முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » வேட்டை இலக்கியம்: ஒரு மறு வாசிப்பு
பொதுவான கட்டுரைகள் - வேட்டை இலக்கியம்: ஒரு மறு வாசிப்பு
- சு. தியடோர் பாஸ்கரன்
இந்திய வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் எவ்வித ஆரவாரமுமின்றி நவம்பர் 1991இல் முடிந்தது. மத்திய அரசின் ஆணையொன்றின் மூலம் வேட்டையாடுவது நாடெங்கும் அறவே தடை செய்யப்பட்டது. காட்டுயிர் பாதுகாப்பில் அக்கறை கொண்டோருக்கு இதன் முக்கியத்துவம் புரியும். உலக அளவில், கடந்த நூற்றாண்டில் அற்றுப்போன உயிரினங்களின் 25 விழுக்காடு துப்பாக்கிக்குப் பலியானவை என்பது கணிப்பு. மனிதர் உணவுக்காக மட்டுமே வேட்டையாடிய போது தீமை ஏதும் ஏற்படவில்லை. அவர்களும் ஒரு இரைக் கொல்லியாக, காட்டுப் பூனை, புலி போன்று இயங்கினார்கள். ஆனால் வணிக நோக்குடனும், விருதுகளுக்காகவும், கொல்வதை ஒரு பொழுது போக்காகவும் கொண்டு வேட்டையாட ஆரம்பித்த போதுதான் வந்தது ஆபத்து.
வேட்டையாடலைச் சார்ந்து வெள்ளை ஏகாதிபத்தியக் காலத்தில் உருவானதுதான் வேட்டை இலக்கியம் என்பது. காலனி நாட்டிலிருந்து வெள்ளை அதிகாரிகள் அன்றாட வாழ்வின் அலுப்பைப் போக்க வேட்டையாட ஆரம்பித்தனர். வெள்ளை எஜமானர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி பெருமை கண்ட இந்திய கனவான்கள் பலரும் மகாராஜாக்கள், குட்டி ராஜாக்களும் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளும், துப்பாக்கி தூக்க ஆரம்பித்தனர். கிரிக்கெட், கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அவர்களைப் பின்பற்றியது போல, வேட்டையாடலிலும் இந்திய கனவான்கள் ஈடுபட ஆரம்பித்தனர். வெள்ளைக்கார வேட்டையாடிகள் சிலர் தங்கள் அனுபவத்தை இங்கிலாந்திலிருந்து வெளியான Black woods magazine போன்ற சஞ்சிகைகளில் வெளியிட்டனர். இக்கட்டுரைகள் பிரிட்டனில் வாசகர்கள் ஆதரவைப்பெற்ற பின்வேட்டை இலக்கியம் உருவாக ஆரம்பித்தது. சீக்கிரமே ஒரு பாரம்பரியமாக வளர்ந்தது.
1869இல் சாமுவேல் பேக்கர் என்பவர் ''துப்பாக்கி மற்றும் நாயுடன் இலங்கையில் (The Rifle and Hound in ceylon) என்ற நூலை எழுதினார். இதைத் தொடர்ந்து ''இந்தியாவில் காட்டு விலங்குகளுடன் 13 வருடங்கள் (Thirteen years among the wild beasts of india) என்ற புத்தகத்தை T.H. சேன்டர்சன் எழுதினார். இவைகளைத் தொடர்ந்து பல நூல்கள் வந்தன. பின்னர், ஹ்யூ ஆலன் மற்றும் ஜிம் கார்பெட் தங்களது நூல்களைத் வெளியிட்ட ஆண்டுகள் தான் வேட்டை இலக்கியத்தின் உச்சக்கட்டம் எனலாம். இலக்கிய விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் இந்நூல்கள் வெகுஜன ஆதரவைப் பெற்றன. பல பதிப்புகள் வெளிவந்தன.
வேட்டை இலக்கியத்திற்கே உரித்தான சில பரிமாணங்கள் உண்டு. நேரிடையாகப் பேசுவது போல (first person) கதை சொல்வது போல அமைந்திருக்கும். தனி மனிதன் ஒருவன், காட்டு விலங்கு ஒன்றைத் தொடர்ந்து சென்று, அதை அது வாழுமிடத்திலேயே கொல்வதுதான் எல்லாக் கதைகளின் கரு. ஒரு திகில் நாவலின் கூறுகளைக் கொண்டிருக்கும். வேட்டை இலக்கியத்தின் நடை விறுவிறுப்பாகவும், படிப்பவரின் கவனத்தைக் கவரும்படியான முறையிலும் அமைந்திருக்கும் வேட்டை இலக்கியம் ஜனரஞ்சகமாயிருப்பதற்குக் காரணம் இவை உண்மையாக நடந்த சம்பவங்கள் என்று நம்பப்படுவதுதான். இவ்வேட்டைகளில் சுடப்பட்டது புலி, அடுத்தாற்போல யானை, காட்டு விலங்குகளைப் கொடிய உயிரினம் போல் வேட்டை இலக்கியம் சித்தரித்தது.
