முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (1920-1994)
பொதுவான கட்டுரைகள் - சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (1920-1994)
- சாருநிவேதிதா
நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? காகிதத்திலா? டைப்ரைட்டரிலா? நிறைய Revise செய்வீர்களா? உங்கள் கவிதைகளைப் பார்த்தால் அவை உங்கள் மூளையிலிருந்து வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம்தானா? கவிதைகளை எழுதும் போது அவை எந்த அளவு உழைப்பையும் வேர்வையையும் எடுத்துக் கொள்கின்றன?
டைப்ரைட்டரில்தான் எழுதுகிறேன். அதுதான் என்னுடைய ''மெஷின்கன்.'' பின்னிரவில் ஒயினைக் குடித்துக்கொண்டே, ரேடியோவிலிருந்து சாஸ்திரீய இசையைக் கேட்டபடி, மங்களூர் கணேஷ் பீடிகளைக் குடுத்துக் கொண்டு கவிதைகளைத் தட்டச்சு செய்வேன். அதிக உழைப்போ வேதனையோ இருப்பதாகச் சொல்ல முடியாது. எழுதுவது சுலபமானதுதான். ஆனால் வாழ்வதுதான் சிரமமாக இருக்கிறது.
வெளியே செல்லும்போது நோட்டுப் புத்தகங்களை எடுத்துச் செல்வீர்களா?
இல்லை, அந்த மாதிரியெல்லாம் மூளையில் கருத்துக்களைச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. நான் ஒரு எழுத்தாளன் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவே முயல்கிறேன். எனக்கு எழுத்தாளர்களைப் பிடிக்காது. ஆனால் அதே சமயம், இன்ஷ•ரன்ஸ் ஏஜண்டுகளையும் பிடிக்காது.
எழுதாத காலகட்டம் என்று ஏதும் உண்டா? அந்தச் சமயத்தில் என்ன செய்வீர்கள்?
எழுதாத நேரம் என்றால் அது இரண்டு மூன்று இரவுகள் நீளும். அவ்வளவுதான். நான் எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன். ஒரு வேளை அம்மாதிரி நேரங்களில் எழுத்து நன்றாக அமையாமல் போகலாம். ஆனால் அது எனக்கும் தெரிந்துவிடும். உடனே ரேஸ•க்குப் போய்விடுவேன். என் குதிரையைப் பார்த்துத் தொண்டை கிழியக் கத்துவேன். ஆனால் ரேஸில் தோற்றுப் போனால் தான் நல்லது. 150, 200 டாலரைத் தொலைத்துவிட்டால் அன்றைய இரவு ஓர் இறவாக் கவிதையை எழுதிவிடுவேன்.
நீங்கள் தனிமை விரும்பியா? உங்கள் கவிதைகளைப் பார்த்தால் நீங்கள் காதல் அல்லது செக்ஸிலிருந்து ஒருவிதத் தனிமையை நோக்கிச் செல்வதாகவே தோன்றுகிறது.
எனக்குத் தனிமை பிடிக்கும். ஆனால் வார்த்தைகளுக்காக வேண்டி நான் விரும்பும் மனிதர்களை என்னிடமிருந்து அப்புறப்படுத்த மாட்டேன். அதற்கான தேவையும் இல்லை. என்னுடைய சில கவிதைகளைப் பார்த்தால், ஒரு பெண்ணிடமிருந்து பிரிவு ஏற்பட்டு நான் தனியாக வாழும் போது எழுதியதைப் போல் தெரிகின்றன. இப்படி பல பெண்களிடமிருந்து பிரிவு நேர்ந்துள்ளது. எழுதாதிருக்கும் சமயத்திலேயே எனக்குத் தனிமை தேவைப்படுகிறது. எழுதும்போது தனிமை தேவையில்லை. குழந்தைகள் என் அறையில் பீச்சாங்குழல் துப்பாக்கிகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கூட நான் எழுதுவதுண்டு. தொந்தரவு என்பதைவிட, அது என் எழுத்துக்கு உதவி செய்கிறது என்றே சொல்லுவேன். அந்த விளையாட்டிலுள்ள குதூகலமும் கும்மாளமும் என் கவிதையையும் தொற்றும் அல்லவா? ஆனால் ஒரு விஷயம்தான் தொந்தரவாக இருக்கும். பக்கத்து வீட்டில் யாராவது அதிக சத்தத்தில் கேட்கும் தொலைக்காட்சி சீரியல்கள்.
