையும், பேருந்து எண்களையும் குறிப்பிட மறந்து விடுகிறார்கள். அத்துவானக் காட்டில் வீடு கட்டுபவர்கள் அழைப்பிதழில் இடத்தின் வரைபடத்தையும், எல்லோரும் அறிந்த கட்டடம் அல்லது கடை இப்படி எதையாவது குறிப்பிட்டால் நல்லது.
முன்னைப் போல் கல்யாணம் செய்து பார்ப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. பணம் இருந்தால் எல்லா வேலைகளும் தானாக நடக்கும். நாமென்ன மூன்று நாள்கள் திருமணமா செய்கிறோம்? ஒரே ஒரு வரவேற்பு, ஒரு சாப்பாடுதான் போடுகிறோம்.
எனவே திருமண அழைப்பிதழ் வைக்கும் போது, யாருக்கும் ஊமை வலிகளும், மனக் காயங்களும் ஏற்படுத்தாமல் மரியாதை செய்தால், மனம் மகிழ்ந்து, உவப்புடன் வந்து, உள்ளம் குளிர வாழ்த்தி விட்டுச் செல்வார்கள் - வயிறார உண்டு விட்டும்தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூடாது இந்த அணுகுமுறை - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வந்து, அழைப்பிதழ், வேண்டும், அந்த, தான், அழைத்தால், எல்லோரும், உண்டு, உள்ள, நேரில், வைத்து, மக்கள், அழைப்பிதழ்கள், அழைப்பிதழை, இப்படி