முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » ராஜா 'சாண்டோ'வின் அந்தக் காலம்
பொதுவான கட்டுரைகள் - ராஜா 'சாண்டோ'வின் அந்தக் காலம்
- மணா
கல்லில் மேல் இலைகள் படர்ந்திருக்கிற மாதிரியான நுணுக்கமான தூண்; கீழே இளம் கறுப்புக் கலரில் மார்பிள் பதித்த கல்லறை. அதிலிருக்கிற கல்வெட்டில் - ''பி. கே. ராஜா சாண்டோ : - நடிகர், இயக்குநர்'' என்று மங்கலான எழுத்துக்கள். கூடவே 1943 நவம்பர் 24 என்று அவர் அடக்கமான நாட்குறிப்பு. கோவை நகருக்கு வெளியே பாலக்காடு போகிற வழியில் உள்ள மயானத்தில் சரித்திரத்திலிருந்து நழுவிய நீர்த்திவலை மாதிரியான தனித்துவத்துடன் - ''ராஜா சாண்டோ'' வின் கல்லறை.
அறுபது வருஷங்களுக்கு முன்பு மறைந்த ''சாண்டோவைப் பற்றிய ஏதாவது ஞாபகம் இன்றைய தலைமுறைக்கு இருக்கமா?
புதுக்கோட்டையில் சாதாரணக் குடும்பம்; 19 வயதான ராஜாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை தேகப்பயிற்சி செய்த கட்டுமஸ்தான உடம்பு. சென்னைக்கு வண்டியேறிவிட்டார்.
சென்னைக்கு வந்ததும் கடலில் தத்தளித்த இரண்டு பேரைக் காப்பாற்றினார். உயிர் மீண்ட அவர்களுக்கு ராஜாவின் திரண்ட தோள், புஜபலத்தைப் பார்த்து வியப்பு. உடற்பயிற்சியில் அவருக்கு உள்ள ஈடுபாட்டைப் பார்த்ததும் தனிக்கொட்டகை அமைத்து வித்தைகள் காட்டினார் ராஜா. திரண்டு பார்த்தார்கள் மக்கள். தனிப் புகழ் கூடியது.
மங்களுர், கோலாப்பூர் மகாராஜாக்களுக்கு முன் வித்தைகள் செய்து காண்பித்ததும் ஆயிரம் ரூபாய் வரை சன்மானம் கிடைத்தது. நேரே பம்பாய் போனார். இவருடைய அசரவைக்கிற உடம்பைப் பார்த்து நடிக்கக் கூப்பிட்டார்கள். ''பக்த போடாணா'' இந்திப் படத்தில் நடித்தார். படம் வெற்றி. அடுத்து ''வீரபீம சேனன்'' படம். அதில் ராஜாதான் பீமன். அப்போதே இரண்டாயிரம் ரூபாய் சம்பளம்.
''ஆலம் ஆரா'' என்கிற முதல் பேசும் படம் வந்த பிறகு அடுத்து ''தெருத்தேவி'' என்று இன்னொரு பேசும் படம் எடுத்தார்கள். அதிலும் ராஜாதான் கதாநாயகன். இந்தியா முழுக்கப் பிரபலம். அவ்வளவு புகழ். இருந்தும் தமிழில் நடிக்க ஆர்வமிருந்தது ராஜாவுக்கு.
''அசோஷியேட் பிலிம்ஸ்'' ஸைச் சேர்ந்த ஆர்.பத்மனாபன் பம்பாய்க்குப் போய்த் தமிழகத்திற்கு வந்து டைரக்ட் பண்ண அழைத்ததும் உடனே ஒப்புக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். ஆங்கிலம், ஹ’ந்தி, குஜராத்தி, மராத்தி என்று பல மொழிகள் பேசினாலும் தமிழ்ப்படத்திற்காகச் சென்னைக்கு வந்ததும் ராஜா சொன்னார்'' ''என் தாய் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும்.''
''நல்லதங்காள்'' படத்தை ''ராஜேஸ்வரி'' என்கிற பெயரில் சமூகப் படமாக எடுத்து அதை இப்படி விளம்பரப்படுத்தினார். 'உங்கள் சொந்தப் படத்தைக் காணத் தவறாதீர்கள்.''
