பொதுவான கட்டுரைகள் - ஒன்றே செய்; நன்றே செய்
- சுவாமி ஆத்மானந்த்
வினைப் பயனைப் பற்றிச் சங்க இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் நீதிநூல்களிலும் மிகுதியாகவே காணுகின்றோம். இயற்கையின் நடைமுறை என்பதும், இறைவனுடைய திட்டம் என்பதும் வினைப்பயனை மையமாக வைத்தே இயங்குகிறது.
"வினை விதைப்பவன் வினையை அறுப்பான்; தினை விதைப்பவன் தினையை அறுப்பான்'' என்ற பழமொழி வினைப்பயனையே பேசுகிறது. இயற்கையின் நடைமுறையிலும் இறைவனுடைய திட்டத்திலும் வினைக்கேற்ற பலன் இல்லையெனில் உலகம் ஒரே நாளில் சின்னாபின்னமாகிவிடும். மாந்தரது உள்ளத்தில் ஒழுக்கம், நீதி, அன்பு, கருணை, இரக்கம் என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்து போய்விடும். வினைப் பயனுக்கும் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் அஞ்சித்தான் மாந்தர் உலகம் இயங்கிவருகின்றது.
மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலின் பலனையும் அவன் அனுபவித்தே ஆகவேண்டும். ஒருமுறை செய்த செயல் அதன் பலனை அளிக்கும் வரையில் அதை அழிக்க முடியாது. நாம் ஏதாகிலும் தீமை செய்தால் அதற்காக நாம் துன்பப்பட்டே ஆகவேண்டும். அதைப்போலவே நாம் ஏதாகிலும் நன்மை செய்தாலும் அது தரும் நற்பலன்களைத் தடுக்கின்ற ஆற்றலும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
- என்பது வள்ளுவம்.
உலக வாழ்வு என்பது என்ன? இயற்கையை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம்தான். உண்மையில் ஒவ்வொரு கணமும் நாம் இயற்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டுதானிருக்கிறோம். நாம் தோற்றால் நமது வாழ்வு அத்துடன் முடிவுக்கு வந்துவிடும். மானுட வாழ்வு என்பது உணவிற்காகவும் காற்றுக்காகவும் நடக்கும் தொடர்ந்த போராட்டமாகத்தான் இருக்கின்றது. உணவோ காற்றோ இல்லாது போய்விட்டால் நாம் இறந்து விடுகின்றோம். வாழ்க்கை என்பது தடையற்றுப் பாய்கின்ற நீரோட்டமல்ல. எத்துணை எத்துணையோ இடையூறுகளுக்கும் தடைகளுக்கும் இடையில்தான் நாம் வாழ்ந்தாக வேண்டியிருக்கின்றது.
சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் நினைக்கிறான். சுயநலத்தால் சுகம் கிடைக்காது. தன்னலத்தை ஒழிப்பதில்தான் சுகம் இருக்கிறது. இந்த உண்மையைப் பல ஜென்மாந்திரங்களுக்குப் பிறகே மனிதன் உணர்ந்து கொள்கிறான்.
தன்னை உயர்த்திக்கொள்வதும் தாழ்த்திக் கொள்வதும் தன் கைவசத்தில்தான் இருக்கின்றது. தனக்கு நண்பனும் பகைவனும் தானேதான். இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தன்னலம் மனத்தை மாசுபடுத்துகின்றது. பிறர்நலம் பேணுதல் மனத்தைத் தூயதாக்குகிறது. பொதுநலச் சேவையில் ஈடுபடுவது நமது மனத்தைத் தூய தாக்குதற்குத்தான். உலகிற்குச் சேவை செய்வதன் மூலம் நம்மை நாம் முற்றிலும் மறக்கத் தொடங்குகிறோம். நம்மை மறப்பது என்பது சாதாரண விஷயமன்று. நம்மை மறத்தல் என்பது வாழ்வில் நாம் கற்க வேண்டிய மிகப்பெரும் பாடமாகும். நம்மை மறக்கும் போதெல்லாம் நாம் ஆனந்தத்தில் திளைக்கின்றோம். நம்மை நாம் நினைக்கும் போதெல்லாம் துன்ப துயரங்களுக்கு உள்ளாகின்றோம். அயர்ந்த உறக்கத்தில் நம்மை நாம் மறந்து விடுகின்றோம். உலகையும் மறந்து விடுகின்றோம். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் பெறுகின்ற ஆனந்தத்திற்கும் மன அமைதிக்கும் ஈடுஇணை ஏது? மனத்தூய்மையை எது தருகின்றதோ அது அறச்செயல். அன்பையும் பணிவையும் அது நல்குகிறது. பொதுநலச் சேவையில் ஈடுபடுவோர், கருணை உள்ளம் கொண்டவராக இருக்கின்றார். "பணியுமாம் என்றும் பெருமை'' என்னும் வள்ளுவத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார்.