சில இந்திய வேட்டையாடிகளும் இம்மாதிரியான நூல்களை எழுத ஆரம்பித்தனர். அதில் கேசரி சிங்கும், பெங்களூரைச் சேர்ந்த கென்னத் ஆண்டர்சனும் நன்கு அறியப்பட்டவர்கள். ஆண்டர்சன் இந்தியர்தான். ஆங்கிலோ - இந்திய சமூகத்தவர். இவரை ஒரு முறை நான் ஏலகிரியில் சந்தித்திருக்கின்றேன். ஆண்டர்சனின் வேட்டைச் சம்பவங்கள் கர்நாடக தமிழ்நாட்டு பின்னணியில் Maneater of Yelagiri போன்ற கதைகள் எழுதப்பட்டன. அவருக்கு எழுத்தில் முன் மாதிரி ஜிம் கார்பெட் எனலாம். வேட்டை இலக்கியத்திற்கு காலம் கடந்தே வந்த இவர் ஐம்பதுகளில் தான் எழுதினால். 1974 இல் காலமானார். கார்பெட் மற்றும் ஆண்டெர்சனின் சில நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
காட்டுயிர்கள், காடுகள், உயிர்ச்சுழல் இவை பற்றிய பிரக்ஞை அதிகம் இல்லாத காலகட்டத்தில், காட்டுயிர் பேணல் புறச்சூழலின் சமநிலைக்கு முக்கியம் என்ற பிரக்ஞை ஏற்படாத சமயத்தில், வேட்டை நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் இப்போது காட்டுயில் பற்றிய விழிப்பு, சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகு, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யானைகளைப்பற்றி சுகுமாரும், புலிகளைப்பற்றி உல்லாஸ் கரந்த்தும் சிங்கங்களைப் பற்றி ரவி செல்லமும், செந்நாய்களைப்பற்றி ஜான்சிங்கும் விரிவாக, காட்டிலேயே கள ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கின்றனர்.
வேட்டையாடிகளிடமிருந்து காட்டுயிர்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டிய காலம் மலையேறி விட்டது. அறிவியல் நூல்கள், இயற்கை முகாம்கள். காட்டு வழி நடத்தல் மூலம் காடு பற்றி அனுபவப் பூர்வமாய், நேரிடையாக அறிந்து கொள்ள முடிகின்றது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் காட்டுயிர் பற்றிக் கதை விட முடியாது. வேட்டையாடல் தடை செய்யப்பட்டதுமில்லாமல் அது ஒரு கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. பண்புள்ள நால்வர் மத்தியில் யாரும் இப்போது தன் வேட்டைப் பிரதாபங்களை சொல்லி மார்தட்டிக் கொள்வதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் பலர் இப்படிப் பெருமையடித்துக் கொண்டதை நான் கேட்டிருக்கின்றேன்.
இன்று காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 அமுலில் இருக்கின்றது. கானுறை உயிரினங்களைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒரு இயக்கமாக உலகெங்கும் பரவி விட்டது. வேட்டை இலக்கியம் வளர இனி வழியில்லை. அதனால்தான் கார்பெட், ஆண்டர்சன் இவர்களின் நூல்கள் பல்வேறு தலைப்புகளின் வெவ்வேறு தொகுப்புகளாக மறு அவதாரம் எடுத்து வருகின்றன.
வேட்டையாடிகள் காட்டுயிர் பாதுகாப்பிற்கு உதவினார்கள் என்ற கருதுகோள் ஆதாரமற்ற கட்டுக் கதை என்பது ருசுவாகிவிட்டது. விருதிற்காக வேட்டையாடுவர், ஒரு விலங்குத்திரளில் நன்கு வளர்ந்த, முதிர்ந்த ஆண் விலங்கையே கொல்வது வழக்கம். யானைகளில் நன்கு வளர்ந்த தந்தங்களையுடைய ஆண் யானையையும், காட்டெருதுகளில் அகன்ற கொம்புகளையுடைய ஆண் எருதையும், வரையாடுகளின் Nilgiritahr முற்றிய ஆண் வரையாட்டையும், சுட்டுத் தீர்த்தனர். Saddleback என்று குறிப்பிடப்படும் இத்தகைய வரையாட்டுக்கு முதுகு பழுப்பு நிறமாக இருக்கும். அடையாளம் காண்பது எளிது. முதிர்ச்சியடைந்த ஆண் விலங்குகள் தான் இனப்பெருக்கத்தின் முக்கிய அம்சம். அத்தகைய விலங்குகள் தெரிந்தெடுத்து அழிக்கப்பட்டு, அந்த இனம் பெருகுவது தடைப்பட்டது. அந்த இனங்களின் மரப்பணுக்கள் சிதைக்கப்பட்டன.
