முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » கோயில்களில் பலியிடுதல் - கிட்டப்பார்வை
பொதுவான கட்டுரைகள் - கோயில்களில் பலியிடுதல் - கிட்டப்பார்வை
- அருள்மிகு இறைமையாச்சாரியார்
1. தன்னிலை விளக்கம்:
இந்தியத் திருநாட்டின் பல பகுதிகளிலும், வேறுபட்ட நிலைகளில் வாழ்ந்திட்ட நான், எனது பொருளுலக, அருளுலக அநுபவங்களின் அடிப்படையில், பதினெண்சித்தர், பாரம்பரியத்தில் வந்த குருவழி வாரிசு என்ற தகுதியில் இந்த ஆய்வுக்கட்டுரையினை வழங்குகிறேன். எனக்குத் தெரிந்தவற்றை, புரிந்தவற்றை வெளியில் கூறாமல், இச்சூழலில் மௌனமாக இருப்பது சரியல்ல என்பதனால் தான் இக்கட்டுரையினை எழுதுகிறேன்.
2. ஆதரவும், எதிர்ப்பும் :
இன்றைய நிலையில் கோயில்களில் விலங்குகளையும், பறவைகளையும் பலியிடுவதை ஆதரித்து ஒரு சாராரும், எதிர்த்து ஒரு சாராரும் கருத்துக்கள் கூறிவருகின்றனர். ஆதரிப்பவர்களில் பலர் அநுபவப்பூர்வமாக உணர்ந்தாலும் அறிவுப் பூர்வமான விளக்கம் தர இயலவில்லை; சிலர் காலங்காலமாக இருந்துவரும் பழக்கத்தைத் தடைசெய்யக்கூடாது என்று தான் கூறுகின்றனர்.
எதிர்ப்பவர்களில் புரிந்தும், புரியாமலும் வறட்டுத் தத்துவம் பேசுவோர் சிலருடன், மிருகங்களையும், பறவைகளையும் வதை செய்யக் கூடாது என்று கருணையின் அடிப்படையில் வாதிடும் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்தக்கட்டுரையின் நோக்கம் இது குறித்து அறிவுப்பூர்வமாக, ஆய்வாக விளக்கமளிப்பதே அன்றி யாரையும் புண்படுத்துவது அல்ல என்பதனைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
3. சமயம் என்றால் மனிதரை வாழ்வியலிலும், அருளியலிலும், மனத்தாலும், அறிவாலும் சமைக்கக்கூடியது / பக்குவப்படுத்தக் கூடியது என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது.
நாட்டிற்கேற்ப, சமுதாயத்திற்கேற்ப, பற்பல காலகட்டங்களில் அருளாளர்கள் பல்வேறு சமயங்களைத் தோற்றுவித்திருக்கின்றனர், சமயப் பேருண்மைகளைச் செயல்படுத்தியிருக்கின்றனர்.
அடிப்படையில் பார்த்தால் சமயங்களனைத்தும் வெவ்வேறு வழிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், இறைவனைச் சென்றடையும் குறிக்கோளையே காட்டுகின்றனர்.
தத்தம் சமயம் மட்டுமே உண்மை, பெரியது என்று கூறி மற்ற சமயங்களை இழித்தும், பழித்தும் கூறிச் சண்டையிடுபவர்கள், ஐந்து குருடர்கள் ஒரே யானையின் வெவ்வேறு உடற்பகுதிகளைத் தொட்டுப்பார்த்து அது மட்டுமே யானை என்று பிடிவாதம் பிடித்ததற்கு ஒப்பாகும். இதில் நாத்திகர்கள் யானையின் நிழலைத் தடவிப்பார்த்து ஒன்றுமேயில்லை என்று கூறுபவர்கள் நிலையில் உள்ளனர்.
இன்று அறிவியல் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதில் பலருக்கும் உடன்பாடே. ஆனால் உயிர், ஆன்மா, ஞானம், அருள், அண்டம்,..... முதலானவற்றைப் புரிந்து கொள்ளச் செய்திடும் அருளுலகப் பேருண்மைகளின் முன் இன்றைய அறிவியல் வளர்ச்சி மிகமிகச் சாதாரணமானதே!
இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறவேண்டும் என்றால், கடற்கரையில் அமர்ந்துள்ள குழந்தை ஒரு கைப்பிடி மணலை எடுத்து, அதிலுள்ள துகள்களை ஒவ்வொன்றாக எண்ண முயற்சித்து, இவ்வளவு இருக்கிறதே என்று வியந்தது; ஆனால் கடற்கரைப் பரப்பினில் உள்ள மொத்த மணலைப் பற்றிச் சிந்திக்கவில்லை.
இதை ஏன் தெரிவிக்கிறேன் என்றால், அறிவியல் உண்மைகள் ஒரு கைப்பிடி மணலென்றால், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அருளுலகப் பேருண்மைகள் கடற்கரைப் பரப்பினைப் போன்று எண்ணற்றவை.
அவற்றினைப் புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதும், அறிந்து கொள்வதும், மனித குலத்தின் சத்திக்கு உட்பட்டதே. இவற்றில், யார் யாருக்கு எது பலனளிக்கும், என்பதனைக் கருத்தில் கொண்டு அவரவர்களுக்குப் பிடித்த வழியினைத் தேர்ந்தெடுப்பதே முறையான ஒன்றாகும்.
4. பலியா? உயிர்ப்பலியா?
கோயில்களில் விலங்குகளையும், பறவைகளையும் பலியிடுவதனைக் குருதிப்பலி என்று வேண்டுமானால் குறிப்பிடலாமே தவிர, உயிர்ப்பலி என்று கூறுவது பொருத்தமாகாது. உடலைத்தான் பலியிட முடியுமே தவிர, உயிரைப் பலியிட முடியாது.
வெறும் பொருளற்ற சடங்காக நடத்திவிடாமல், பின்னர் அவற்றை உணவாகச் சமைத்து உண்ணுவது என்றிருக்கும்போது, இறைச்சி உணவு உண்ணாதவர்கள் இதில் குறைகூற என்ன இருக்கிறது?
5. யாருக்குப் பலன்? - சித்தாந்த விளக்கம்:
கல்வி கற்றோர் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும், பல்வேறு நிலைகளில், பள்ளிப் படிப்பை முடித்தோர், பட்டம் பெற்றோர், முனைவர், ... என்று அவரவர் வளர்ச்சிக்கேற்ப அழைக்கிறோம்.
அதேபோல் அருளுலகப் பலன்களைப் பெற்றிடுவதிலும் வெவ்வேறு நிலைகள் உள்ளன என்பதனால், எளிய முறைகளும் தேவை என்பதனை யாரும் மறுக்க முடியாது.
துறவற நிலையில் இருப்பவர்கள் பெருமூபகுதி நேரத்தை இறைவனை வழிபடுவதை விட, இல்லறத்தில் இருக்கும் விவசாயி காலையில் ஒரு முறையும், இரவில் ஒரு முறையும் இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பது மேலானது என்பதனை ஒரு கதை மூலம் கேட்டிருக்கிறேன்.
ஆயினும் இங்கு நான் கதை கூற விரும்பவில்லை. எது முதலில் தோன்றியது என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழர் பண்பாடு, நாகரீகம் மிக மிகப் பழமையானவற்றில் ஒன்று என்பது உலகினர் ஏற்றுக் கொண்ட ஒன்றாகும்.
அறிவியலின்படி தனிமங்களின் அணு பற்றிய உண்மைகளும், மின்சத்தி, அணுசத்தி, ஆகியவற்றின் பயன்பாடுகளும், பயிரினங்களுக்கும் (தாவரங்களுக்கும்) உணர்வுகளுண்டு என்பன போன்ற கண்டுபிடிப்புக்களும் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் தான் உலகத்தினருக்குத் தெரியும்.
ஆனால் பற்பல நூற்றாண்டுகளுக்கு, ஏன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களின் மூதாதையரான பதினெண்சித்தர்கள் மருத்துவம், தத்துவம், சித்தாந்தம், .... முதலானவற்றில் மட்டுமன்றி அருளை அநுபவப்பொருளாகப் பெறுவதற்கும், மிகத் தெளிவாக வழி வகைகள் வகுத்துள்ளனர். அவர்களது விளக்கங்களின் படி, அருளணுக்களும், உயிரணுக்களும், பயிரணுக்களும் இயற்கையில் உண்டு. இவை ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதனால்தான், இறை வழிபாட்டின் போது குருதிப் பலியிடுவதும் பலன்தரக்கூடிய வழிகளுள் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்போது வழிபடுவோர் அருளணுக்கள் மூலம், அருளைத் துய்த்திட வழியுண்டு. அது மட்டுமன்றி பரிணாம வளர்ச்சியில் உடல் மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் அறிவியல் சுட்டிக்காட்டுவது போல, பலியிடப்படும் உயிரினங்களின் உயிர்களும் (பரிணாம வளர்ச்சியில்) நல்ல நிலை பெற்றிடும், நல்ல வளர்ச்சி பெற்றிடும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான கோயில்கள் முன்னோர் வழிபாடு என்பதனால், தெய்வீகச் சுழற்சி (Divine Cycle) மூலம், அருள் வழங்கும் சத்தி பெற்றிட, கோயில்களிலுள்ள வழிபடுநிலை பெற்ற பெரியோர்களுக்கு, பலியிடுதல் உதவுகிறது.