பிடித்த எழுத்தாளர்கள்?
John Fante, Knut Hamsun, the celine of journey, தஸ்தாவஸ்கி. ஆனால் இரவு நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து அறைக்குத் திரும்பி வந்து, பியர் போத்தலை எடுத்துக் கொண்டு படுக்கையில் வைத்துக் குடித்தபடியே சாஸ்திரீய இசையைக் கேட்பதைத்தான் நான் மிகவும் விரும்புகிறேன்.
இப்போது நிறைய கவிதைகள் எழுதப்படுகின்றன. எது நல்ல கவிதை? எது கெட்ட கவிதை? எப்படி நீங்கள் அதை வகைப்படுத்துவீர்கள்?
இன்றைய தினம் மிகமிக அதிக அளவில் கவிதைகள் எழுதப்படுகின்றன. ஒரு எளிமையான கவிதை வரியை இவர்களால் எழுத முடியவில்லை. கெட்ட கவிதை என்றால் எது தெரியுமா? ''இதோ, இப்போது நான் ஒரு கவிதையை எழுதப் போகிறேன். என்று சீரியஸாக சிந்திப்பவர்களால் தான் கெட்ட கவிதைகள் எழுதப்படுகின்றன. அவர்கள் திட்டமிட்டபடியே அந்தக் கவிதைகளும் உருவாகிவிடுகின்றன. ஒரு பூனையை எடுத்துக் கொள்ளுங்கள், ''நான் ஒரு பூனை இப்போது நான் இந்தப் பறவையைச் கொல்லப்போகிறேன்'' என்று சொல்லிக்கொண்டா பறவையைக் கொல்கிறது? அது நேரடியாக அந்தச் செயலைச் செய்கிறது. இப்படிப்பட்ட சில பூனைகளால்தான் இன்று நல்ல கவிதைகள் எழுதப்படுகின்றன.
எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகளைப் படித்து வருகிறீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இந்தப் போட்டிகளிலிருந்து நான் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களிடம் கொண்டாட்டமோ, பைத்தியத்தன்மையோ, Gambling - ஓ இல்லை.
இன்றைய இளம் கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள்?
அவன் எழுதும் கவிதை அவனுக்கு அலுப்பூட்டினால், மற்றவர்களுக்கும் அலுப்பூட்டுவதாகத்தான் இருக்கும் என்பதை முதலில் அவன் அறிந்துகொள்ள வேண்டும். சுலபமாகப் புரிந்தாலோ, கேளிக்கைத் தன்மையைக் கொண்டிருந்தாலோ அதில் என்ன தவறு? உன்னதமான விஷயங்களை மிக எளிய முறையில் சொல்லும் திறமை கொண்டவன்தான் மேதை. பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டு, வெற்றிகரமாக வாழும் திறமைசாலி ஒருவனால் நல்ல கவிதையை எழுதவே முடியாது.
ஹென்றி மில்லர் போன்ற பல எழுத்தாளர்கள் கலிபோர்னியாவையே தங்கள் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்களே....ஏன் அப்படி? கிழக்கு பற்றியும் நியூயார்க் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
நியூயார்க்குக்கு வெறும் ஏழு டாலரோடு போய்ச் சேர்ந்தேன். நண்பர்கள் யாருமில்லை. வேலையும் இல்லை. சுரங்க நடைபாதைக் கூலித் தொழிலாளியாக வேலையும் இல்லை. சுரங்க நடைபாதைக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தேன். பார்க் பெஞ்சுகளில் தான் உறங்கினேன். நான் மேல்வர்க்கத்திலிருந்து வந்தவனாக இருந்திருந்தால் இந்த நிலைமையைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சிரித்திருக்க முடியும்.