தாங்கள் வேட்டையாடிக்களிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக சில ராஜாக்களும், தேயிலைத் தோட்ட அதிபர்களும், மற்றவர்களைக் கிட்ட அனுமதியாமல், சில காட்டுப்பகுதிகளை பாதுகாத்து வைத்தனர். இவர்கள் காட்டுயிர் பாதுகாப்பிற்காக செயல்பட்டார்கள் என்று எவ்வாறு கூற முடியும்.?
சுட்டுக்கொல்வதில் ஆனந்தம் காணும் பொழுதுபோக்கு, வேட்டையாகப் பரிணமித்தது. இந்த நோக்கை தரித்தவர்களே ஜிம்கார்பெட்டும், அவரை ஆதர்சமாகக் கொண்டு எழுதிய கென்னத் ஆண்டர்சனும், வேட்டையாடுதலை ஒரு வீர சாகசம் போல எழுதி வைத்தனர். இந்தக் கதைகளைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்கியவர் பலர். வேட்டையை மேன்மைப் படுத்தி, அதற்கு ஒரு அந்தஸ்து அளித்தது வேட்டை இலக்கியம். அதிலும் புலி வேட்டை, மேட்டுக் குடியில் சேருவதற்குரிய ஒரு சடங்கு போல (rite of passaged) நடத்தப்பட்டது. இம்மாதிரியான பல சடங்குகளுக்குத் தலைமைப் பூசாரி ஜிம் கார்பெட்தான். முக்கியமாக லின்லித்கோ பிரபுவை புலி வேட்டைக்கு இட்டுச் சென்றவர் கார்பெட். இன்றைய நாட்களில், வெளிநாட்டுத் தலைவர் வந்தால் அரசு சார்ந்த விருந்து வைப்பது போல, பிரிட்டீஷ் காலத்தில் புலிவேட்டை ஏற்பாடு செய்யப்பட்டது. ஏன் புலி?
ஆங்கிலேயர்கள் காடே இல்லாத நாட்டிலிருந்து வந்தவர்கள். அதிலும் புலி போன்ற பரிணாமத் தகவமைப்பின் ஒரு அற்புத படைப்பு அங்கே இல்லை. உணவுச் சங்கிலியின் உச்சத்திலிருக்கும், இரைகொல்லியான புலி, ஆங்கிலேயர்களுக்கு, அவர்கள் ஆக்ரமித்திருந்த நாட்டில், அச்சத்தை தரும் ஒரு குறியீடாகத் தெரிந்தது. அதைக் கொல்வது - புலி வேட்டை - ஒரு சாகசமாகக் கருதப்பட்டது. புலியைச் சுடுவது ஒரு யாகத்தைச் செய்வது போல அமைந்தது. ரூடியார்டு கிப்ளிங் கூட தனது Jungle Book நூலின் கொடியோன் பாத்திரத்தை ஷெர்கான் எனும் புலியாக அமைத்துள்ளதைக் கவனியுங்கள்.
ஆகவே வேட்டை இலக்கியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. சுற்றி வளைத்துக் சொல்வானேன். இந்த வேட்டை இலக்கியத்தில் கதை எவ்வளவு? கற்பனை எவ்வளவு? ஆண்டர்சனின் புத்தகங்கள் முதன் முறையாக வெளி வந்தபோதே இந்த கேள்வியை பலர் எழுப்பினர். நான் மாணவனாக இருந்த போது ஜிம் கார்பெட் நூல்களை ஆர்வத்துடன் படித்திருக்கின்றேன். பின்னர் எ.சி.சி.யில் சேர்ந்து, 303 ரைபிள் மற்றும் 22ரைபில் போன்ற ஆயுதங்களை பயன்படுத்த பழகிற பின்னர்தான் கார்பெட் கதை விட்டிருப்பாரோ என்ற லேசான சந்தேகம் என்னுள் எழுந்தது. மறுமுறை வாசித்த போது சந்தேகம் வலுப்பட்டது. பலர் இந்தக் கேள்வியை ஏற்கனவே எழுப்பியுள்ளார்கள் எனவும் தெரிந்துகொண்டேன்.
இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர் எழுதிய நூல்களை ஆய்வு செய்திருக்கும் சுஜித் முகர்ஜி.
ஜிம் கார்பெட்டைப் பற்றி புரிந்துகொள்ள சில விவரங்களை முதலில் அறிய வேண்டும் என்கிறார். 1907இல் தொடங்கி 1939 வரை பல ஆட்கொல்லிப்புலிகளை ஜிம் கார்பெட் சுட்டுக்கொல்கிறார். ஆனால் 1944இல் தான் தனது முதல் நூலை, Man-eater of Kumaon, எழுதுகின்றார். அதற்கும் பல வருடங்கள் கழித்து எழுதிய நான்கு நூல்களை, ஆப்ரிக்காவில் இருக்கும் போது எழுதுகின்றார். இவருக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. வேட்டை பற்றிய குறிப்பு எதுவும் வைத்ததாகக் கூறவில்லை. பின் எப்படி, 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு செடி, பறவை, ஒலி இவற்றைப் பற்றி எழுத முடிந்தது? இவர் அசாத்திய மனத்திடத்துடன், அந்த ஆட்கொல்லிகளைத் தொடர்ந்து சென்று சுட்டார் என்பதை யாரும் மறுக்கவில்லை. மற்ற விவரிப்புகளைப் பற்றித்தான் கேள்விகள். இவரது வாழ்கை வரலாற்றை எழுதியவரும் இதைத்தான் சொல்கிறார்.
Justified cirticisms were levelled at Jim and one has to accept that he did and one has to accept that he did overwrite but he did not do this for the sake of self-promotion but just to give a better read (P.246) அவர் எழுதியதெல்லாம் ஆங்கிலேய வாசகர்களுக்காக எழுதப்பட்டதுதான் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். எனது இந்தியா (My India) வின் நூலாசிரியரான கார்பெட், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், வெளியேறி, மற்றொரு பிரித்தானிய காலனியான கென்யாவில் ஒரு வேட்டைக் கம்பெனிக்கு இயக்குனராகச் சேர்ந்து விட்டார்.
கார்பெட் ஆட்கொல்லிப்புலிகளை மட்டுமே கொன்றார் என்று ஒரு கருத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் டென்னிஸ் ஆட ஆரம்பித்து, அன்றே சாம்பியன் ஆக யாராலும் முடியுமா? கார்பெட் பள்ளியில் படிக்கும்போது தனது முதல் சிறுத்தையை கொல்கிறார் அதன் தவறு.... அவர் நடந்து போன பாதையில் வந்ததுதான். பிறகு நூற்றுக்கணக்கான புலிகளையும் மற்ற விலங்குகளையும் சுட்டார். ரெயில்வேயில் பணி புரிந்தாலும் அவர் ஒரு Professional வேட்டையாடி, ஒரு முறை ஒரு மரத்தடியில் அவர் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு மலையாடு (Goral) ஒர் முகட்டின் மீது வந்து நிற்கிறது, சுடுகிறார். கீழே உருண்டு விழுகின்றது. அடுத்தடுத்து மேலும் இரண்டு மலையாடுகள் அதே பாறையில், அதே இடத்தில் வந்து நிற்கின்றன. அவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுட்டு வீழ்த்துகின்றார். வேட்டையாடுதலை ஒரு சாகச வீரதீரச் செயலாகக் காட்டுவதில் கார்பெட்டுக்கு பெரும் பங்கு உண்டு. இதனல் வேட்டையாடுவோர் எண்ணிக்கை பெருகியது.
வேட்டை இலக்கிய நூல்களின் மறுபதிப்புகள் வந்த வண்ணமிருக்கலாம் காட்டில் நடந்து, அதன் ஒலிகளைக் கேட்டு, காட்டுயிர்களைப் பார்த்து, காட்டை அனுபவித்திருக்காதவர்களுக்கு வேட்டை இலக்கியம் சுவாரஸ்யமானதாக இருக்கலாம். அவை ஜேம்ஸ்பாண்ட் நாவல்களைப் போலத் தான் மதிப்பிடப்பட வேண்டும்.
நன்றி: உயிர்மை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேட்டை இலக்கியம்: ஒரு மறு வாசிப்பு - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேட்டை, கார்பெட், புலி, இலக்கியம், ஜிம், காட்டுயிர், இந்திய, தான், போது, பலர், பற்றிய, நூல்களை, வேண்டும், பற்றி, அவர், தொடர்ந்து, காட்டு, நூல்கள், ஆரம்பித்தனர், தனது, வந்து, விட்டது, எழுதிய, அந்த, நான், வெள்ளை, துப்பாக்கி, என்பது, உண்டு, காலம், நன்கு, பிறகு