மேலும் பலியிட்டபின், அந்த விலங்குகளை, பறவைகளை முறைப்படி சமைத்து உண்பதனால், அருளார்ந்த படையல் என்பதனால், உணவின் மூலமும் வழிபடும் மக்கள் அருட்பலனைப் பெற்றிட உதவுகிறது.
ஓரிரு சிறு மாற்றங்கள் காலப்போக்கில் வருவது இயல்புதான் என்றாலும், எந்தக் கோயிலுக்கு, எந்தத் தெய்வத்திற்கு எந்த விலங்கினை, எந்தப் பறவையினைப் பலியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு, காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு மாற்றாகப் பூசணிக்காயை வெட்டுவது, புடலங்காயை நறுக்குவது என்ற கருத்துக்களுக்கு இடமேயில்லை.
இப்படி வழிபடுவோருக்கும், வழிபடப்படும் தெய்வங்களுக்கும், பலியிடப்படும் உயிரினங்களுக்கும் நன்மைதரக்கூடிய முறையைக்கூறும் வாழ்வியல் சித்தாந்தத்தை நாம் மறுக்கலாமா? மறக்கலாமா?
6. இறைச்சியுணவு பற்றிய கருத்துக்கள்:
இறைச்சியுணவு பற்றி இன்று உலகில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவற்றுள் கருணையின் அடிப்படையில் விலங்குகளையோ, பறவைகளையோ... கொன்று உண்ணலாமா என்று உள்ளத்தளவில் உணர்ந்து இறைச்சியினை உண்ணாதவர்களையோ, தத்தம் சமயக்கோட்பாட்டின் படி குறிப்பிட்ட உயிரினங்களின் இறைச்சியினை உண்ணாதவர்களையோ நாம் குறை கூறவில்லை, குறை கூறவும் கூடாது. அவர்களது உணர்வுகளை மதிக்கிறேன்.
ஆனால் இறைச்சியுணவு பற்றிய ஒரு சில உண்மைகளை நான் தெரிவித்தே ஆகவேண்டும். மாமிசம், ஊண், கறி,... என்று பலவாறு அழைக்கப்பட்டாலும், 'இறைச்சி' என்று அழைக்கப்படுவதற்குக்காரணம், இறைமையின் பலனைப் பெற உதவக்கூடியது என்பதனால்தான், என்றும் கூறப்படுகிறது.
மேலை நாட்டவரின் ஆராய்ச்சிகளின்படி இறைச்சியுணவு உடல் நலத்திற்குத் தீங்கானது என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. இது முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஏனென்றால் மேலை நாட்டினர் விலங்குகளையும், பறவைகளையும், மீன் போன்றவற்றையும், வளர்ப்பதிலும், உணவூட்டுவதிலும் தொழில் நுட்பவளர்ச்சி என்ற பெயரால் மருந்துகளையும், வேதிப் பொருட்களையும் பெருமளவில் பயன்படுத்துபவர்கள்.
அறுத்தபின் உடனே சமைப்பதுமில்லை; பெரும்பாலும் குளிர்பதனிடுதல் மூலம் வைத்து நாட்கள், மாதங்கள் கழித்துச் சமைப்பார்கள்.
சமையலிலும் வேகவைத்தோ, வறுத்தோ, சுட்டோ அரை குறையாகச் சமைத்து உண்பார்கள். சமைத்த பின்னும், மிஞ்சியவற்றை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் பிறகு சாப்பிடுவார்கள். பின் நோய்கள் வராமல் என்ன செய்யும்?