மூன்று மாதங்கள் அங்கே இருந்தேன். அந்த ஊர் கட்டிடங்கள் என்னைப் பயமுறுத்தின. அந்த மக்கள் என்னைப் பயமுறுத்தினர். அமெரிக்கா முழுவதும் பொறுக்கியாகத் திரிந்திருக்கிறேன் ஆனால் நியூயார்க் நகரத்தைப் போல் வேறு எந்த நகரமும் என்னைப் பயமுறுத்தியதில்லை. அது ஒரு நரகம். ஓடி ஆலனின் புத்திஜீவிப் பாத்திரங்கள் அந்த நகரில் கஷ்டப்படுவதற்கும் என்னைப் போன்ற அடித்தட்டு மனிதனின் கஷ்டத்திற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. அங்கே எனக்கு செக்ஸ•க்கு கூட வழியில்லாமல் போயிற்று. நியூயார்க் பெண்கள் என்னிடம் பேசுவதற்கே தயங்கினார்கள். நியூயார்க்கில் நான் ஒரு பெண்ணுடன் படுத்தேன் என்றால் அது 30 ஆண்டுகளுக்குப் பிறகு நானே ஒரு வேசியை அழைத்துக் கொண்டு சென்ற போதுதான். ''நியூயார்க் குவார்ட்டர்லி'' ஒன்றுதான் அங்கே எனக்கு நடந்த நல்ல விஷயம்.
நீங்கள் சிறுகதைகள், நாவல்களெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கவிதைகள் எங்கிருந்து வருகின்றனவோ அங்கிருந்துதான் அவைகளும் வருகின்றனவா?
ஆமாம். அதிக வித்தியாசமில்லை. சிறுகதைகள், என் வீட்டு வாடகைக்கு உதவுகின்றன. தற்கொலை, பைத்தியம், முதுமை, இயற்கை மரணம், துர் மரணம் இவற்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாழ்வில் எவ்வளவு வெவ்வேறான விஷயங்கள் நடக்கக்கூடும் என்பதைச் சொல்லும் களம்.
உங்கள் எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் உறவு என்ன? உங்கள் கவிதைகளில் தெரியும் ப்யூகோவ்ஸ்கிதான் நீங்களா?
கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. முன்பு இருந்த கணம் இப்போது இல்லை. இப்போது அது மாறிவிடுகிறது. 35 வயதில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர் மருத்துவமனைகளின் மரணப் படுக்கையிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பி வந்து கவிதை எழுதத் துவங்கினேன். உங்கள் கவிதை எழுதத் துவங்கினேன். உங்கள் கவிதையை மற்றவர்கள் படிக்க வேண்டுமானால் அவர்கள் உங்களைக் கவனிக்கும் படி செய்ய வேண்டும். மக்கள் என்னை வெறுக்கும்படி மிக இழிவான விஷயங்களை எழுதினேன். ஆனால் சுவாரசியமாகவும் எழுதினேன் என்று சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் இந்த ப்யூகோவ்ஸ்கி பற்றி ஆர்வம் கொண்டார்கள். போலீஸ் வாகனங்கள் மீது மூத்திரம் அடித்தேன். ஹ’ப்பிகளைக் கண்டு எள்ளி நகையாடினேன். என் வீட்டில் பார்ட்டிகள் கொடுக்கும்போது போலீஸ் ரெய்டுகள் நடந்தன.
ஒரு பேராசிரியர் என்னை அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். அவர் மனைவி அருமையாகச் சமைத்திருந்தார். விருந்து முடிந்ததும் அவர் சமையலறையிலிருந்த பாத்திரங்களை உடைத்துப்போட்டேன. I was in and out of drunk tanks. ஒரு பெண் அவள் ஒரு - என் மீது கற்பழிப்புக் குற்றம் சாட்டினாள். இது எல்லாவற்றையும் எழுதினேன். இது தான் நான். அதே சமயம், இது நான் அல்ல. காலப் போக்கில், பிரச்சினைகளும் விவகாரங்களும் தானாகவே என்னைத் தேடி வந்தன. அவற்றையும் எழுதினேன். இயல்பில் நான் மூர்க்கன் அல்ல. செக்ஸ் விஷயத்தில் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் நான் ஒரு மோசமான குடிகாரன். அப்படி நான் போதையில் இருக்கும்போது பல ஆச்சரியமான சம்பவங்கள் நடந்துள்ளன. நான் நினைத்ததை இங்கே சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எழுத்தில் எவ்வளவு மூழ்குகிறேனோ அவ்வளவுக்குத் துன்பத்தை அனுபவிக்கிறேன். கவிதையில் தெரியும் நானில் 93 சதவிகிதம் நிஜ நான் தான். மீதி ஏழு சதவிகிதம் - வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கலை ....பின்னணி இசையைப் போல.
