முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » இங்கர் சாலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
பொதுவான கட்டுரைகள் - இங்கர் சாலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
இங்கர்சால் அமெரிக்க நாட்டில் ஒரு நல்ல குடும்பத்தில் தோன்றினார். இளமையில் அவர் மனதில் மத தத்துவங்களில் அவ நம்பிக்கையிருந்த போதிலும் சிந்தனையின் மூலம் பல நல்ல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவற்றை படித்தால் அவை சிந்தனையை தூண்டுவதோடல்லாமல் படிப்பவர் மனத்தில் பல மேம்படுத்தும் எண்ணங்களை ஊக்குவிக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
மனிதனின் லட்சியச் சுருக்கம், நடத்தை, முன்னேற்றப் பாதைகள் இவற்றை அவர் மிகத் தெளிவாகவும், விறுவிறுப்புடனும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கர்சாலின் கருத்துக்களை நன்றாகப் படித்து தமது எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ளவே அவரின் சிந்தனைதுளி, அறிவுப் பெட்டகம், கருத்துப்பட்டறை இதோ...
பூரண அன்பு:
ஒரு நல்ல பெண்மணியின் (மனைவி) பூரண அன்பை ஒருவன் அடைந்து விட்டால், அவன் பிச்சைக்கார வாழ்க்கை வாழ்ந்து செத்துவிட்டாலும், தன் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவன் ஆவான்.
உண்மைகள்:
உண்மைகள் எஜமான்கள்; அறியாமையின் விரோதிகள்; அறிவாளியின் சேவகர்கள், நண்பர்கள்:
நல்ல காரியம்:
நல்ல காரியம் எனப்படும் தாய்க்கு குழந்தைகள் பிறக்காமற் போகாது.
சொர்க்கமே என்றாலும்:
கடவுள் அளிப்பதான பட்டாடையை அணிய விரும்புவதை விட, சன்னல் இல்லாத கல்லறையையும் அதிலே நெளியும் சிவந்தவாய்ப் புழுக்களையுமே, நான் விரும்புகிறேன்!
இருட்டறையில் ஒரு தீபம்!
மனிதன் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தான் என்றால், இருட்டறையில் ஒரு தீபத்தை அவன் ஏற்றினான் என்று பொருள்.
பழமையும் புதுமையும்:
சமுதாயவாதிகளின் இரத்தத்தைக் கொண்டுதான், அறிவுலக வளர்ச்சியின் வரலாறு தீட்டப்படுகின்றது.
இரட்டைக் குழந்தைகள்:
சிம்மாசனமும் பலிபீடமும் இரட்டைக் குழந்தைகள். ஒரே முட்டையிலிருந்து பிறந்தவை.
அமைதியும், புயலும்:
அறியாமை, நம்பிக்கை என்ற உயிரற்ற அமைதியைவிட, எண்ணம், துணிவு, செயல் என்ற புயல், அமள், பிரசண்டமாருதம் ஆகியவற்றையே விரும்புகின்றேன்.
நல்லரசு:
பல நல்ல குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததுதான் ஒரு நல்ல அரசாங்கம் ஆகும்.
வாழ்க்கை:
வாழ்க்கை முழுவதும் இளந்தென்றலாகவோ, அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவோ இருப்பதில்லை. இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும், பின்னதை எதிர்த்து நிற்கவும், மானிடம் அறிந்து கொள்ள வேண்டும்.
மூடநம்பிக்கையும், விஞ்ஞானமும்:
மூடநம்பிக்கை என்பது - ஒரு கொள்ளைக்காரன் ஒரு கொலை பாதகன்.
விஞ்ஞானம் அறிவு வெளிச்சம் தருகின்றது. அறிவுப் பிரச்சாரம் ஒன்றினால் மட்டுமே, மூடநம்பிக்கையை விரட்டியடிக்க முடியும்.
ஆராய்ச்சி:
சந்தேகம் தான் ஆராய்ச்சியை வளர்க்கின்றது.
அன்பும் இன்பமும்:
அன்பு தான் உலகிலேயே மிகவும் மலிவான பொருள்; அது, தன்னைப் பெறுபவருக்கும் வழங்குபவருக்கும் அதிகமான இன்பத்தை வழங்கும்.
எது புரட்சி:
ஒரு எழுத்தைக் கற்றுத் தருவது, ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும். ஒரு பாட சாலையைக் கட்டுவது, எதிரியைத் தாக்க ஒரு கோட்டையைக் கட்டுவது போல ஆகும்.
பெண் விடுதலையற்ற நாட்டில்:
விடுதலை இல்லாத மகளிர்-சுதந்தரமற்ற தாய்மார்கள் ஆகியோர் இருக்கின்ற நாட்டில், வீரப் புதல்வர்கள் உதிக்க மாட்டார்கள்.
காதல்:
காதல் மணம் இல்லாத வாழ்க்கையில், வாழ்வும் வெற்றியும் இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை.
அறியாமை:
அறியாமை இரகசியத்தின் தாய், துன்பத்தின் பிறப்பிடம், குருட்டு நம்பிக்கையின் அன்னை, சங்கடம் தோன்றிய இடம், அழிவும் வறுமையும் வாழ்ந்து வரும் தாயகம்.
கடவுள் பற்றி:
கடவுள் இல்லை, என்று நான் கூறவில்லை. ஏனெனில், அது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் கூறுகின்றேன் -
கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை. ஏனெனில், அதற்கான சாட்சியங்கள் என்னிடம் கிடையா!.
இயற்கையின் திருவிளையாடல்:
எந்த விதமான நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை உண்டாக்குகின்றது. அதே போன்று, எவ்வித வருத்தமும் இன்றி அவனை அழிக்கின்றது.
புரட்சி கருத்துக்கள்:
பஞ்சத்தைத் தடுக்க ஆயிரமாயிரம் உபதேசங்களைச் செய்வதைக் காட்டிலும், ஒரு உழவு எவ்வளவோ நன்மை செய்யும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இங்கர் சாலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நல்ல, கடவுள், வாழ்க்கை, நான், அறியாமை, குழந்தைகள், நாட்டில், இல்லாத