நமது பண்பாட்டின்படி முறையாக இயற்கைச் சூழலில், இயற்கையான உணவுகளுடன், நோய்த் தடுப்பிற்கு அளவான மருந்துகளையும் பயன்படுத்தும் முறைகளே கையாளப்படுவதுண்டு. (தற்போது இவை பொருளாதார இலாப நோக்கில் மாறி வருவது வருந்தத் தக்கதே!)
மேலும் சமையலிலும் இறைச்சியினால் ஏதும் தீங்கு வரும் வாய்ப்பைத் தடுக்கும் பொருட்டு, மருத்துவ குணம் வாய்ந்த மிளகு, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு... ஆகியவற்றை அளவாகத் தேவையானபடி பயன்படுத்தி, நல்ல உணவாக மட்டுமின்றி, சுவையானதாகவும் தயாரித்திடுகிறார்கள்.
இன்றும் கூட கிராமங்களில், மிஞ்சியவற்றைப் பயன்படுத்துவதில்லை.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் வகைகளையும் அளவாகவே, முறையாகவே பயன்படுத்துவார்கள். எனவே முறையாகப் பயன்படுத்தினால் இறைச்சி உணவும் உடல் நலத்திற்குப் பயன்மிக்கதே ஆகும்.
இறைச்சியுணவைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பது எனது கருத்தல்ல. ஆனால், அது விலக்கப்பட வேண்டிய ஒன்று என்று கட்டாயமில்லை என்பதே எனது கருத்து.
அருள்மிகு இராமலிங்க வள்ளலார் ஊண், பெண் ஆகியவற்றை விலக்கி முழுதும் ஞானமார்க்கத்தில் வாழ்ந்திட்ட ஞானசித்தராவார். சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான வர்த்தமானர், பிற உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற நோக்கில், முழுக்கத் துறவற நிலையில் உதிர்ந்த இலைகளையும், உதிர்ந்த கனிகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்து மகாவீரர் என்றழைக்கப்பட்டார்.
ஆனால் இல்லற வாழ்வில் ஈடுபட்டு, ஓயாமல் உழைப்பவர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் புரதம், கொழுப்புச் சத்துக்கள் மிகுந்த இறைச்சியுணவை அளவாகப் பயன்படுத்துவதை நாம மறுக்கக்கூடாது, வெறுக்கக் கூடாது.
7. இந்தியாவின் பிற பகுதிகளில், பிறமதங்களில் உள்ள நிலை:
இந்தியாவின் பல பகுதிகளிலும், கோயில்களில் விலங்குகள், பறவைகளைப் பலியிட்டு, பின் சமைத்து உண்ணும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
இஸ்லாமிய சமய அன்பர்கள், அவர்களது முறைப்படி மந்திரம் ஓதி, அறுக்கப்பட்ட (ஹலால் செய்யப்பட்ட) இறைச்சியைத்தான் சாப்பிடுவது வழக்கம். தமிழகத்தில், தமிழில் மந்திரம் ஓதி அறுக்கலாம் என்றிருந்தாலும் கூட, பெரும்பாலான நகரங்களில் ஆடு அறுக்கும் இடங்களில் இஸ்லாமிய முறைப்படிதான் (ஹலால் செய்து) அறுக்கிறார்கள். நாம் அதனைப் பற்றி ஏதும் நினைக்காமல் பயன்படுத்தித்தான் வருகிறோம். ஆனால், வட இந்தியாவில் சீக்கிய மதத்தினர், இவ்வாறு (ஹலால் செய்து) அறுக்கப்பட்ட இறைச்சியினைச் சாப்பிடுவதேயில்லை, பயன்படுத்துவதே இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்தியாவிற்கு, வெளியில், இன்னும் கூட யூத மதத்தினர், அவர்கள் முறைப்படி சமைக்கப்பட்ட இறைச்சியுணவை மட்டுமே சாப்பிடுவார்கள்.
இப்படியிருக்க, தமிழகத்தில் மட்டும் அர்த்தமுள்ள, காலங்காலமாக இருந்து வரும், கோயிலில் பலியிட்டு, சமைத்து உண்ணும் பழக்கத்தைத் தடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது என்று கருதுகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்துத்தான் என்றாலும், அனைவரும் இது குறித்துச் சிந்திக்க வேண்டுகிறேன்.