பாலசண்முகானந்தா சபாவின் புகழ்பெற்ற நாடகம் ''மேனகா''. வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான இதைச் சற்று மாற்றி 1935ல் சமூகப்படமாக எடுத்தார் ராஜா. கே.ஆர். ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்திய இந்தப் படத்தில் பாரதி பாடலை முதலில் இடம் பெறச் செய்ததும் பரபபரப்பானது. அப்போதே முத்தக்காட்சி இடம்பெற்ற இந்தப்படத்திற்கு பெரும் வெற்றி. அடுத்து இவர் டைரக்ட் செய்த ''வஸந்த சேனாவில் ராஜாவே நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ். கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்ந்து சந்திரகாந்தா, விஷ்ணுலீலா'' என்று இவர் இயக்கிய படங்களுக்குப் பிறகு தியாகராஜ பாகவதரின் சொந்தப் படமான ''திருநீல கண்டரை'' இயக்கியவர் ராஜா சாண்டோ. ''நீலகருணாகரனே..... நடராஜா'' போன்று புகழ்பெற்ற பல பாபநாசம் சிவனின் பாடல்கள், வசனம் இளங்கோவன். 1939ல் வெளிவந்த படம் 50 வாரங்களைக் கடந்து ஓடியது.
இவருடைய டைரக்ஷனில் கடைசியாக வெளிவந்த படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் ''சாண்டோ'' சின்னப்பாத்தேவர்.
''நடிப்பு சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்கு இணையான டைரக்டர் இந்தியாவிலேயே இல்லை'' என்று அவருடைய இயக்கத்தில் நடித்த நடிகர்களே சொல்கிற அளவுக்கு டைரக்ட் செய்யும்போது உணர்ச்சிகரமான ஈடுபாடு கொண்டவர் ராஜா. அப்போது பிரபல கராநாயகியான டி.பி. ராஜலட்சுமி இவருடைய படத்தில் நடிக்கும்போது ராஜா அடித்த பிறகே அழுகைக் காட்சியொன்றில் நன்றாக அழுது நடித்திருக்கிறார். இருந்தாலும் படம் முடிந்ததும் நடிகர்களைக் கூப்பிட்டு ''டேய் பசங்களா, தொழில் நேரத்தில் உங்களைக் கோபமா ஏதாவது திட்டியிருபேன். தாறுமாறாப் பேசியிருப்பேன். என்ன தவறு செய்திருந்தாலும் மறந்திருங்கடா'' என்று நெகிழ்வுடன் சொல்வாராம் ''சாண்டோ''.
தன்னுடைய கடைசிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு வந்து தங்கியிருந்த ராஜா சாண்டோவுக்கு நெஞ்சுவலி. உடற்பயிற்சி வித்தையில் பலரைத் தன் நெஞ்சில் குத்தச் சொல்லி அசையாமல் நின்ற சாண்டோவால் அவரது உடம்பே உருவாக்கிய இயற்கையான வலியைத் தாங்கமுடியவில்லை. மாரடைப்பால் 1943 நவம்பர் 24 அன்று அவரது உயிர் பிரிந்தது. கோவையிலேயே அடக்கம் செய்யப்பட்டு அந்த இடத்தில் பிரிட்டிஷ் பாணியில் கல்லறை.
புதுக்கோட்டையில் பிறந்து சென்னை, முப்பைக்குச் சென்று அகில இந்திய அளவில் பிரபலமாகித் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் தன் உழைப்பால் செதுக்கிக்கொண்ட ''ராஜா சாண்டோ''வைப் பற்றி அவருடைய ''மேனகா'' படத்தில் பணியாற்றிய ''அவ்வை சண்முகம்'' சொல்வது கனகச்சிதம்.
''தமிழ்நாட்டிலிருந்த வடநாடு சென்று திரையுலகில் முப்பதாண்டுக் காலம் தனியரசு செலுத்திய அந்தக் கலைச்செம்மல் வீரத் தமிழனின் மரணச் செய்தி எந்தப் பத்திரிகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழன் என்ற இனஉணர்வும், எழுச்சியும் இந்த நைந்த தமிழகத்திற்கு என்றுதான் வருமோ என்று அன்றே ஏங்கினோம்...'' என்கிறார் நிறையத் தவிப்புகளுடன்.
தமிழனின் திறமையைச் சக தமிழர்களே மறப்பது அப்போது மட்டும் நிகழ்ந்த ஒன்றா என்ன?
நன்றி: புதிய பார்வை
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராஜா 'சாண்டோ'வின் அந்தக் காலம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ராஜா, படம், சாண்டோ, படத்தில், சென்னைக்கு, டைரக்ட், அடுத்து, ராஜாவுக்கு, கல்லறை, இவருடைய