முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » பெண் போலீஸ் பெருமை பெற...
பொதுவான கட்டுரைகள் - பெண் போலீஸ் பெருமை பெற...
- இரா. இரத்தினகிரி
பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான உடல் திறன் தேர்வு சென்னையில் நடைபெற்ற இடத்தில் ஆம்புலன்ஸ் கூட தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காவலர் தேர்வுக்கு வந்த பெண்களில் சிலர், தங்கள் உடல் திறன் தேர்வுக்கான பயிற்சிகளைச் செய்ய முடியாமல் மயங்கி விழுந்தனர். சிலர் காயமடைந்தனர். சோர்ந்து விழுந்தவர்களைப் பெண் காவலர்கள் தூக்கிச் சென்றார்கள். (தினமணி 5.8.03).
மக்களைச் சமூக விரோதிகளிடமிருந்து காத்திடும் பணிகளுக்கு வருபவர்களே அதற்கான உடற்பயிற்சி செய்ய இயலாமல் பலவீனர்களாக இருக்கிறார்கள்! பெரும்பாலும் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும் சொல்லிக் கொடுப்பதில்லை; ஆசிரியர்களும் அறிவுறுத்துவதில்லை. பெண்கள் எல்லா இடங்களிலும் பலவீனர்களாகவே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
போலீஸ் என்ற வார்த்தை பொலிசியா என்ற லத்தீன் மொழிச் சொல்லின் திரிபு ஆகும் குடிமக்கள் வாழ்வு மற்றும் உடைமைப் பாதுகாப்பு நிறுவனம் என்ற பொருளை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவில் 1972-ல் தான் முதன்முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டார். 1973-ல் முழுமையாகப் பெண் காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் காவல் நிலையத்தை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தொடங்கி வைத்தார். 27.12.1973 அன்று சென்னையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், 20 பெண் காவலர்களைக் கொண்ட மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
அடுப்படியே திருப்பதி, ஆம்படையானே குல தெய்வம் என்று வாழும் கட்டுப் பெட்டியான வீட்டுப் பெண்ணுக்கும் பெண் காவலர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதைக் காவல் மகளிர் கண்டிப்பாக உணர வேண்டும். கொடுமைகளுக்கு ஆளானவர்கள், ஆதரவற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகவே நாம் சேவை செய்கிறோம் என்ற அடிப்படைப் பொறுப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டும். காவல்துறைக் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய தம் உடல் திறனைக் காத்துக் கொள்ளவும் வலிமையை மேம்படுத்தவும் பராமரிக்கவும், பெண் காவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
காக்கி நிறத்தில் காவலர் உடை அவர்களுக்கு எப்படி ஒரு கம்பீரத்தைக் கொடுக்கிறதோ அது போலவே, தங்களை அலங்கரித்து வடிவமைத்துக் கொள்ளும் விஷயத்திலும் ஒரு ஒழுங்கு முறையை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெண் காவலர்கள் கட்டாயம் தங்கள் தலைமுடியைக் கிராப் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் கிராப் வெட்டிக் கொண்டால் நூறு ரூபாய் பரிசு வழங்குவதாகவே பெரியார் அறிவித்திருந்தார்.
பெண் போலீசார் நேர் காணல் ஒன்றில் கிடைத்த விவரங்களின்படி இந்த வேலைக்கு வந்தவர்களில் 16 விழுக்காட்டினர் மட்டுமே விரும்பி வந்ததாகத் தெரிவித்திருந்தார்கள். இப்போதுள்ள பெண் போலீசாரில் 31 விழுக்காட்டினர் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். 64 விழுக்காட்டிற்கு மேல் திருமணம் ஆனவர்களாக உள்ளார்கள்.
மேல்நாடுகளைப் பார்த்து பெண் காவலர் பணிகளைத் தொடங்கியவர்கள், அந்தந்த நாடுகளில் பெண் காவலர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன? அவர்கள் உடைகள் எப்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பனவற்றை ஆராய்ந்து பார்த்து அவற்றில் சிறந்தனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெண் காவலர்கள், பணி நேரத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நிறைவேற்றி, பின் வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலையையும் அவர்களே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் சமுதாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளவோ, அவகாசம் அல்லது ஆர்வம் அற்றவர்களாக உள்ளார்கள். நூற்றுக்குப் பத்து பேர் கூட அன்றாடம் செய்தித்தாள் வாங்குகிறார்களா என்பது சந்தேகம். பின்னர் எப்படி மற்றவர்களைப் பார்த்து, தங்களை உயர்த்திக் கொள்ள, தகுதிப்படுத்திக் கொள்ள முடியும்?
பெண் காவலர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையை எளிமையானதாக வைத்துக் கொள்ள வேண்டும். திருமணத்தைத் தவிர்க்க முடியாவிடில் விவசாயி, வணிகர், சமூகத் தொண்டர் போன்றோரையே திருமணம் செய்து கொள்ள அவர்கள் முன்வர வேண்டும்.
கண்ணியமானவராக, கடமையாற்றும் வீரப் பெண்ணாகத் தங்களை உறுதியாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இதை அரசோ, சமுதாயமோ, சட்டங்களோ கூட செய்ய முடியாது. தம் பொறுப்பை, கடமையைத் தாமே ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துத் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பெண் காவலர் பெருமைபடக் கடமையாற்றிட முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண் போலீஸ் பெருமை பெற... - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பெண், வேண்டும், கொள்ள, செய்ய, காவலர்கள், காவலர், தங்களை, காவல், பார்த்து, பெண்கள், உடல், தங்கள், எப்படி