8. பலி கூடாது என்றுள்ள சட்டத்தையும், அதற்கான காரணங்களையும் குறித்த கருத்துக்கள்:
நான் சட்டங்களை மிகவும் மதிக்கிறேன். ஏனெனில் சட்டங்கள் அந்தந்தக் கால கட்டங்களில் மக்கள் நலனுக்காக, மக்களாலும், அல்லது மக்களின் பிரதிநிதிகளாலும், வல்லுனர்களாலும் இயற்றப்படுபவை. எனவே சட்டத்தை எதிர்க்கத் தேவையில்லை.
ஆனால் இதற்காகக் கூறப்படும் காரணங்கள் பற்றிச் சிந்திப்போம். கோயிலுக்கு வரும் மற்ற அன்பர்கள் பலியிடுவதைப் பார்ப்பதனால் மனம் புண்படுகிறது, கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது, பார்க்கும் குழந்தைகளின் மனநலம் பாதிக்கலாம் என்ற காரணங்களைக் கூறுகின்றனர்.
கோயிலின் அருகிலேயே முறைப்படி பலிக்கூடங்களைக்கட்டி, அதனைப் பராமரிக்கும் செலவினையும் கட்டணமாக வசூலித்தால், மேற்கூறிய எந்தப் பாதிப்பும் தடுக்கப்படும். கழிவுகளை, உடனடியாக மரங்களுக்கருகில் புதைத்துவிட்டால் நல்ல உரமாகும் என்பது விவசாயிகள் அறிந்த உண்மை. அல்லது ஒரே வட்டாரத்தில் சிறுசிறு கோயில்கள் பல இருந்தால், நடமாடும் பலிக்கூடங்களையும் பயன்படுத்தலாம். இப்படி, வழிகள் இருக்க ஏதேதோ காரணங்கள் கூறுவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பாகும்.
அதை விடுத்துச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்துவதன் விளைவாக, வீட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ கடவுளர்களை அழைத்து வேண்டிப் பலியிடும் பழக்கம் உண்டாகி, இடைத்தரகர்கள் தலையிடும் கவலைக்குரிய நிலை உருவாகிடும்.
9. உண்மையின் நிலைதான் என்ன? விலைதான் என்ன?
இன்று சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளும், மதவெறியும் வளர்ந்துவிட்டன; ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கின்றனர், என்று பலர் குறை கூறுகின்றனர், கூக்குரலிடுகின்றனர்.
'நதியின் பிழையன்று நறும்புனலின்மை' - அதாவது ஆற்றில் தண்ணீர் வராதது ஆற்றின் தவறல்ல என்று கூறுவார்கள். அதேபோல் சமயத்தின் பெயரால், மனிதர்கள் செய்யும் தவறுகளுக்குச் சமயத் தத்துவங்களும், சமயச் சித்தாந்தங்களும் எப்படிப் பொறுப்பாகும்?
இவ்வளவு ஏன், சமதாயம், அரசியல், கல்வி, தொழில், மருத்துவம், கலை, தொண்டு என இன்று அனைத்துத் துறைகளிலும் புகழுக்காகவும், பொருளுக்காகவும் மட்டுமே வரும் போலிகளும் கூலிகளும் இல்லாமலா இருக்கிறார்கள்?
சமயம் என்பது, அருள் என்பது வாழ்வியல் சித்தாந்தமே, அநுபவப் பொருளே என வாழ்ந்து காட்டிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயக்குரவர்களும், இன்னும் எண்ணற்ற அருளாளர்களும் பிறந்த புண்ணிய பூமி இது. இவர்களுள் மக்கள் நலனுக்காக ஞான வழியில், அறிவுப் பூர்வமாக வழிகாட்டிய போதிசத்துவர்கள் எனப்படும். புத்தர்களும், நவநாத சித்தர்களும், ஏன் 'பெரியார்களும்' கூட அடங்குவார்கள்.
ஒரு கிலோ தங்கம் எடுப்பதற்கு, எத்தனை ஆயிரம் கிலோ மண்ணைத் தோண்டவேண்டும் தெரியுமா? அதனைச் சுத்திகரிக்க எவ்வளவு உழைப்பு வேண்டும் தெரியுமா?
அப்படியிருக்கையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களின்றி உண்மைகளை ஆராய்ந்து, வெளிக்கொண்டு வர, எவ்வளவு பேர் முயற்சிகளும், ஒத்துழைப்பும் தேவை? சிந்திப்போம்!
