முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » நிலநடுக்கம் - ஆழிப்பேரலை
பொதுவான கட்டுரைகள் - நிலநடுக்கம் - ஆழிப்பேரலை
- மறவன் புலவு க. சச்சிதானந்தன்
நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதற்குரிய தொழில் நுட்பம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையே!
ஆனாலும் ஆழிப் பேரலை வரக்கூடும் என எச்சரிக்கும் தொழில் நுட்பம் வந்துவிட்டது! பல நாடுகள் இந்தத் தொழில் நுட்பத்தால் பயனடைந்து வருகின்றன.
ஆழிப் பேரலைகள் தமிழகத்தையும் தமிழீழத்தையும் தாக்குவது இதுதான் முதலாவது முறை அல்ல வரலாற்றில் முறையாகப் பதிவு செய்த ஆழிப்பேரலைகள், கிபி 1912 (1881)இலும், கிபி 1972 (1941)இலும் தமிழகத்தைத் தழுவியுள. அதற்கு முன்னரும் தமிழகக் கரைகளை ஆழிப்பேரலைகள் பலமுறை தழுவியிருக்கலாம்.
மாமல்லபுரக் கோயில்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. பூம்புகாரை 1,800 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழிப்பேரலை விழுங்கிய செய்தியை,
அணிநகர் தன்னை அலைகடல் கொள்க, என
இட்டனள் சாபம், பட்டது இதுவால்,
கடவுள் மாநகர் கடல்கொளப்; பெயர்ந்த
வடிவேல் தடக்கை வானவன் போல,
விரிதிரை வந்து வியநகர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்.
வரி 199-204, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
மணிமேகலைக் காப்பியத்தில் காணலாம்.
கடல், தரையில் நிகழும் நிலநடுக்கங்களும் எரிமலைகளும் ஆழிப் பேரலைகளை எழுப்புகின்றன.
புவியின் அமைப்பே நிலநடுக்கத்துக்கும் எரிமலைகளுக்கும் காரணம். உருண்டையான புவியின் நடுவே கூழாகத் திரண்ட எரிதழல் குழம்பு உள்ளது. இந்த வெப்பக் குழம்பை மூடி, 100 கிமீ அளவிலான தடித்த கோது உள்ளது.
16 பெரிய தகடுகள் இணைந்ததே இந்தக் கோது. இப்பெரிய கண்டத் தகடுகளை ஒட்டிச் சிறு சிறு தகடுகளும் உள்ளன.
தன்னைத் தானே சுற்றுவதுடன், சூரியனையும் சுற்றி வருவது பூமி, பெரிய இந்த அசைவுகளால் தகடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் எல்லைகளில், உராய்வுகள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த உராய்வுகளால் சில இடங்கள் பிளவுறும், சில இடங்கள் குவியும். இதனால் கண்டங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த உராய்வுகளே நிலநடுக்கங்களின் அடிப்படைக் காரணி.
இந்தியத் துணைக்கண்டமும் சுற்றியுள்ள கடலும் இத்தகைய ஒரு கண்டத் தகட்டின் மேல் உள்ள பகுதியே. இந்தத் தகட்டின் பெயர் இந்தியத் தகடு.
இந்தியத் தகட்டுக்குக் கிழக்கே சுந்தரத் தகடு உள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே சிறிய தகடு ஒன்று உண்டு. பர்மாக் குறுந்தகடு எனப்பெயர் கொண்ட அத் தட்டின் மேல் அந்தமான் நக்காவரத் தீவுக் கூட்டமும் சுற்றியுள்ள கடலும் உள்ளன.
இந்த பர்மாக் குறுந்தகட்டின் ஓரங்களும் பஇ தகடுகளின் ஓரங்களைப் போல எப்பொழுதும் உராய்ந்து கொண்டும் குவிந்துகொண்டும் இருக்கின்றன. இதனால் நிலம் எப்பொழுதும் நடுங்கிக் கொண்டே இருக்கிறது.
பல நடுக்கங்கள் நம் புலனுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் கருவிகள் அவற்றைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றில் இத்தகைய பதிவு கருவிகள் உள. இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறையினர் 58 மையங்களில் இக்கருவிகளைப் பொருத்தி உள்ளனர். இவை தவிர இந்திய புவியியல் கழகத்தினரும் இத்தகைய பதிவு மையங்களை வைத்திருக்கின்றனர்.
உலகில் எங்கு நிலநடுக்கம் ஏற்படினும் எந்தக் கருவியிலும் அது பதிவாகும். பூமியில் எந்தப் பகுதியில் எந்த அளவில் நிலநடுக்கம் வந்துள்ளது என்பதும் பதிவாகும்.