இந்தப் பேட்டி பற்றி என்ன சொல்வீர்கள்? என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
பேட்டி நன்றாகவே இருந்தது. ஆனால் பதில்களில் படிப்பறிவு இல்லை, என்று சிலர் கூறலாம். அவர்கள்தான் என் புத்தகங்களை வாங்குவார்கள். என்னிடம் கேட்டுக் கொள்ள என் வசம் கேள்விகள் இல்லை. எழுத்துக்காக பணம் கிடைப்பது என்பது - ஒரு அழகான பெண்ணிடம் படுத்துவிட்டு எழுந்ததும் அவள் தன் பர்ஸைத் திறந்து நமக்குக் கை நிறைய பணத்தைத் கொடுத்துவிட்டுப் போவதைப் போல. நான் அதை எடுத்து கொள்வேன். இந்த இடத்தில் பேட்டியை நிறுத்திக் கொள்ளலாமே!
சமூகத்தின் ஆகக் கடைசியான பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றி எழுதிய ப்யூகோவ்ஸ்கி தன் இறுதி நாள் வரை எந்த இலக்கியக் குழுக்களோடும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை. தான் எந்த மக்களைப் பற்றி எழுதினாரோ அவர்களோடும் கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. விமர்சகர்கள் அப்படிச் சொன்னபோதெல்லாம் அதை வன்மையாக மறுக்கவும் செய்தார். அவரது எழுத்து மொழி கொச்சையாக, இலக்கிய நயமற்று மொண்ணையாக, தட்டையாக இருப்பதாகக் கூறி விமர்சகர்கள் அவரை நிராகரித்தார்கள். ப்யூகோவ்ஸ்கியின் மொழி பற்றிய இந்த அவதானம் சரியானதுதான். உதாரணமாக அவருடைய ''நகரின் மிக அழகிய பெண்'' என்ற சிறு கதையின் ஆரம்பம் இது.
''ஐந்து சகோதரிகளில் அவள் தான் மிகவும் அழகானவள். இளையவன். நகரிலேயே மிக அழகானவளும் அவள்தான்.''
இது தான் ப்யூக்கின் எழுத்து நடை. மொத்தம் 45 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். ப்யூகோவ்ஸ்கி. மற்றும் நூற்றுக்கணக்கான சிறுகதைகள். அரை டஜன் நாவல்கள். நேர்காணல்களும், அவர் எழுதிய கடிதங்களும் தனித் தனியே புத்தகங்களாக வந்துள்ளன. இவற்றில் 150 கவிதைகளையும், ''போஸ்ட் ஆஃபீஸ்,'' ''பெண்கள்'' என்ற இரண்டு நாவல்களையும், சில சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். எல்லாவற்றிலும் அவருடைய எழுத்து நடை மேலே குறிப்பிட்டுள்ள தட்டையான மொழியைத் தாண்டிச் செல்லவில்லை. ஆனால் அவற்றில் அவர் முன்வைத்துள்ள வாழ்க்கை - வெடிக்கப் போகும் ஒரு எரிமலையின் மீது நடந்து செல்வதைப் போல் உள்ள்து. என் மனம் கவர்ந்த எழுத்தாளர் கேத்தி ஆக்கரிடம் கூட இப்படி ஒரு வாழ்க்கையை நான் கண்டதில்லை.
