முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » வாழ்நாள் முழுமையும் இனிமையே
பொதுவான கட்டுரைகள் - வாழ்நாள் முழுமையும் இனிமையே
- க. ஜகந்நாதன்
மனிதனின் ஆரோக்கியமென்பது உண்ணும் உணவு, வாழுமிடம், சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் மனோநிலை ஆகியவற்றைப் பொறுத்து அமைவது. உணவுப்பொருள்களை விதைத்து விளைவிப்பது முதல், உணவாகப் பாகம் செய்து உண்பது வரை, அனைத்தும் இப்போது ரசாயனமயமாகிவிட்டது. இதனை உண்ணும் நம்முள்ளும் ரசாயனம் படிவதால், உடலியக்க ஒழுங்கியல் கெட்டு, பல சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இயற்கையை உரமாக்கி, சில உயிரினங்களைப் பூச்சிகொல்லியாகப் பயன்படுத்தி, இயற்கை வழியில் விளைச்சலெடுக்க தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு ஒரு புரட்சியாகப் பரவ வேண்டியது கட்டாயம். விளைநிலத்தின் உயிர்ச்சூழலைப் பாதுகாப்பது நம் தலையாய கடமை.
முன்பெல்லாம் ஆற்று வெள்ளத்தை மேலிருந்து நோக்கின் தண்ணீரில் ஓடும் மீன்களையும், சிதறிய கற்களையும், படிந்த மணலையும் கூட காண முடிந்தது. அவ்வாறிருந்த தெளிநீர் இன்று குழம்பாக, விஷமாக, கலங்கலாக மாறியதுதான் சோதனை. கழிவுகள் எல்லாம் ஒருசேர சங்கமித்து ஒழுகும் ஆற்றுநீரைப் பருகுவதால் காலரா, சீதபேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு என்று பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்ற அவல நிலை. கொதிக்க வைத்த நீரை மட்டுமே பருக வேண்டுமென்கிற உறுதி அனைவருக்கும் வர வேண்டும். குடிநீர் மாசடைந்ததற்கு நாமே காரணம். சுகாதாரமற்ற இடங்களில் உணவருந்தலும், நீரருந்தலும் தவிர்த்தல் முக்கியம்.
சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி பெற வேண்டின் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். அரிசி, கோதுமை இவற்றுடன் பிற தானியங்களையும், பருப்பு-பயறு வகைகளையும் பயன்படுத்த வேண்டும். நல்ல சாதம், பருப்புக் குழம்பு, காய்கறிப் பொரியல், கீரை, ரசம், மோர் இவற்றை உள்ளடக்கிய உணவை விட உடல் நலம் பேணும் சரிவிகித உணவு வேறு இருக்க முடியுமா? பழ வகைகளை விரும்புவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். மருத்துவம் பரிந்துரைக்குமளவு தண்ணீர் பருகிட வேண்டும். எல்லாம் செய்யின் அபாரமான நோய் எதிர்ப்புச் சக்தி நிச்சயம்.
சுவாசிக்கும் காற்று இன்று அனேகமாக மாசடைந்துவிட்டது. பெருகி வரும் வாகனங்களின் புகை, தொழிற்சாலைகள் மேல் நோக்கி விடும் கழிவுகள், மக்கள் தொகைப் பெருக்கம், பொது சுகாதாரச் சீர்கேட்டால் எண்ணற்ற நோய்க்கிருமிகள் என்று நீண்ட பட்டியலாக காற்று மண்டலத்தில் நோய் விளைவிக்கும் அசுர சக்திகள் ஏராளம். நலன் பல விளைவிக்கும் ஓசோன் மண்டலமும், நன்னிலை கெட்டு தோல் புற்றினைக் கூட தோற்றுவிக்கும் அபாயம்! மக்கள் அனைவரும் சமுதாய நலனில் கட்டாயமாக அக்கறைகாட்டின் நல்ல உணவும், நல்ல குடிநீரும், செம்மையான சூழ்நிலையும் கிடைக்கும். பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தடுக்கவும், எச்சிலைத் துப்புவதைத் தவிர்க்கவும் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுக் கழிவுகளிலிருந்து தொடங்கி மருத்துவமனைக் கழிவுகள் ஈறாக, அனைத்தையும் தொல்லையில்லாமல் வெளியேற்ற, சாக்கடை வசதிகளைச் சீராக ஏற்படுத்த வேண்டும். இதனால் மலேரியா, யானைக்கால் முதலான நோய்களை விரட்டலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிட இன்று சித்த மருத்துவத்தில் வருகின்ற மருந்துகள் ஏராளம். சித்த மருத்துவம் சொல்லும் காயகற்ப மருந்துகள் இவ்வகையறாவைச் சார்ந்தவையே. இவை நாள்பட்ட நோயைக் கூட நீக்க வல்லவை. காயகற்பம் எனும் சொல் நரை, திரை, மூப்பு, பிணி அகற்றி உடலை அழியாது பாதுகாக்கும் முறை என்ற பொருள் உடையதாகும். வயோதிகத்தின் காரணமாக விளையும் மாற்றங்களால், உடலில் காணும் தொந்தரவுகளுக்குக் கூட காயகற்ப மருந்துகள் ஒரு பாதுகாப்பே. சித்தர்கள் ஒவ்வொருவரும் ஏராளமான கற்பமூலிகைகள் குறித்து எழுதிச் சென்றனர். குறிப்பாக திருமூலர், கற்ப மூலிகைகளை 108 என வகைப்படுத்தி இருக்கிறார். சில உதாரணங்கள்: கீழாநெல்லி, வல்லாரை, நெல்லிக்காய், கற்றாழை, சீந்தில், வில்வம், கோரைக்கிழங்கு, பொன்னாங்கண்ணி, வேம்பு, அமுக்கரா, கடுக்காய், இஞ்சி, சுக்கு, எலுமிச்சை, தூதுவளை, துளசி, மிளகு, சீரகம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். குழந்தைகளுக்குத் தடுப்பூசி இட்டுக் கொள்ளல் அவசியம். அத்துடன் சித்த மருத்துவம் சொல்லும் உரைமாத்திரைகளையும் பயன்படுத்தலாமே!