10. தமிழினப் பண்பாடும், இந்து மதமும்:
இன்றைய காலகட்டத்தில் தமிழின் பெயராலும், இந்து மதத்தின் பெயராலும் பிழைப்பு நடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குக் காலம் பதில் சொல்லும்!
ஆனால் தமிழ் மேல் கொண்டுள்ள உண்மையான பற்றாலும், தமிழின் மேலாண்மையைப் புரிந்து கொண்டதாலும், வாழுகின்ற புலவர்களும், கவிஞர்களும், சொற்பொழிவாளர்களும், இருக்கத்தான் செய்கிறார்கள்!
ஆயினும், இவற்றிற்கு மேலாக, பலர் தமிழ் நம்மைக் காக்கும் என்ற அடிப்படை உண்மையினைப் புரிந்து கொண்டு, (தமிழினைக் காப்பதாகக் கூறுபவர்கள் கோபுரத்தைத் தாங்குவதாக நினைக்கும் பதுமைகளே!) தமிழர் பண்பாட்டைக் காப்பதற்கு, முழு முயற்சிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுள் வெளிப்படையாகப் போராடும், சமய, மொழி, சமுதாயத் தலைவர்களும் உள்ளனர். இது தவிர, தற்காப்புக்காக, இலைமறை காயாகச் செயல்படும் பலரும் இருக்கின்றனர்.
அதனால்தான், கோயில்கள், ஆலயங்கள் முதலான வழிபடுநிலையங்களில், தமிழ் மொழியில் பூசைகளும், புத்துயிர்ப்புகளும், குடமுழுக்குகளும், செய்திட வேண்டும் என்று அயராது செயல்பட்டு வருகின்றனர்.
இறையருளைத் துய்த்திட மொழி ஒரு தடையல்ல என்பதனை நாம் அறிவோம். தமிழ்நாட்டில் ஈ, எறும்பு, யானை என்ற விலங்குகள் கூட, முத்திநிலையை அடைந்திடும் போது, மொழி தடையல்ல!
ஆனால், தமிழ்நாட்டில், வழிபடு நிலையங்களின் பூசைகளுக்கும், புத்துயிர்ப்புகளுக்கும், குட முழுக்குகளுக்கும் வேறு மொழி தேவையா? என்ற கேள்வி நியாயமா?
தெய்வத்திருமொழியாம் தமிழை, தலைவராக இருந்து, 'இறையனார்', சங்கம் வளர்த்திட்ட தமிழை, தமிழ்நாட்டில் பயன்படுத்தாமல் வேறு எங்கே பயன்படுத்துவது? என்ற கேள்விக்கு விடை கூற முற்பட்டால், அது நியாயமே! நீதியே! தர்மமே!
மேலும் இன்று பல்வேறு சமுதாய, அரசியல், வியாபாரக் காரணங்களால் பொருளற்று ஓட்டண்டிகளாகி வரும் விவசாயக் குடும்பத்தினரும், அவர்களைச் சார்ந்த தொழிலாளர்களும், அருளையும் இழந்திடச் செய்யும், உள்நோக்குடன், பலிச்சட்டம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் மக்களுள் பொறியாக உண்டாகி, நீறு பூத்த நெருப்பாக வளர்ந்துள்ளது. இது பெரு நெருபூபாக வளரும் முன் சமய, சமுதாய, அரசியல் வழியினர் ஆவன செய்திடல் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயில்களில் பலியிடுதல் - கிட்டப்பார்வை - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், வரும், என்பது, பல்வேறு, மூலம், மட்டுமே, நிலையில், சமைத்து, இன்று, இறைச்சியுணவு, இறைச்சி, புரிந்து, மக்கள், அறிவியல், என்ன, நல்ல, கூடாது, என்பதனால், அடிப்படையில், எனது, நான், மொழி, மேலும், நாம், கருத்துக்கள், பறவைகளையும், முறைப்படி, நிலை, கோயில்கள், செய்யும், அரசியல், இருக்கிறார்கள், தமிழ், தமிழ்நாட்டில், வேறு, அல்லது, பெயரால், ஹலால், செய்து, குறை, பலியிட, கூறுகின்றனர், இருக்கத்தான், சமயம், என்றால், பலர், விலங்குகளையும், தான், இன்றைய, கோயில்களில், வெவ்வேறு, அருள், கருத்து, பற்றிய, அவர்களது, என்பதனை, விளக்கம், அருளுலகப், கொள்வதும், தவிர, உடல்