ப்யூகோவ்ஸ்கியின் எழுத்துக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். ஃப்ரான்ஸில் இவரது கவிதைகள் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் - குறிப்பாக ப்ரஸ“லில் - இவர் ஒரு Celebrity. ஆனால் அமெரிக்கர்களுக்கு இவருடைய பெயர் தெரியாது. இதன் காரணத்தை ப்யூகோவ்ஸ்கியே அழகாகக் கூறுகிறார்.
''தென்னமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் சவால்களும் துணிச்சலும் பிடித்திருக்கின்றன. அமெரிக்கர்கள் பாதுகாப்பான இலக்கியத்தையே விரும்புகின்றனர். இந்தத் தூங்குமூஞ்சிகளுக்கு அதிர்ச்சியான, ஆபத்தான பாதைகள் பிடிப்பதில்லை, பழமையும் பாதுகாப்புமே இவர்களின் உலகம்.
மதுபான விடுதியின் அனுபவங்களை வைத்து Barfly என்ற திரைப்பட ஸ்க்ரிப்ட் ஒன்றை எழுதினார். ப்யூக். பின்னர் அது 1987 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. இவரது மரணத்துக்குப் பிறகு Dullaghan என்பவரால் ''Bukowsky: Born Into This" என்ற ஆவணப்படமும் தயாரிக்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் Barfly படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது - மார்ச் 22, 1987 - ப்யூகோவ்ஸ்கி ரோஜர் எபெர்ட் என்ற சினிமா விமர்சகருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த உரையாடலைப் பதிவு செய்திருக்கிறார் ரோஜர், பின்வருவது அதிலிருந்து சில பகுதிகள்.
ப்யூக்: நீண்ட காலம் எனக்குள் தற்கொலை மனோபாவம் இருந்தது. சாகவேண்டும் என்றே பார்களுக்குச் சென்று தகராறு செய்வேன். யாராவது என்னைக் கொன்று போடட்டும் என்று நினைப்பேன். வேடிக்கைதான். பிரச்சினையை நாமாகத் தேடிச் சென்றால் அது நம்மை விட்டு ஓடிப்போகும்.
ப்யூக் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வருகிறார் லிண்டா லீ. லிண்டா, ப்யூகோவ்ஸ்கியின் மனைவி. ப்யூக்கின் 65ஆவது வயதில் அவரை மணந்து கொண்டு, அவரது மரணம் வரை பராமரித்தவர் லிண்டா.
லண்டாவிடம் ''எங்கே இவரை முதல் முதலில் பார்த்தீர்கள்?'' என்று கேட்கிறால் ரோஜா, உரையாடல் தொடர்கிறது.
லிண்டா: 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை வாசிப்பில் இவரைப் பார்த்தேன்.
ரோஜர்: கண்டதும் காதலா?
லிண்டா : அவர் என்னைப் பார்க்கக்கூட இல்லை. பார்க்கிற நிலைமையிலும் இல்லை. அவ்வளவு போதை. அதோடு ஒரு பெண்ணின் மீது வேறு சாய்ந்து கொண்டிருந்தார்.
ப்யூக்: ஒரு பெண் அல்ல. பல பெண்கள். அப்போது நான் ''பெண்கள்'' நாவலை எழுதுவதற்காக ''ஆராய்ச்சி'' செய்துகொண்டிருந்தேன். அதனால் ஏகப்பட்ட ''ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய வேண்டியிருந்தது.
லிண்டா: எனக்கு என்ன தோன்றியது என்றால், அப்போது தான் அவரை முதல் முதலாகப் பார்ப்பதுபோல் இருந்தது. ஆனால் நிஜத்தில் அவர் எழுத்தை எனக்கு எவ்வளவோ காலமாகத் தெரியும்...
ப்யூக்: ஆத்ம சங்கமம்.... கடைசியில் இரண்ட வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டோம்.
லிண்டா: எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் காத்திருந்தோம்.
ரோஜா: இது தான் உங்கள் முதல் திருமணமா?
ப்யூக்: இல்லை, இரண்டாவது, நீண்ட காலத்துக்கு முன்பு தவறுதலாக ஒரு கோடீஸ்வரியை மணந்து விட்டேன்.