உலகளவில் இன்று நாள்பட்ட நோய்களுக்கும், அழிவு நோய்களுக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட்ஸ் மருந்தைச் சேர்த்து வழங்குவதென்பது புதிய பாணி. சித்த மருத்துவம் நிறைய ஆன்டி - ஆக்ஸிடன்டுகளை என்றோ வழங்கி விட்டது. நெல்லிக்காய், திராட்சை விதை, சீந்தில், அமுக்கரா, கடற்பாசி போன்றவை அறிவியல்பூர்வமாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
நாம் எப்பொழுதுமே மருத்துவர் சொல்படி, வயது - உயரம் இவற்றுக்குத் தக்கவாறு உடல் எடையைப் பராமரித்தல் அவசியம். இதன் மூலம் மூட்டுவாதம், சர்க்கரை வியாதி, இருதயத் தடை, சிறுநீரகக் கோளாறு, ஹார்மோன் பிரச்சினைகள், ஸ்ட்ரோக் முதலியவற்றை இலகுவாகத் தடுத்திடலாம். உடல் எடை கூடின் உடற்பயிற்சி தேவை. எண்ணெய் மற்றும் கொழுப்புப் பதார்த்தங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். இடையிடையே அளவில்லாமல் தின்பண்டங்களை நொறுக்கித் தள்ளுவது என்றுமே ஆபத்துதான்.
பதற்றம், உளைச்சல், அமுக்கம் அனைத்துமே மனம் சார்ந்து வருதலால், இதன் தொடர்பு நோய்களான சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், குடற்புண், மாதவிடாய்க் கோளாறுகள், ஞாபக மறதி, ஆஸ்துமா போன்றவை தாராளமாகின்றன. டேக் இட் ஈஸி பாலிஸி' கைகூடவில்லையெனில் யோகமும், தியானமும், பிராணாயாமமும் நிச்சயம் கைகொடுக்கும்; மருந்தாக அமையும்.
அடுத்ததாக தனிநபர் ஒழுக்கம் அதிமுக்கியம். புகைபிடித்தலும், மது அருந்துதலும், புகையிலையை எவ்வுருவிலேனும் உட்கொள்ளலும், பிற மாதர் நாடலும் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும். உள்ளுறுப்புக் கோளாறுகள், புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றை இதன் மூலம் எளிதில் வெல்லலாம்.
அகத்தூய்மையை வாய்மையாலும், புறத்தூய்மையைத் தினமிருமுறை குளியலாலும் பல்துலக்கலாலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற அழகூட்டும் பூச்சுகள், நறுமணப்பொருள்கள், வாசனைத் திரவியங்களை விலக்குவோம். அவை தோலையும், சுவாச உறுப்புகளையும் பாதிக்கும். இயற்கை அழகை மட்டும் மனமார ஊக்குவிப்போம். பிரித்தறிந்து தரம் பார்க்கத் தெரியாமல் விளம்பரத்தில் சொல்லும் அனைத்துப் பொருள்களையும் உபயோகித்துப் பார்க்கும் விளையாட்டு என்றுமே வினையில் போய் முடியும்.
இறுதியாக, உடலில் சிறு தொந்தரவு ஏற்படினும் மருத்துவரை நாடல் அவசியம்; சுயமருத்துவம் அறவே கூடாது. தாமாகவே மருந்தகங்களில் மருந்து வாங்கிச் சாப்பிடுவதும் தவறே. உடலில் புதிதாக எது தோன்றினாலும், மச்சம் பெரிதானாலும், புது மச்சம் உருவானாலும், கட்டி தோன்றினாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறல் கட்டாயம். அவை புற்றுநோயாகவும் இருக்கலாம். உடல்நலனைப் பொறுத்தவரை எச்சரிக்கை கலந்த கண்ணோட்டம் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டால் வாழ்நாள் முழுமையும் இனிமையே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்நாள் முழுமையும் இனிமையே - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - வேண்டும், இன்று, நல்ல, சித்த, நோய், மருத்துவம், உடலில், அவசியம், இதன், சொல்லும், உடல், கழிவுகள், எதிர்ப்புச், மருந்துகள்