முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » நல வாழ்வுக்கு இருமுனை நடவடிக்கை
பொதுவான கட்டுரைகள் - நல வாழ்வுக்கு இருமுனை நடவடிக்கை
மக்களின் நலவாழ்வுக்கு ஊறு ஏற்படுவதைத் தடுக்கும் நல்ல நோக்கத்துடன் இரு முனைகளில் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. முழு அளவில் தூய்மை இல்லாத - பாட்டிலில் அடைத்த குடிநீரைத் தயாரிக்கும் எட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தர முத்திரை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இந்த எட்டு நிறுவனங்களில், சில பிரபலமான கம்பெனிகளும் அடக்கம்.
அடுத்து இதைப்போலவே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களில் புகைபிடிக்கும் பழக்கத்தைத் தூண்டக்கூடிய சிகரெட் போன்ற லாகிரிப் பொருள்களுக்கான விளம்பரங்களுக்கும் முழுத் தடை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துவிட்டது. சிகரெட் மற்றும் புகையிலைப் பண்டங்களுக்கான விளம்பரம் மற்றும் வர்த்தக நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தக்கூடிய இம்மசோதா நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமாக்கப்பட இருக்கிறது.
இவ்விரு நடவடிக்கைகளில் முதலாவது தூய்மைக் குறைவான பாட்டில் நீருக்குரிய தர நிர்ணய முத்திரையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை - விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து, நாட்டில் மினரல் வாட்டர் மற்றும் பாட்டில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் படிவங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இந்தியத் தர நிர்ணய நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு ஒத்த அளவில் அமைந்திருக்கவில்லை. எனவே இப்பிரச்சினையில் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சரத் யாதவ் எடுத்த அவசர நடவடிக்கையையொட்டி, எட்டு கம்பெனிகளுக்கான தர முத்திரை விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக இந்நிறுவனங்களால் குடிநீர்ப் பாட்டில் தயாரிப்புத் தொழிலில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நடவடிக்கை ஓரளவுக்குக் கடுமையானதே. ஆனால் மக்களின் நலவாழ்வுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரச்சினையில் கண்டிப்புக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதுமட்டும் போதாது. வெறும் குழாய் நீரை அல்லது குளத்து நீரைப் பாலிதீன் பாக்கெட்டில் அடைத்து குடிநீர் என விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும். பிரபல நிறுவனங்கள் கணிசமான பணத்தை முதலீடு செய்து தயாரிக்கும் குடிநீரிலேயே மாசு கலந்திருக்கிறதென்றால் இத்தகைய மலிவான பாக்கெட் நீரின் தன்மை எப்படி இருக்குமென்பதை நினைத்தாலே அச்சமேற்படுகிறது. எந்த அத்தாட்சியும் இல்லாத பாக்கெட் குடிநீர் விற்பனையை ஒழுங்குபடுத்துவது மாநில அரசுகளின் கடமையாகும். ஏனெனில் இந்த ரகக் குடிநீர், மலிவு விலையில் கிடைப்பது மட்டுமல்ல, ஏழைபாழைகள் வாங்குவதும்கூட.
அடுத்து சிகரெட் மற்றும் புகையிலைப் பண்டங்கள் விளம்பரத் தடைச்சட்டம்! புகையிலைப் பண்டங்களை நுகரும் வழக்கத்திற்கு எதிரான இயக்கத்துக்கு முன்னோடியாக இச்சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பண்டங்கள் குறித்து வண்ண வண்ண விளம்பரங்கள் பிரசுரமாவதற்கு இம்மசோதா தடை விதிக்கிறது. இதன் மூலம் இளம் நெஞ்சுக்குள் சிகரெட் போன்ற லாகிரிகள் நுழைவதற்கான வாய்ப்பு அடைக்கப்படுவது உண்மையே.
ஆனால் இந்த நடவடிக்கைகள் மட்டுமே போதாது. புகைபிடிப்பதற்கு எதிராக நாடு தழுவிய மக்கள் இயக்கத்தைத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு முன்னின்று நடத்த வேண்டும். அதன் மூலம் உருவாகக்கூடிய ஆரோக்கியச் சூழலை அடிப்படையாகக் கொண்டு பொது இடங்களில் புகைபிடிக்கும் பழக்கத்துக்குத் தடை விதிக்கும் ஆணையைக் கண்டிப்புடன் அமலாக்கலாம். அதற்கு பொதுமக்களின் ஆதரவும் தாராளமாகக் கிடைக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல வாழ்வுக்கு இருமுனை நடவடிக்கை - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - சிகரெட், புகையிலைப், குடிநீர், பாட்டில், மத்திய