ப்யூக்: என் கதைகளை எல்லாப் பத்திரிகைகளும் திருப்பி அனுப்பின. பிறகு எல்லாவற்றையும் கிழித்துப் போட்டவிட்டு போர்னோ பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். நான் என்ன செய்வேன் என்றால் - ஒரு நல்ல கதையை எழுதுவேன். பிறகு அதில் கொஞ்சம் செக்ஸைக் கலந்துவிடுவேன். அது அருமையாக வேலை செய்தது. ஒரே ஒரு கதைதான் திரும்ப வந்தது. காரணம். அதில் செக்ஸைக் கொஞ்சம் அதிகமாகச் சேர்த்துவிட்டேன். பத்திரிகை ஆசிரியர் எனக்கு எழுதினார்: ப்யூகோவ்ஸ்கி, யாருமே இந்த உலகத்தில் பத்து நாட்களில் இத்தனை பெயர்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது.'' அதற்கு நான் எழுதிய பதில்: ''அது என்னுடைய உண்மைக் கதை.'' என் பதிலைப் பார்த்து விட்டு அந்த ஆள் பொறாமையில் நொந்து போயிருப்பான்.
போர்னோ பத்திரிகைகள் ஒரு கதைக்கு 230 லிருந்து 290 டாலர் வரை கொடுத்தன. ஆனால் இப்போது என் எழுத்து 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. இருந்தாலும் என்னிடம் எந்த வித்தியாசமும் இல்லை. முன்பு போலவே அடக்கமாகத் தான் இருக்கிறேன்.
ரோஜா: எழுத்து உங்களுக்குச் சுலபமாக இருக்கிறதா?
ப்யூக்: ஆமாம், ''முயற்சி செய்யாதே'' என்பதுதான் என் குறிக்கோள். என் தத்துவமே அது தான். முயற்சி செய்யக் கூடாது. இயல்பாக, தானாக அது நடக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கிறார்கள். எப்படி எழுதுகிறேன் என்று. நான் எழுதுவதற்கு முயற்சி செய்வதில்லை. முயற்சி செய்யாதீர்கள் அதுதான் முக்கியம். காருக்காக இருந்தாலும் சரி, கதைக்காக இருந்தாலும் சரி, முயற்சி செய்யாதீர்கள். காத்துக்கொண்டிருங்கள். எதுவும் நடக்காவிட்டால் இன்னும் கொஞ்ச அதிக காலம் காத்திருங்கள். சுவரில் ஒரு மூட்டைப் பூச்சியைப் பார்க்கிறீர்கள். அது உங்கள் அருகில் வரும்வரை பொறுமையாகக் காத்திருங்கள். பக்கத்தில் வந்ததும் அதை நசுக்கிக் கொன்றுவிடுங்கள். அல்லது, அதை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்களுடைய வளர்ப்புப் பிராணியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ப்யூக்: இரவில் எனக்குப் பிடித்த சிவப்பு ஒயினை குடித்துக் கொண்டு, மங்களூர் கணேஷ் பீடிகளைப் பிடித்தபடி எழுதிக் கொண்டிருப்பேன் - ரேடியோவில் சாஸ்த்ரீய இசை ஒலித்துக்கொண்டிருக்கும். நானா எழுதுகிறேன்? நாவல் தன் போக்கில் அதை எழுதிக் கொண்டு போகும்... ஆந்த்ரே, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. இங்கேதான் மக்கள் மதுக் கோப்பையின் உள்ள உண்மையைப் பார்த்தவர்கள்.
ஆந்த்ரே: ஆமாம் ப்யூக்... ஒயினில்தான் உண்மையே அடங்கியிருக்கிறது. மது நம்முடைய மனத்தடையை நீக்கிவிடுகிறது. அமெரிக்காவில் நீங்கள் மறைமுகமாக ஒடுக்கப்படுகிறீர்கள். ரஷ்யாவில் அது வெளிப்படையாக நடக்கிறது.