26.12.2004 ஞாயிறு காலை, ஆழிப் பேரலையைத் தட்டி எழுப்பிய நிலநடுக்கமும் இந்தியக் கருவிகளில் பதிவாயின. உலக நாடுகளில் உள்ள ஏனைய பல கருவிகளிலும் பதிவாகின. இந்திய எல்லைக்கு அப்பால் இந்த நிலநடுக்க மையம் இருந்ததால், இந்தியப் பதிவாளர் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை.
கண்டத் தகடு ஒன்று மற்றதுடன் உராய்ந்து, சிறிய தகடு பெரிய தகட்டிற்குக் கீழாகச் சிறிதே நகர்ந்ததால், அதுவும் கடலுக்கடியில் இந்த நகர்வு நிகழ்ந்ததால், தகடுகளுக்கு மேலேயுள்ள நீர் திடீரெனத் தடுமாறியது. நிலை மாறியது.
குளத்துள் வீழ்ந்த பாறாங்கல் ஏற்படுத்தும் கலக்கம், பெரிய அளவில் கடலுள் ஏற்பட்டது. கண்டத் தகட்டின் சாய்வு ஏற்படுத்திய வெற்றிடம், நீர்த் தொகுப்பின் வழமையைக் குலைத்தது. ஆழிப் பேரலையைத் தோற்றுவித்தது.
சென்னையின் தென்கிழக்கே 2028 கிமீ. தொலைவில் சுமத்திராத் தீவின் வடமுனை உள்ளது. இந்த வடமுனையின் மேற்கோரமாக, பர்மாக் குறுந் தகட்டின் எல்லை செல்கிறது.
இந்தப் பர்மாக் குறுந்தகடு அசைவதற்கு முன்பு, தென் பசிபிக் கடலின் தட்டுகள் அசைந்தன. 21.12.2004 தொடக்கம் 24.12.2004 வரை பதிவான நிலநடுக்கத் தொடர்கள் 26.12.2004 இன் நிலநடுக்கத்தைத் தூண்டின போலும்.
26.12 ஞாயிறு அன்றும் ஒரே ஒரு நிலநடுக்கம் மட்டும் நிகழவில்லை. காலை முதல் மாலை வரை அடுக்கடுக்காக நிலம் நடுங்கியது பர்மாக் குறுந்தகடு அசைந்துகொண்டே இருந்தது.
ஆனால் அந்த அசைவுகள் ஆழிப் பேரலையை எழுப்பவில்லை. கடலில் சிறிய தாக்கத்தை அவை ஏற்படுத்தி இருக்கும். நமக்கு புலனாகவில்லை. சிறிய கடலலை அசைவுகளையும் நுணுகிக் கண்டறியும் கருவிகள் உள.
ஆழிப்பேரலைகள் கடலில் தோன்றிப் பயணிக்கின்றனவா என்பதை முன்கூட்டியே கண்டறிய, அமெரிக்க மாநிலமான ஹவாய்த் தீவில் ஓர் ஆய்வு மையம் உள்ளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 26 நாடுகளின் கூட்டமைப்பு இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. ஆழிப் பேரலை தோன்றிப் பயணிக்கும் போதே இந்த மையம் எச்சரிக்கை அறிவிப்பை இந்த 26 நாடுகளுக்கும் அனுப்புகிறது.
கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு கருவி நீரின் அழுத்த வேறுபாடுகளைக் கண்டறியும். ஆழிப்பேரலைக்குரிய குறி காணப்படின், கடற்பரப்பில் மிதக்கும் கருவிக்குச் செய்தி அனுப்பும், மிதவைக் கருவியில் இருந்து வானொலி அலைகள் செய்மதி மூலம் ஹவாய் மையத்துக்குச் செய்தியை அனுப்பும்.
உடனே பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்குச் செய்தி பரவும். தானாகவே எச்சரிக்கை மணியும் சங்கும் ஊதும் ஒலிபரப்பிகள் உள்ளிட்ட ஆபத்து எச்சரிக்கைகள் கரையோரமெங்கும் மக்களைத் தட்டியெழுப்புகின்றன. அந்த நாடுகளில் உயிர்ச் சேதம் முற்று முழுதாகத் தவிர்க்கப்படுகிறது. முக்கிய ஆவணங்கள், பொருள்கள், ஆபத்துத் தரும் இரசாயனப் பொருள்கள், அணுக்கதிர்க்கழிவுகள் யாவையும் உடன் அப்புறப்படுத்த இந்த எச்சரிக்கை மிகவும் பயன்படுகின்றன.