யோகங்கள் அனைத்தினுடைய முடிந்த லட்சியம், தன்னை மறத்தலேயாகும். அங்கே "நான் இல்லை, எல்லாம் நீயே' என்ற மனநிலைதான் இருக்கின்றது. கர்மயோகம் மனிதனை அந்த உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
நீதி நூல்கள் அனைத்தும் தன்னல மறுப்பையே வலியுறுத்துகின்றன. சுயநலத்தை எந்தச் சமய நூலும் பாராட்டிப் பேசுவதில்லை. தன்னல மறுப்பே எல்லா ஒழுக்கத்திற்கும் சீரும் சிறப்புக்கும் அடிப்படையாய் இருக்கின்றது. சுயநலம்தான் எல்லாத் தவறுகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் காரணமாய் இருக்கின்றது. மானுடமனம் விரிவடைய விரிவடைய அன்பு பெருகுகின்றது. அருள் வளர்கின்றது. கருணையுள்ளம் மலர்கின்றது.
உலகத்தில் பலவகையான மனிதர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நான்கு வகையாகப் பாகுபடுத்தலாம். முதலாவதாக இருப்பவர்கள் தெய்வீக மனிதர்கள். இவர்கள் பரிபூரணமாகத் தன்னலமற்றவர்கள். இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்கின்றவர்கள். தங்கள் இன்னுயிர் ஈந்தும் உலக நலனுக்கென்று உழைப்பவர்கள். "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு'' என்ற வள்ளுவத்துக்கு விளக்கமாக வாழ்கின்றவர்கள். இத்தகையோர் ஒரு நாட்டில் நூறுபேர் இருந்தாலும் போதும். அந்த நாடு எதற்கும் கவலைப்படவேண்டியதில்லை. "ஒரு நூறு இளைஞர்களைத் தாருங்கள். இந்த உலகையே மாற்றிக்காட்டுகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்த நாட்டில் அந்த நூறு இளைஞர்கள் சுவாமி விவேகானந்தருக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த நாடு அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்படுகிறது. எங்கும் சுயநலமும் ஊழலும் பெருகி நாட்டை உருக்குலைக்கின்றன.
இரண்டாவது வகையினர் தங்களுக்குத் துன்பதுயரம் நேராத வரையில் பிறர் நலத்தின் பொருட்டு உழைக்கும் நல்லோர்கள். முதலில் இவர்கள் தங்களின் நலனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்வார்கள். எஞ்சிய நேரத்தில் பிறர் நலனிலும் கருத்துச் செலுத்துவார்கள்.
மூன்றாவது வகையினர் தங்களுக்கு நன்மை செய்து கொள்வார்கள். அதேசமயத்தில் தன்னலம் கருதி பிறருக்குத் தீங்கு இழைக்கவும் தயங்கமாட்டார்கள்.
நான்காவது வகையினர் என்போர் மனிதத் தன்மை என்பதும் சிறிதும் அற்றவர்கள். வடிவத்தில் அவர்கள் மானுடர். ஆனால் இயல்பிலோ கயவர்கள். மக்களே போல்வர் கயவர் என்றும் விலங்கொடு மக்களனையர் என்றும் வள்ளுவம் இவர்களைத்தான் சுட்டுகின்றது. இவர்கள் நலம் ஏதும் செய்யமாட்டார்கள். தீமை செய்ய வேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காகப் பிறருக்குத் தீங்கிழைப்பார்கள்.
ஒன்றே செய்; நன்றே செய்; இன்றே செய்; இன்னே (இப்பொழுதே) செய் என்பது ஆன்றோர் கூற்று. நல்லது செய்தல் படிப்படியாக நம்மைத் தன்னலமற்ற உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் உலக நலனின் பொருட்டுத் தியாகம் செய்கின்ற ஒப்பற்ற நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. இந்த நிலையை ஒருவன் அடைந்துவிட்டால் கர்மயோகம் குறிப்பிடுகின்ற நிறைநிலையை அவன் அடைந்தவனாகின்றான். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற பெருநெறிபிடித்து ஒழுகுபவன் அடைகின்ற பெரும்பேறு இதுவேயாகும்.
பிறர்நலனின் பொருட்டுத் தன்னைத் தியாகம் செய்கின்ற கர்மயோகி - பக்தன் பிரார்த்தனையின் மூலமாகவும் தத்துவஞானி ஞானத்தின் மூலமாகவும் அடைகின்ற அந்த உன்னதநிலையை அடைகிறான். கர்மமும், பக்தியும், ஞானமும் இங்கே சங்கமம் ஆகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்றே செய்; நன்றே செய் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நாம், என்பது, நம்மை, இருக்கின்றது, ", செய், அந்த, மனிதன், நிலைக்கு, வகையினர், இவர்கள், அழைத்துச், விடுகின்றோம், செய்கின்ற, என்பதும், வாழ்வு, சுவாமி, சுகம், என்றும்