ப்யூக்: இந்தப் படத்தை எடுக்க ஷ்ரோடர் என்ன செய்தார் தெரியுமா? தயாரிப்பாளரிடம் நீண்ட நாட்களாக இது பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். கடைசியில் ஒரு நாள் ஒரு மின் ரம்பத்தை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் சென்றார். ''இந்தப் படத்தை நீங்கள் தயாரிக்காவிட்டால் நான் என் விரலை அறுத்துக் கொள்வேன். பிறகு உடலின் ஒவ்வொரு பகுதியையும் அறுத்துக் கொள்வேன்'' என்று சொல்லியபடி ரம்பத்தை எடுத்தார்.
ரோஜர்: அப்புறம் என்ன ஆயிற்று?
ப்யூகோவ்ஸ்கி தனக்குப் பிடித்த மான மங்களூர் பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். பிறகு எங்களைப் பார்த்து ''இதோ இங்கே இருக்கிறோம்'' என்றார்.
பின் குறிப்பு: ''இந்தப் பத்தியில் நீங்கள் சில மேற்கத்திய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைப்பது மிக நல்ல காரியம், பாராட்டுக்கள்'' என்றார் ஒரு நண்பர், நல்ல மனதுடன் அதை அவர் கூறினாலும் எனக்கு அது அவ மரியாதையாகவே தோன்றியது. காரணம்? படிப்பதில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் அறிமுகக் கட்டுரைகள் எழுதலாம். நோபல் பரிசு பெற்ற ஒரு செக்கோஸ்லோவேகிய எழுத்தாளரின் சிறுகதையையோ இடாலே கால்வினோவின் நாவலையோ, If, on a winter's night, a traveller இல் உள்ள Ifஐ விழுங்கி விட்டு - மொழிபெயர்க்கலாம். ஆனால் நான் செய்வது இப்படிப்பட்ட அறிமுகக் கட்டுரைகள் அல்ல, என் தேர்ந்தெடுப்பில் ஒரு அரசியல் உள்ளது. வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், ப்யூகோவ்ஸ்கி போன்றவர்கள் கதை எழுதவில்லை. தங்கள் உடலையே எழுதினார்கள். உடலின் மொழியாக, உடலின் அரசியலாக வெளி வந்தது. அவர்களின் இலக்கியம். நான் இலக்கிய சேவை கருதி இக்கட்டுரைகளை எழுதவில்லை.. நான் இந்த எழுத்தாளர்களில் என்னையே காண்கிறேன். இவர்களின் உடலோடு என் உடலின் முயக்கமே என் வாசிப்பும், எழுத்தும். இந்தக் கட்டுரையின் கையெழுத்துப் பிரதியில் இதன் தலைப்பைப் பார்த்துவிட்டு ஒரு கவிஞர் என்னைப் பற்றிய கட்டுரையா இது? என்று ஆர்வத்துடன் கேட்டார்.
இல்லை நம்மைப் பற்றிய கட்டுரை என்று பதில் கூறினேன்.
நன்றி: உயிர்மை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (1920-1994) - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நான், இல்லை, தான், உங்கள், ப்யூக், என்ன, கவிதை, நீங்கள், அவர், எனக்கு, நல்ல, ப்யூகோவ்ஸ்கி, அந்த, கொண்டு, லிண்டா, என்னைப், இப்போது, கவிதைகள், இந்தப், எழுத்து, பிறகு, எந்த, கொஞ்சம், முயற்சி, அதிக, பற்றி, என்றால், மீது, ரோஜர், எழுதினேன், நியூயார்க், காலம், அல்ல, பெண்கள், உடலின், அங்கே, என்னிடம், முன்பு, வேண்டும், கவிதையை, தனிமை, எழுதப்படுகின்றன, இருக்கிறது, பற்றிய, இவரது, எடுத்துக், ப்யூகோவ்ஸ்கியின், எழுதுகிறேன், கொள்வேன், எழுதிய, அவரை, போது, பார்த்தால், இருந்தாலும், நிறைய, எப்படி, ரோஜா, கவிதைகளைப், அவள், விட்டு, நீண்ட, மங்களூர், மக்கள், எழுதிக், சிறுகதைகள், போல், பிடித்த, அதில், செய்து, பார்த்து, ஆமாம், மரணம், செய்வேன், கெட்ட, என்னுடைய, சொல்ல, முடியாது, எவ்வளவு, தெரியும், பெண்