முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » பொதுவான கட்டுரைகள் » கதிரியக்க முறையில் உணவுப் பதனம்
பொதுவான கட்டுரைகள் - கதிரியக்க முறையில் உணவுப் பதனம்
- ஏ.கே. சர்மா
நாட்டில் அறுவடைக்குப் பின்னர் பூச்சி, கிருமி, இயற்கையின் மாற்றங்கள் போன்றவற்றால் வேளாண் பொருள்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வேளாண் உற்பத்தியில் 20 முதல் 50 சதவிகிதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குளிர்பதன வசதி, காய வைத்தல், புகை போடுதல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த இழப்பைத் தடுக்கலாம். இவை மட்டுமன்றி, உணவு - வேளாண் பொருள்களின் இழப்பைக் குறைப்பதற்கு கதிரியக்க முறை பெரிதும் உதவியாக இருக்கிறது.
கதிரியக்கத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றைச் சிறந்த முறையில் பாதுகாக்க முடியும். சர்வதேச அளவில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளைச் சமாளிப்பதற்கும் கதிரியக்கப் பதனத் தொழில் நுட்பம் நன்கு பயன்படுகிறது. உதிரிப்பூக்கள், கால்நடை உணவு வகைகள், மீன் உணவு, ஆயுர்வேத மூலிகைகள், மருந்துகள், சிப்பமிடும் பொருள்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கும் கதிரியக்க முறையைப் பயன்படுத்தலாம்.
கடந்த நாற்பதாண்டு காலமாக, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளின் பயனாக, இக் கதிரியக்கப் பதன முறை உருவாக்கப்பட்டுள்ளது. காமா கதிர்கள், ஊடுகதிர்கள், முடுக்கிவிடப்பட்ட எலக்ட்ரான்கள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படும் சக்தியாக இக்கதிரியக்கப் பதனமுறை திகழ்கிறது. உலக சுகாதார அமைப்பு, உணவு - வேளாண் அமைப்பு போன்ற பல பன்னாட்டு அமைப்புகள் இந்த கதிரியக்கப் பதன முறைக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. 40-க்கும் மேற்பட்ட நாடுகள் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகளுக்கு கதிரியக்கப் பதன முறையைப் பயன்படுத்துகின்றன. நமது நாட்டில் கதிரியக்கப் பதன முறைக்கு 1994-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு கதிரியக்கப் பதன முறையைக் கையாள சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரகமும் இசைவு தந்துள்ளது. அணுசக்திக் கட்டுப்பாடு வாரியம், உள்ளூர் உணவு - மருந்துகள் நிர்வாகம் ஆகியவையும் இதில் இணைந்து செயல்படுகின்றன.
மும்பை நகரிலுள்ள வாஷி பகுதியிலும், நாசிக் அருகே உள்ள லசால்கான் பகுதியிலுமாக இரண்டு தொழில்நுட்பச் செயல்முறை விளக்க மையங்கள் இதற்கென உருவாக்கப்பட்டுள்ளன. 40 டன் எடை கொண்ட நறுமணப் பொருள்கள், உலர்ந்த காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், உதிரிப்பூக்கள் ஆகியவை இந்த மையங்களில் பதனப்படுத்தப்பட்டு, பாதுகாத்துத் தரப்படுகின்றன.
கதிரியக்கப் பதனமுறையால் ஏற்பட்டுள்ள வெற்றியைக் கண்டு தனியார் தொழில் முனைவோரும், கூட்டுறவுத் துறையினரும் இதனை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளனர். வாஷியில் பதனப்படுத்தப்படும் நறுமணப் பொருள்களை மும்பையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்னபூர்ணா மகிளா மண்டல் என்ற மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. உணவு - வேளாண் பொருள்களின் கொள்முதல், கிடங்குவசதி, பங்கீடு, விற்பனை போன்ற தேசிய நடவடிக்கைகளுக்கு ஏதுவாக, கதிரியக்கப் பதன நுட்பத்தை ஒருங்கிணைப்பது மிகவும் அவசியமாகிறது. தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத் துறைகளும் கதிரியக்கப் பதன மையங்களை நிறுவிட முன்வரவேண்டும்.
வேளாண் உற்பத்தியிலிருந்து வருவாயை அதிகரிக்கவும் இந்திய வேளாண் பொருள்கள் பன்னாட்டுச் சந்தைகளில் நல்ல முறையில் விற்பனையாகவும் கதிரியக்கப் பதன முறை நிச்சயம் உதவும். ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்கள், வாரியங்கள், உணவுப் பதனத் தொழிற்சாலைகள், விவசாயிகள், வியாபாரிகள், வேளாண் பொருள் ஏற்றுமதியாளர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் கதிரியக்கப் பதன முறைகளால் சிறந்த பயனை அடைய முடியும். எனவே தனியார் தொழில் முனைவோரும் வர்த்தக ரீதியாக இந்த அணுசார் நுட்பத்தைப் பரிசோதித்துப் பாக்க முன்வரவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளவும் விரிவுபடுத்தவும் ஏதுவாக, சட்ட திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வேளாண் தோட்டக்கலைப் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுக்கும் வகை செய்யும் விதத்தில், தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.
(கட்டுரையாளர், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய உணவுப்பதன நுட்பப் பிரிவுத் தலைவர்.)
தேடல் தொடர்பான தகவல்கள்:
கதிரியக்க முறையில் உணவுப் பதனம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - கதிரியக்கப், வேளாண், உணவு, பொருள்கள், தொழில், தனியார், மேற்பட்ட, முறை, வகைகள்