தாய்லாந்து நாட்டின் கிழக்குக் கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி, இந்த எச்சரிக்கை வசதி உண்டு. ஆனால் இந்துப் பெருங்கடலை ஒட்டி இந்த எச்சரிக்கை அறிவிப்பு வசதிகள் இல்லை. எனவேதான் தாய்லாந்திடம் என்ன உதவி வேண்டும் என அமெரிக்கா கேட்டபோது, யாம் கேட்பவை பொன்னும் பொருளுமல்ல போகமுமல்ல - நின்பால், இரப்பது ஆழிப்பேரலை கண்டறியும் தொழில்நுட்ப அறிவும் கருவிகளுமே எனத் தாய்லாந்து பதில் கூறியுள்ளது.
இந்துப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை அமைப்பின் தேவையை 26.12.2004 இன் ஆழிப் பேரலை எடுத்துக்கூறியுள்ளது. அந்தத் தேவையை உணர இந்த நாடுகள் கொடுத்த விலை 160,000 உயிர்கள், அவற்றுள், 50,000 உயிர்கள் தமிழருடையன. உயிர்கள் மட்டுமல்ல, உடமைகளும் பெருமளவு அழிந்தன, தமிழரின் கடல் வலிமையுமல்லவா தளர்ச்சி கண்டது?
இயற்கைக்கும் நமக்கும் இடையே இசைவான இணக்கம் வேண்டும். அகழ்வாரைத் தாங்கும் நிலம்தான் எனினும், அதற்காக எல்லைகளை மீறுவதா? சுற்றுச் சுழல் மீதான கவனத்தையும் இந்த ஆழிப்பேரலை நமக்குச் சொல்லாமல் சொல்லிச் சென்றுளதே!
நாள்
19.12.2004
நிகழ்வு
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா பிஜிப் பகுதி, பிலிப்பைன்ஸ் பகுதி, என பசிபிக் பெருங்கடல் கரையோர மெங்கும்.
நாள்
20.12.2004
நிகழ்வு
அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகள்.
நாள்
21.12.2004
நிகழ்வு
பசிபிக் கடலைச்சுற்றிய பகுதிகள்
நாள்
22.12.2004
நிகழ்வு
கிழக்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்
நாள்
23.12.2004
நிகழ்வு
வட பசிபிக் பெருங்கடல் பகுதிகள்
நாள்
24.12.2004
நிகழ்வு
இந்தோனீசியாவின் சாவகம், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்
பட்டியல் 2
26.12.2004
நேரம் ரிக்டர் இடம்
06.28 8.9 சுமத்திரா அருகே
07.18 5.9 வட சுமத்திரா
07.45 5.8 அந்தமான் தீவுகள்
07.52 6.0 நக்காவரம் தீவுகள்
08.04 5.8 வட சுமத்திரா
08.06 5.8 அந்தமான் தீவுகள்
08.21 6.0 அந்தமான் தீவுகள்
08.29 5.9 வட சுமத்திரா
08.38 6.1 அந்தமான் தீவுகள்
09.51 7.3 நக்காவரம் தீவுகள்
11.52 5.7 அந்தமான் தீவுகள்
12.37 5.7 அந்தமான் தீவுகள்
13.08 5.8 அந்தமான் தீவுகள்
14.50 6.5 நக்காவரம் தீவுகள்
15.49 6.2 அந்தமான் தீவுகள்
16.35 6.3 அந்தமான் தீவுகள்
இப்பட்டியலில் உள்ள தகவல்கள் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் புவியியல் ஆய்வகம், அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் தேசிய கடலியல் துறை ஆகியனவற்றின் மின்னம்பல தளங்களில் திரட்டியன.
நன்றி: தமிழர் கண்ணோட்டம் (பொங்கல் சிறப்பிதழ்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிலநடுக்கம் - ஆழிப்பேரலை - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - தீவுகள், அந்தமான், பசிபிக், ஆழிப், நிகழ்வு, பெருங்கடல், எச்சரிக்கை, நாள், பர்மாக், பெருங்கடலை, பகுதிகள், தகடு, உள்ளது, சுமத்திரா, பதிவு, சிறிய, பெரிய, கண்டத், தகட்டின், அமெரிக்க, நக்காவரம், கண்டறியும், அமெரிக்கா, உயிர்கள், ஒட்டிய, குறுந்தகடு, ஆழிப்பேரலை, ஒன்று, ஆழிப்பேரலைகள், நாடுகள், பேரலை, எப்பொழுதும், இந்தியத், கருவிகள், நிலநடுக்கம், தொழில், உள்ள, இத்தகைய, மையம்