முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » தவணை முறையில் நிகழும் தற்கொலை?
பொதுவான கட்டுரைகள் - தவணை முறையில் நிகழும் தற்கொலை?
- கை. திருநாவுக்கரசு
கடந்த ஆயிரம் ஆண்டுகளோடு ஒப்பிடும்போது 1998 ஆம் ஆண்டுதான் அதிக வெப்பமிகு ஆண்டாக அறியப்பட்டுள்ளது.
1961-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலையோடு ஒப்பிடும் போது 1998 ஆம் ஆண்டு 0.55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் புவியின் வெப்பநிலை உயர்வால் உலகெங்கும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பலியாயினர். அடுத்து வரும் முப்பது ஆண்டுகளில் இத்தகைய மரணங்கள் இரு மடங்கு ஆக உயரக் கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
ஐ.நா.வின் அனைத்து அரசாங்கங்களின் வெப்பநிலை மாறுபாட்டு ஆய்வுக்குழு அடுத்த நூற்றாண்டில் புவியின் சராசரி வெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ் முதல் 5.8 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று அபாய அறிவிப்பு செய்துள்ளது. இதனால் வறட்சி அதிகரிக்கும்; வெப்பநிலை உயர்வால் பனியாறுகள் உருகும். துருவப் பகுதிகள் உருகத் துவங்கினால் கடல் நீர் மட்டம் உயரும்.
இந்து மாக்கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் 1,180 தீவுகள் உள்ளன. இவற்றில் எண்பது விழுக்காடு தீவுகள் கடல்மட்டத்திலிருந்து வெறும் மூன்று அடி உயரத்தில் மட்டுமே அமைந்துள்ளன. கடல்நீர் மட்டம் உயரும் போது மாலத்தீவுகள் முற்றிலுமாக அழியக்கூடிய ஆபத்து உள்ளது. 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் அரையடி முதல் மூன்றடி வரை உயரக் கூடும் என்று அனைத்து அரசாங்கங்களின் வெப்பநிலை மாறுபாட்டு ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது. நூறு அல்லது இருநூறு ஆண்டுகளில் சின்னஞ்சிறிய தீவுகள் முற்றிலுமாக அழிந்து விடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜப்பான் நாடு முப்பது மில்லியன் டாலர் (சுமார் ரூ. 140 கோடி) உதவித் தொகையே மாலத்தீவுக்கு வழங்கியுள்ளது. இப்பெருந் தொகையைக் கொண்டு மாலத் தீவின் தலைநகர் மாலேவைச் சுற்றிலும் ஒன்பது அடி உயரக் கான்கிரீட் சுவர், கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பதற்காக அமைக்கப்பட்டு வருகிறது.
புவியின் வெப்பநிலை உயர்வால், நம்நாட்டில் இமாசலப் பிரதேசத்தில் உள்ள பேஸ்பா வடிநிலத்தில் இருந்த நான்கு பனியாறுகள், முழுமையாக மறைந்துவிட்டன என்பதை அகமதாபாத்தில் உள்ள விண்வெளி செயற்பாட்டு மையம் செயற்கைக் கோள் மூலம் கண்டறிந்துள்ளது. மேலும் பதினைந்து பனியாறுகள் இவ்வாறு மறையத் தொடங்கி இருப்பது இம்மையம் எடுத்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இமய மலைகளின் பனியாறுகள் வடஇந்திய நதிகளின் மூலங்கள். பனியாறுகள் மறையத் தொடங்கினால் நதிகளின் நீர் வரத்து காலப்போக்கில் குறையத் தொடங்கும். இமாசலப் பிரதேசத்தில் நீர் மின்சக்தி உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும்.
குளிர் சாதனங்களைப் பயன்படுத்துவதால் வெளிப்படும் குளோரோ ஃபுளுரோ கார்பன்கள் மூலம் ஏற்பட்ட ஓசோன் படலத்தில் ஓட்டை, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பளவைப்போல் மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது! ஓசோன் படலம் என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பதற்காக இயற்கைத் தாய் பூமிக்கு வழங்கிய கேடயம். இதில் ஏற்பட்ட ஓட்டையினால் புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்குகின்றன. தோல் புற்றுநோய் உட்படப் பல்வேறு வகையான கொடிய நோய்களைத் தோற்றுவிக்கின்றன. புவியின் வெப்பநிலை உயர்வுக்கு இந்த ஓசோன் ஓட்டையும் ஒரு காரணம் எனலாம்.
கோடிக்கணக்கான தானியங்கி ஊர்திகளும், லட்சோபலட்சம் தொழிற்சாலைகளும் விடுக்கும் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன்கள், நைட்ரஜனஸ் ஆக்சைடுகள் காற்று மண்டலத்தையே மூச்சுத் திணறச் செய்கின்றன. புவியன் வெப்பத்தை அதிகரிக்கின்றன. பூமியைக் குளிர்விக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் நாள்தோறும் அழிக்கப்படுகின்றன. காட்டுத் தீயினால் தொடர்ந்து எரியும் காடுகள் விடுக்கும் புகையும் காற்று மண்டலத்தை வெப்பப்படுத்துகிறது. அளவுகடந்த மக்கள் தொகைப் பெருக்கமும் புவியின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகிறது.
காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்களைத் தவிர்க்க முனைவதே இதற்கான தீர்வாகும். நீர் மின்சக்தி, சூரிய ஆற்றல் போன்றவற்றை மாற்றாகப் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆராய வேண்டும். காற்றை மாசுபடுத்தாத தானியங்கி ஊர்திகளைக் கண்டறிய முனைய வேண்டும். காடுகளை ஏராளமாக வளர்க்க வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க வேண்டும்.
உலக நாடுகள் தத்தம் தொழிற்சாலைகள் விடுக்கும் புகையைக் குறைத்து, காற்று மண்டலம் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று 1997 இல் கியோட்டோவில் 178 நாடுகள் ஒருமித்துக் குரல் கொடுத்தன. 2008 - 2012 ஆண்டுகளுக்குள் உலகத் தொழிற்சாலைகள் விடுக்கும் புகையை, 1990 ஆம் ஆண்டில் இருந்ததை விடி ஐந்து விழுக்காடு குறைக்க வேண்டும் என்று இம்மாநாடு கோரியது. கியோட்டோ புவி வெப்ப உயர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. இதில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்துவிட்டது. தனது நாட்டின் தொழிற்சாலைகள் விடுக்கும் புகையினைக் கட்டுப்படுத்த மறுத்ததற்கு அமெரிக்கா சொன்ன காரணம்: இச்செயல் எங்களது பொருளாதாரத்தைப் பாதிக்கும்
காற்றை மாசுபடுத்துவதும், புவியை வெப்பமுறச் செய்வதும் மனிதகுலம் தவணை முறையிலே செய்து கொள்ளும் தற்கொலையே அன்றி வேறென்ன!
தேடல் தொடர்பான தகவல்கள்:
தவணை முறையில் நிகழும் தற்கொலை? - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வெப்பநிலை, வேண்டும், பனியாறுகள், விடுக்கும், புவியின், நீர், செல்சியஸ், ஓசோன், காற்று, காற்றை, தொழிற்சாலைகள், டிகிரி, மூலம், தீவுகள், உயரக், மக்கள், ஆண்டில், ஆண்டுகளில், உள்ள, மட்டம், உயர்வால்